Friday 10 October, 2008

அருணகிரியின் திண்ணைக்கட்டுரை Part- 5

Thursday October 9, 2008
மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 5
அருணகிரி

"In pursuit of their manic dream Nazis, communists, Maoists, followers of Pol Pot, have slaughtered hundreds of millions, half of them their own kith and kin, for not being extreme enough. Think of Stalin and Mao's purges- all fellow communists, but butchered for being backsliders."
- From 'The Afgan" by Frederick Forsyth

மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பின் விளைவுகள்

1. கார்ட்டர் கொள்கை

மசூதி ஆக்கிரமிப்பும் அதனைத் தொடர்ந்த அமெரிக்க தூதரகங்களின் மீதான தாக்குதல்களும் மத்திய கிழக்கில் உருவாகியிருந்த அமெரிக்க எதிர்ப்பு அலையை அமெரிக்க கார்ட்டர் அரசுக்கு துல்லியமாகக் காட்டின. இந்த விஷயத்தில் கார்ட்டர் அரசின் பலவீனமான எதிர்வினை பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. பனிப்போர் உச்சத்தில் இருந்த அந்த நாட்களில், மத்திய கிழக்கில் அமெரிக்க நட்பு நாடுகளான ஜோர்டான், சவுதி ஆகியவற்றின் அரசாங்கங்களுக்கு அமெரிக்க அரசின் உறுதியற்ற நிலைப்பாடு மிகப்பெரும் கேடாக முடியும் என்று எடுத்துக்காட்டப்பட்டது. மத்திய கிழக்கில் எழுந்துள்ள அமெரிக்க எதிர்ப்பு அலையை சோவியத் உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று கண்டு கொண்ட கார்ட்டர் அரசு -இன்றும் அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் முக்கிய அம்சமாகக் கருதப்படும்- "கார்ட்டர் கொள்கை"யை 1980 ஜனவரியில் பிரகடனப்படுத்தியது. பெர்ஷிய வளைகுடாப்பகுதியை முக்கியப்பிரதேசமாக அடையாளம் கண்ட இக்கொள்கை இந்தப் பிரதேசங்களின் மீதான எவ்வகைத் தாக்குதலும் அமெரிக்காவின் முக்கிய முதலீட்டுப் பிரதேசங்களின் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு, அத்தகைய தாக்குதல்கள் எந்த வழிமுறையின் மூலமாக வேண்டுமானாலும் - தேவைப்பட்டால் அமெரிக்க ராணுவத்தின் மூலம் கூட- முறியடிக்கப்படும் என்று அறிவித்தது.

பதினோரு வருடங்களுக்குப்பின் இந்த கொள்கையின் அடிப்படையில் சதாமின் ஆக்கிரமிப்பை முறியடிக்க குவைத்துக்கு ஆதரவாக அன்றைய அதிபர் புஷ் சதாமின் அரசு மீது போர் தொடுத்தார். பேரழிவு ஆயுதங்களை சதாம் குவிப்பதாகச் சொன்ன இன்றைய புஷ் அரசும் ஈராக்கின் மீதான அமெரிக்கப் படையெடுப்பை டெமக்ரடிக் அரசின் "கார்ட்டர் கொள்கை" மூலம் நியாயப்படுத்தியது. கார்ட்டர் கொள்கையின் அறிவிப்பைத் தொடர்ந்து அன்றைய கார்ட்டர் அரசு ஓமான் மற்றும் சவுதி மன்னர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது; அதன் அடிப்படையில் அந்நாடுகளில் அமெரிக்கப்படைகளின் அளவு பெரும் அளவில் அதிகரிக்கப்பட்டது. இஸ்லாத்தின் புனித நிலங்கள் அந்நியரால் களங்கப்படுவதாக ஏற்கனவே சொல்லிக்கொண்டிருந்த அடிப்படைவாத ஜிஹாதிகளை இது மேலும் உசுப்பி விட்டது.

