Friday 12 October, 2007

மலர்மன்னன் திண்ணை கட்டுரை - நவகாளியில் காந்திஜி

Thursday October 11, 2007

நவகாளியில் காந்திஜி

மலர்மன்னன்

திண்ணை வாசகர் ஒருவர் காந்திஜியின் நவகாளி யாத்திரையின் நோக்கம் பற்றி எழுத வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். திடீரென அதற்கு இப்போது என்ன அவசியம் என்று வினவியதற்கு அதுபற்றி நண்பர்களிடையே மாறுபட்ட கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வேறுபாடு முற்றிச் சச்சரவே ஏற்பட்டுவிட்டதாகவும் அதைத் தவிர்க்க நான் நவகாளி பற்றி எழுதுவது உதவக் கூடும் என்றும் பதில் சொல்கிறார் (இது அக்டோபர் மாதம் ஆதலால் காந்திஜி பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதும் ஒரு விதத்தில் பொருத்தம்தான்).

ஆதாரம் எதுவும் காட்டாமலேயே வெறும் சொந்த நினைவுகளின் அடிப்படையில் தகவல்களைப் பதிவு செய்வதாக என் மீது ஒரு குற்றச்சாட்டு இருந்து வருவதை அறிந்திருக்கிறேன். என்றோ நிகழ்ந்தவற்றை ஏதோ நேற்றுத்தான் நேரில் கண்ட மாதிரி எழுதுகிறானே, அவற்றையெல்லாம் எப்படி ஒப்புக் கொள்வது என்று ஏளனமாகவும் எரிச்சலோடும் கேட்கிறவர்களும் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு மத்தியில் அப்பா, இதைப்பற்றி எழுது, அதைப்பற்றி எழுது என்று சொல்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் (தாஜ்மஹலின் அடைக்கப்பட்ட அறைகளில் அடங்கியுள்ள