2. சோவியத் சிதைவு

இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றைப்புரட்டிய முக்கிய நிகழ்வான கம்யுனிஸ சோவியத்தின் வீழ்ச்சிக்கு மெக்கா மசூதி ஆக்கிரமிப்பும் அதனைத்தொடர்ந்த சம்பவங்களும் முக்கியக் காரணமாய் அமைந்தன. சவுதியைக் காக்க கார்ட்டர் அரசு போர்க்கப்பலை அனுப்பியதை உன்னிப்பாகக் கவனித்த சோவியத் அரசு, ஆப்கானிஸ்தான் விஷயத்தில் அதே அணுகுமுறையைச் செயலாக்கியது. இந்தியப்பெருங்கடலில் தனது ஆதிக்கத்தைக் கொண்டு வருவது சோவியத்தின் தொலைகாலத் திட்டமாக இருந்தது. ரஷ்யாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையே நடைபெற்ற பல காலனீய காலப் போர்கள் ஆப்கானிஸ்தானின் மீதான ஆதிக்கத்தையும் அதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் தத்தம் மேலாண்மையை நிலைநாட்டுவதையும் அடிப்படையாகக் கொண்டவையே. மட்டுமன்றி இந்தியப்பெருங்கடலில் உள்ள டியகோ கார்ஷியா தீவில் அமெரிக்கா கடற்படைத்தளம் வேறு அமைத்திருந்தது. இவற்றைக்கண்ட சோவியத் ரஷ்யா , நேரடியாக இந்தியப்பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்துவதே அதன் கடல் வழிப்பாதைகளை தன் கட்டுக்குள் கொண்டு வர சரியான வழி என்று முடிவெடுத்தது;

இதனைச் செயல்படுத்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய பிரதேசங்களைத் "தாண்ட" வேண்டும். ஆனால், ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே சோவியத்தின் பொம்மை அரசாங்கம் இயங்கி வந்தது. இந்த அரசு உள்நாட்டுப்போரை சமாளிக்க சோவியத் ராணுவத்தின் உதவியைப் பலமுறை கோரி வந்தது. இந்நிலையில், மெக்கா மசூதி விஷயத்தில் பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் கொளுத்தப்பட்டதையும் பாகிஸ்தானியரின் கடுமையான அமெரிக்க எதிர்ப்பையும் கண்ட சோவியத் ரஷ்யா, அதனை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்திக்கொண்டு விட முடியும் என்று கணக்குப்போட்டது. மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு முடிந்த ஒரு மாதத்திற்குள் டிசம்பர் 25, 1979-இல் ஆஃப்கனுக்குள் சோவியத் படை நுழைந்தது. 9 ஆண்டுகள் தொடர்ந்த இந்த ஆப்கன் போரில் சோவியத்தின் செல்வங்கள் கரைந்து பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அமெரிக்கா-சவுதி-பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஆப்கானிஸ்தானில் ஒருசேர நடத்திய மறைமுகப்போரைச் சமாளிக்க முடியாமல், சோவியத் தன் ராணுவத்தளவாடங்கள் பலவற்றை இழந்தது. ஆப்கன் போர் சோவியத்தின் வியட்நாம் போராகிப் போனது. இந்தப் போரின் முடிவில் சோவியத் யூனியன் என்ற செயற்கையான கட்டமைப்பின் அரசியல் பலவீனங்கள் பலவும் வெளிச்சத்திற்கு வந்தன. ஆப்கன் போரில் விளைந்த பொருளாதார சரிவைத் தாங்க இயலாமல் 1991-இல் சோவியத் யூனியன் உடைந்து பல நாடுகளாகச் சிதறியது. கம்யூனிஸக் களிமண்ணால் எழுப்பப்பட்ட சோவியத் கோட்டை அறுபத்தொன்பதே ஆண்டுகளில், தொடர்ந்ததொரு ஆதிக்கப் போர்மழையில் சரிந்து சிதறிக் கரைந்து போனது.

ஜிஹாதி உற்பத்திக்கூடம்

அதே சமயம், ஆப்கானிஸ்தானின் மீதான சோவியத்தின் ஆக்கிரமிப்பு, 'இஸ்லாமிய உலகின் காவலாளி' என்று தன்னை நிறுவ சவுதி அரசுக்கு அருமையான சந்தர்ப்பமாக அமைந்தது. வஹாபிய மூளைச்சலவையை வலுப்படுத்தவும் உலகளாவிய உம்மாவை நிறுவவும், தேச எல்லைகள் தாண்டி ஜிஹாதி கொலையாளிகளை உருவாக்கவும் சவுதி அரசு இந்தப்போரை உபயோகப்படுத்திக்கொண்டது. முல்லா பின்-பாஜ் ஆஃப்கானிஸ்தான் போரில் இறங்குவது தேச எல்லைகளுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு முஸ்லீமின் கடமை என்று ஃபாத்வா அறிவித்தார். இதனைத் தொடர்ந்து உலகத்தின் பல இஸ்லாமிய பகுதிளிலிருந்தும் ஆப்கானியப்போருக்காக ஜிஹாதிகள் சவுதி அரேபியாவின் மதராஸாக்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அடிப்படைவாத வஹாபியக்கல்வியும், ஆயுதப்பயிற்சியும் அளிக்கப்பட்டன. சகாய விலையில் சுவனக்கனவில் தற்கொலைப்படை ஒன்று தயார் செய்யப்பட்டது.

காஷ்மீர் கோரம்

கார்ட்டருக்குப்பின் வந்த ரீகன் அரசு சோவியத்துக்கு எதிரான நிழற்போராக ஆப்கன் போரை எடுத்துக் கொண்டு, பெருமளவில் நிதி உதவி செய்ய, அந்த நிதியை ஆப்கானியப் போராளிகளுக்கு விநியோகிக்கும் பொறுப்பு பாகிஸ்தானின் ஜியா-உல்-ஹக் அரசிடம் விடப்பட்டது. பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகளும் ஐ-எஸ்-ஐயும் இதில் பெருமளவு பணம் சுருட்டினர். அவ்வாறு கொட்டிய அமெரிக்கப் பணம் ஐ-எஸ்-ஐ வழியாக காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கும் புசிந்தது. நேரடிப்போரில் இந்தியாவை வெல்ல முடியாது என்று உணர்ந்து, பல வெட்டுகளால் இந்தியாவை ரத்தமிழக்கச்செய்ய முடிவு செய்த ஜியா-உல்-ஹக் பிரிவினைக்குழுக்களின் மூலம் காஷ்மீரில் ஒரு பயங்கரவாதப்போரை தொடங்கி வைத்தார்.

வன்முறை பயங்கரவாதம், கருத்தியல் பிரசாரம் என இரண்டு முனைகளில் இந்தப்போரை நடத்த முடிவுசெய்யப்பட்டது. காஷ்மீரில் இஸ்லாமியப் படைகொண்டு பயங்கரவாதப்போர் நிகழ்த்திய அதே நேரத்தில் இந்திய ஊடகங்களிலும் மேற்கு ஊடகங்களிலும் இருந்த இஸ்லாமிய நட்பு சக்திகளை முன்னிறுத்தி இந்திய அரசு அடக்குமுறை அரசு; காஷ்மீர் மக்கள் இந்தியாவிலிருந்து பிரிவதையே விரும்புகிறார்கள் என்று பிரசாரம் செய்வது என இருமுனைகளில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஜக்மோஹன் போன்ற வலிமையான ஆளுனர்கள் கடுமையான நடவடிக்கைகள் மூலம் அமைதியைக் கொண்டு வர முயன்றாலும், ஊடகம் மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கு வளைந்து கொடுத்த அன்றைய விபி.சிங் அரசு உடனடியாக அவரை இடம் மாற்றி, பலவீனமான மாநிலத்தலைமையை நியமித்தது; இது பாகிஸ்தானின் காஷ்மீர் திட்டத்திற்கு மிகவும் வசதியாகிப்போனது (4).

ஆப்கன் போருக்கு அமெரிக்கா அனுப்பி வைத்த நவீன ஆயுதங்களில் 30 சதவீதம் வரை இந்தியாவின் காஷ்மீர்ப் போருக்கு ஐ-எஸ்-ஐ-ஆல் திருப்பி விடப்பட்டது. சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக காஷ்மீர் இந்துக்கள் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஃபரூக் அப்துல்லாவின் வெளிப்படையான இந்திய எதிர்ப்பு நிலையும், ஜிஹாதி ஆதரவு நிலையும் இதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தந்தது. ஃபரூக் அப்துல்லாவின் அரசு காஷ்மீரை முஸ்லீம் மெஜாரிட்டி பிரதேசமாக மாற்றத் தீர்மானித்ததை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டது. பயங்கரவாதப்பயிற்சிக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ட்ரக்குகளில் காஷ்மீர் முஸ்லீம்கள் வெகு சாதாரணமாகப் பயணித்துத் திரும்பினர். காஷ்மீர் மாநில அரசு கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்க, இந்திய ராணுவ இருப்புகள் சக்தி வாய்ந்த குண்டுகள் மூலம் தாக்கப்பட்டன. பல காஷ்மீரி இந்துக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இஸ்லாமிய பயங்கரவாதிக்கு தண்டனை வழங்கிய நீதிபதி நீல காந்த் காஞ்ச் பொதுவீதியில் படுகொலை செய்யப்பட்டார்.

இதன் உச்சகட்டமாக 1990- ஜனவரி மாதம் காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஹிந்துக்கள் அனைவரும் காஷ்மீர் மண்ணிலிருந்து வெளியேற வேண்டும் என்று மசூதிகள் அனைத்திலிருந்தும் வெளிப்படையான மிரட்டல் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது. 80 வயது முதிய கவி பண்டிட் சர்வானந்த் ப்ரேமியும் அவர் மகனும் கண்கள் தோண்டப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். காஷ்மீர் பண்டிட் பெண்மணி கடத்திக் கற்பழித்துக் கொல்லப்பட்டு அவரது உடல், இயந்திரம் மூலம் சிறு துண்டுகளாக வெட்டி வீசப்பட்டது. தொடர்ந்த ஜிஹாதி வன்முறையில் ஆண்களும் பெண்களுமாக 300 காஷ்மீர் இந்துக்கள் வெட்டிக்கொல்லப்பட்டனர். அரசு இயந்திரம் அமைதியாய் இந்த அநியாயத்தைப் பார்த்துக்கொண்டிருக்க, மூன்று லட்சம் இந்துக்கள் 5000 வருடங்களாக தாங்கள் வாழ்ந்து வந்த சொந்த மண்ணையும், தொழிலையும் இழந்து, தங்கள் உயிரையும் மானத்தையும் வழிபாட்டு உரிமையையும் பாரம்பரியத்தையும் காத்துக்கொள்ள வேண்டி காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு அகதிகளாய் வெளியேறினர். இவர்களில் பெரும்பாலோர் இன்றுவரை காஷ்மீர் திரும்ப முடியாமல் கூடாரங்களில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

வஹாபியப் பிடியில் தென்கிழக்காசியா

மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு, அதைத் தொடர்ந்த ஆப்கன் போர் ஆகியவற்றிற்குப்பிறகு வஹாபிய இஸ்லாமிய அடிப்படைவாதக் கல்வியை உலகெங்கும் பரப்புவது சவுதியின் முக்கியப்பணியாகி விட்டது. மெக்கா ஆக்கிரமிப்புக்குப்பின் மலேசியா, இந்தோனேசியா போன்ற மிதவாத தெற்காசிய இஸ்லாமிய நாடுகளில் இருந்து மதக்கல்விக்காக மவுல்விக்கள் சவுதிக்கு கூட்டி வரப்பட்டனர். இவர்களுக்கு வஹாபிய அடிப்படைவாதத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. மலேஷியாவும் இந்தோனேஷியாவும் மெல்ல மெல்ல கடும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நோக்கி ஜிஹாதிப்பாதையில் சரியத்தொடங்கியது. வஹாபிய ஜிஹாத்தின் எதிரொலி இந்தோனேஷியாவில் பாலி தீவுகளின் குண்டு வெடிப்பில் கேட்டது. புராதான இந்துக்கோவில்கள் குறி வைத்து இடிக்கப்படுவதிலும், இந்துக்களின் பண்பாட்டு அழிப்பிலும் மலேஷியாவில் இது இன்றும் தொடர்கிறது.
ஜுஹைமானின் மசூதி ஆக்கிரமிப்பு இல்லாவிட்டால் கூட மேற்சொன்ன விளைவுகளில் பெரும்பாலானவை நடந்தேறியிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் வஹாபிய அடிப்படைவாத வெறுப்பியலானது, வாழவும் வளரவும் தொடர்ந்து அதற்கு எதிரிகள் தேவையாக இருக்கிறது. மதவாதத்தின்மூலம் தன் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளும் சவுதி அரேபியா போன்ற அரசுகள் இருக்கும்வரை, இத்தகைய ஜிஹாதிகளின் உருவாக்கமும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனாலும், மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு, மேற்சொன்ன விளைவுகளை நோக்கி சம்பவங்களுக்கு உந்தம் தந்து விரைவுபடுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.

அல்-க்வைதாவின் அசுர வளர்ச்சி

அமெரிக்க சிஐஏவுடன் சேர்ந்து ஆப்கானியப் போருக்கான ஆள்சேர்ப்பை மேற்பார்வையிட்டவர் சவுதி இளவரசர் டர்க்கி என்பவர். இந்தப்பணிக்காக ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் அடிக்கடி அவர் பறந்தபோது அவருடன் தோளோடு தோள் நின்று அன்று பணியாற்றிய 22 வயது இளைஞனின் பெயர் ஒஸாமா பின் லாடன். ஆப்கானிஸ்தானத்திலிருந்து சோவியத் வெளியேறியதைத் தொடர்ந்து வஹாபிய தாலிபான்களின் ஆட்சி அங்கே நிறுவப்பட்டு சவுதியின் வஹாபிய சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. ஆனால் அதே சமயம் போதை மருந்து உற்பத்தி மூலம் அமோகமாய்ப் பணம் சேர்க்கப்பட்டது. இது போன்ற வீழ்ந்த அரசாங்கங்களின் வெற்றுக்கூடாய்க் கிடக்கும் ஏழை நாடுகள் பயங்கரவாத இயக்கங்களுக்கு மிகப்பெரியதொரு வரப்பிரசாதம். ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இருந்து கொண்டு ஒஸாமாவின் தலைமையில் அல்-க்வைதா அமோகமாக வளர்ந்தது. முந்தைய நண்பர்களான சவுதியும் அமெரிக்காவும் இன்றைய எதிரிகளாயினர். வஹாபிய ஜிஹாதுக்கு புதியதொரு இலக்கு கிடைத்து விட்டது. தாலிபானால் பாதுகாக்கப்பட்ட அல்-க்வைதா தலைமை, செப்டம்பர் 11-இல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்தது. தீனிபோட்ட அமெரிக்காவையே தீண்டியது ஜிஹாதிப்போர். பின்னர் அமெரிக்கப்படைகள் தாலிபானின் ஆப்கானிஸ்தானை சின்னாபின்னமாக்கி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது என்றாலும், இன்றுவரை ஆப்கானிஸ்தான் மதவாதிகளின் கொடூரப்பிடியினாலும் தொடரும் குண்டு வெடிப்புகளாலும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. இப்போது பாகிஸ்தானே அல்-க்வைதா பயங்கரவாதத்தின் இலக்காகியும் இருக்கிறது. மதவாத வெறுப்பியல் என்ற காட்டுத்தீ குளிர்காய வந்தவர்களையும் கருக்கிப்போட்டு விட்டது.
ஜுஹைமானைப்பிடித்த சவுதி பாதுகாப்பு அதிகாரி அபு சுல்தான், இன்றுள்ள எல்லா பயங்கரவாதிகளும் ஜுஹைமானின் மிச்சங்களே என்கிறார். அவர் சொல்லாமல் விட்டது, அந்த மிச்சங்கள் எல்லாம் வளர்வது சவுதி அரசு போட்டுக்கொண்டிருக்கும் மதவாதத் தீனியால் என்பதை.

தீர்வுக்கு ஒரு வழி

அமெரிக்காவோ இன்றும் பல இஸ்லாமிய மத அடிப்படைவாத அரசுகளுக்கு முட்டுக்கொடுத்து வருகிறது. சுன்னி வஹாபிய அடிப்படைவாதம் உலகில் இன்று பெரும் பயங்கரவாத சவாலாக உருவாகி வரும் நிலையில், அமெரிக்காவோ எண்ணெய்க்காக ஜனநாயகமற்ற சுன்னி இஸ்லாமிய மன்னராட்சி நாடுகளோடு நட்பு பாராட்டி வருகிறது. அன்று போலவே இன்றும் சமூக அளவில் மத இறுக்கம் குறைந்த ஈரான் எதிரியாகப் பார்க்கப்படுகிறது. ஆனாலும் இஸ்லாமிய அடிப்படைவாத அரசுகளுக்கு முட்டுக்கொடுப்பது தனக்கு எதிராகவே திரும்பும் என்பதை 9/11 அமெரிக்காவை உலுக்கி உணர்த்தியது. விளைவாக மாற்று எரிபொருள் நோக்கி பல முனைப்புகள் இன்று மேற்கொள்ளப்படுகின்றன. இவை அமெரிக்காவின் மத்திய கிழக்கு மீதான எண்ணெய்சார்பைக் குறைக்கலாம். ஆனால் இது மட்டுமே முழுமையான தீர்வாகி விடாது. அமெரிக்கா விலகினால் எண்ணெய் வள இஸ்லாமிய நாடுகளுக்கு, ஜனநாயகம், மனித உரிமை ஆகியவை பற்றியெல்லாம் கொள்கை அளவில் கூட கவலைப்படாமல் நட்பு பாராட்ட ரஷ்யாவும் சீனாவும் தயாராக இருக்கின்றன.
ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதம் அமெரிக்காவை மட்டுமல்ல, ரஷயாவையும் (செசியா), சீனாவையும் (உய்கூர்) கூட கவலை கொள்ளச்செய்யும் விஷயம்தான். எனவே சவுதி அரேபியா தனது வஹாபிய இறுக்கத்திலிருந்து விடுபடுவதே இதற்கு நீண்ட காலத்தீர்வாக இருக்க முடியும். துருக்கிக்கிடைத்த முஸ்தபா கெமல் பாஷா போல சவுதிக்கும் ஒரு சீர்திருத்தவாதி கிடைக்க வேண்டும். 'மெக்கா, மெதீனா காப்பாளன்' என்ற சுமை இருக்கும் வரை சவுதி மன்னரே நினைத்தாலும் ஜனநாயக மாற்றங்களையோ நவீன கல்வியையோ பெண் விடுதலையையோ கொண்டு வந்து விட முடியாது. அவ்வாறு செய்தால் குரானுக்கு எதிரானது என்று சொல்லி சவுதியின் வஹாபி மதத்தலைமை பெரும் கலவரத்தைக் கிளப்பி அரசையே கவிழ்த்து விடக்கூடும். சவுதி அரசின் ஒரு சில ஜனநாயக முயற்சிகள் கூட மதவாதிகளால் முறியடிக்கப்பட்டன என்பதைப் பார்த்தோம்.

ஒரு வழி உள்ளது;

ஐரோப்பாவில் இது போன்ற சூழல் முன்பு இருந்தது. ஐரோப்பிய நாடுகள் எல்லாம் வட்டிகனின் சொல்படி கேட்டு ஆட வேண்டிய நிலை அப்போது இருந்தது. மதத்தலைமையும் அரசுக்கும் பிணக்கம் அதிகரித்த சூழலில் ஒரு கட்டத்தில் வட்டிகன் மட்டும் தனி ஆளுமைப்பகுதியாக போப்பின் தலைமையில் பிரித்து வைக்கப்பட்டது. இது மற்ற அரசாங்கங்கள் மதத்தினைத் தள்ளி வைத்து நவீனக்கல்வி பரப்பவும் மதச்சார்பற்ற அரசு நடத்தவும் உதவின. சவுதியிலும் இந்த அணுகுமுறை கைகொடுக்கலாம். மெக்கா மெதீனா ஆகிய இரு புனித நகரங்களை மட்டும் இஸ்லாமிய மதத்தலைமையின் கையில் ஒப்படைத்து விடுவது சவுதிப்பகுதி (குறிப்பாக எண்ணெய் வளம் நிறைந்த பகுதிகள்) நவீன யுகத்துக்கு விரைவில் வர உதவும். இவ்வாறு சவுதியில் ஏற்படும் முன்னேற்றம், சுற்றியுள்ள பல இஸ்லாமிய நாடுகளிலும் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தி ஜனநாயக மாறுதல்களைக் கொண்டு வரலாம். கிறித்துவ பிற்போக்குத்தனத்திலிருந்து இப்படித்தான் ஐரோப்பா படிப்படியாக விடுதலை பெற்றது. இது போன்ற ஒரு மாற்றம் ஏற்பட்டு மத்திய கிழக்கும், குறிப்பாக சவுதியும் மத அடிப்படைவாதம் என்ற மரணத்தழுவலில் இருந்து விடுபடாதவரை, இந்நாடுகளிலும் இவற்றால் பாதிக்கப்படும் பிற நாடுகளிலும் மத மோதல்களும் குண்டுச் சத்தங்களும் ஓயாது.

***************************

பின்குறிப்புகள்:

(1) காபாவின் புனிதக்கல் 10-ஆம் நூற்றண்டிலேயே ஒருமுறை திருடப்பட்டது. கர்மெஷியன் என்ற ஒரு அரேபிய இஸ்லாமிய குழு மெக்காவைக் கைப்பற்றி காபாவின் புனித கல்லைத் திருடிச்சென்றனர்; ஆனால் இதன் மூலம் புனித யாத்திரை வருமானம் தம் நகருக்கு வந்து விடும் என்ற் அவர்களது எண்ணம் பொய்த்துப்போக, 20 ஆண்டுகள் கழித்து மெக்காவிற்கே காபா கல்லைத் திருப்பி அளித்தனர்.

2). மாஹ்டி என்ற கருத்தாக்கம் இஸ்லாமிய இறையியலில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இஸ்லாமிய ஷியாக்களில் அதிகமாகவும் பிற பிரிவுகளில் பரவலாகவும் இது நம்பப்படுகிறது. மாஹ்டி என்பவர் பழைய ஏற்பாட்டின் மிலிட்டரி மெசையா போல, ஆனால் மீட்பர் கிடையாது. முகமது மாஹ்டி பற்றி கூறியுள்ளதாக பல இஸ்லாமியப்பிரிவுகள் சில ஹதித்துகளைச் சுட்டிக்காட்டி நம்புகின்றன. வஹாபிய சுன்னி இஸ்லாத்தைச்சார்ந்த ஜுஹைமானும் இதனை நம்பினான். இந்நம்பிக்கை வருமாறு:.

"களங்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தை தூய்மைப்படுத்தி உலகெங்கும் இஸ்லாத்தை நிறுவுவதற்காக அல்லா மனிதர்களால் 7 வருடங்களுக்கு அழிக்க முடியாத மாஹ்டியை அனுப்பி வைப்பார், இந்த மாஹ்டியின் ஆட்சியை கிறித்துவர்கள் எதிர்த்து பெரும்படையுடன் போருக்கு வருவார்கள் போரில் கிறித்துவ உலகம் அழிவைக் காணும். அந்த நேரத்தில் சைத்தானின் மகன் டஜல் (கிறித்துவின் எதிரி) ஒற்றைக்கண்ணனாக வெளிவருவான். அவனுடன் சேர்ந்து கொண்டு 70,000 யூதர்கள் போருக்கு வருவார்கள். இந்த்ப்படையை சமாளிக்க முடியாமல் இஸ்லாமிய மாஹ்டி டமாஸ்கஸுக்கு தப்பியோடி அங்கு இயேசு கிறித்துவின் வருகைக்காக பிரார்த்திப்பார் (இஸ்லாமிய இறையியலில் இயேசுவும் ஒரு நபியே- ஈசா நபி; ஆனால் கடவுளின் மைந்தன் கிடையாது). கிறித்துவின் மீள் வருகை அப்போது நிகழும். இயேசு கிறித்து சைத்தானின் மகனை இஸ்லாமியர்களிடம் இருந்து பெற்ற ஈட்டியால் குத்திக்கொல்வார். கிறித்துவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள். இந்தத் தீர்ப்பு நாளில் .யூதர்களும் முழுமையாக அழிக்கப்படுவார்கள். இந்த மாஹ்டி உயரமானவராக, நல்ல சிவந்த நிறத்துடன் , கன்னத்தில் பெரியதொரு மச்சமும் இருப்பவராகவும் இருப்பார். இவரது பெயர் முஹம்மது நபியின் பெயரையே தாங்கியிருக்கும்". இந்த அடையாளங்கள் அனைத்தும் ஹதித்தில் உள்ளபடியே முஹமது அப்துல்லாவிற்குப் பொருந்தி வந்தன.

3). எம்.ஐ.எம் அமைப்பின் அரசியல் வரலாறு, ஹைதராபாத் நிஜாம் காலத்தில் தொடங்குகிறது. ஆனால் அதன் வேர் வஹாபி இஸ்லாத்தில் உள்ளது. 'இந்து மத தாக்கங்களால் களங்கப்பட்ட இஸ்லாத்தை தூய்மைப்படுத்த வேண்டும்' என்று 19-ஆம் நூற்றாண்டில் புறப்பட்ட சயித் அஹமத் பரெல்வி என்ற இஸ்லாமிய அடிப்படைவாதியின் வஹாபியக் கருத்துகளால் கவரப்பட்டு உருவாக்கப்பட்ட அரசியல் இயக்கமே எம்.ஐ.எம் ஆகும். இந்திய பிரிவினையின்போது எம்-ஐ-எம் ஹைதராபாத் நிஜாமுக்கு ஆதரவாகப் பிரிவினை கோரியது. இந்தியாவை எதிர்த்து ஆயுதமேந்திய போராட்டம் என்ற பெயரில் ஹைதராமாத் நிஜாமுக்கு ஆதரவாக ரஜாக்கர்கள் என்ற முஸ்லீம் படை, கம்யூனிஸ்டுகள், ஆந்திர மஹாசபைக்காரர்களிலிருந்து ஒன்றுமறியா நாடோடி நரிக்குறவர்கள் வரை அனைவரையும் தாக்கியும், கொன்று போட்டும் பயங்கரவாதச் செயல் புரிந்து கொண்டிருந்தது. இந்த ரஜாக்கர்களின் அரசியல் கட்சிதான் எம்.ஐ.எம். ரஜாக்கர்களுக்கும் எம்-ஐ.எம்முக்கும் தலைவன் காசிம் ரிஸ்வி. ஹைதராபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதும் எம்.ஐ.எம் தடை செய்யப்பட்டு காசிம் ரிஸ்வி சிறை வைக்கப்பட்டான். 1957-இல் எம்-ஐ-எம் மீதான தடை நீக்கப்பட்டது. காசிம் ரஸ்வி பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டான். பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டு 1970களில் அரசியலில் மீண்டும் வளரத்தொடங்கிய எம்.ஐ.எம், 1979-இல் மக்கா மசூதி முற்றுகையைத்தொடர்ந்து நடந்த இந்துக்களுக்கெதிரான கலவரங்களில் முக்கியப் பங்கு வகித்தது. இந்துக்களுக்கெதிரான கொடுமையான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு இந்துக்களின் கடைகள் சூறையாடப்பட்டன. தொடர்ந்த கலவரத்தில் இருதரப்பிலும் பலர் உயிரிழந்தனர். ஆனால் ஹைதராபாத் முஸ்லீம்களுக்கிடையே எம்.ஐ.எம்மின் செல்வாக்கு பலமடங்கு அதிகரித்திருந்தது. அதன்பின் 1984 வரை ஒவ்வொரு வருடமும் வெடித்த மதக்கலவரம் எம்-ஐ.எம்முக்கு மென்மேலும் செல்வாக்கைத் தேடித்தர, 1984-இல் முதல் முறையாக ஹைதராபாத் தொகுதியை எம் ஐ எம் வென்றது. 1984-இல் இருந்து இன்று வரை ஹைதராபாத் லோக்சபா தொகுதி தொடர்ந்து எம்-ஐ.எம் கையிலேயே இருக்கிறது. 1993 வரை ஒவ்வொரு வருடமும் (என்.டி.ஆர் ஆண்ட 1986-89 தவிர) ஹைதராபாத்தில் சிறியதும் பெரியதுமாக இந்து-முஸ்லீம் கலவரங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. 1990-இல் நடந்த கலவரத்தில் 300 பேர் பலியாயினபோது ஹைதராபாத்தில் எம்-ஐ-எம்மின் செல்வாக்கு உச்சகட்டத்தை அடைந்திருந்தது. காங்கிரஸால் அன்று தடை செய்யப்பட்ட எம்-ஐ-எம் இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கூட்டாளி. எம்-ஐ.எம்மிற்கு இன்று ஆந்திர சட்ட சபையில் 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் மூன்று எம்.எல்.ஏக்கள் கடந்த வருடம் பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீனை ஹைதராபாத் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து நாற்காலிகளால் தாக்கினர்.

4. அரசியல் ஆதாயங்களுக்காக இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு வளைந்து கொடுக்கும் செயல் இன்றும் தொடர்கிறது. ஹைதராபாதின் இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிராக Octopus (Organisation for Counter Terrorist Operations) அமைப்பின் டைரக்டர் ஜெனரலாக திறம்பட செயல்பட்டு வந்த உயர் போலீஸ் அதிகாரி மோஹான்டியை தீவிரவாத எம்-ஐ-எம்மின் அழுத்தத்திற்கு இணங்கி, ஆந்திராவின் சாமுவேல் ராஜசேகர ரெட்டியின் அரசு சமீபத்தில் இடம் மாற்றி சாலைப் பாதுகாப்புத் துறையில் போட்டது.

திருத்தம்:

பகுதி 1-இல் மூன்றாவது பாராவில் "மக்கா மசூதியில்தான் உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் புனிதமாக வந்து தொழும் காபா என்ற கருப்புக்கல் உள்ளது" என்று இருப்பது ""மக்கா மசூதியில்தான் உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் புனிதமாக வந்து தொழும் காபாவின் ஹஸ்ருல் அஸ்வத் என்ற கருப்புக்கல் உள்ளது" என்று இருக்க வேண்டும்.

References:

1. The Siege of Mecca: The Forgotten Uprising in Islam's Holiest Shrine and the Birth of al-Qaeda by Yaroslav Trofimov

2. "Shadow of Swords -Jihad and the conflict between Islam and Christianity" by MJ Akbar

3. Terrorism Target - Hyderabad- by S. Nagesh Kumar- Available online

4. Holding them captive? News analysis in "The Hindu" Apr 27, 2003 - Available online

5. "Culture and Political History of Kashmir" By Prithivi Nath Kaul Bamzai

6. "When Kashmiri Pandits fled Islamic terror" -Kanchan Gupta
http://www.rediff.com/news/2005/jan/19kanch.htm

Copyright:thinnai.com 

No comments: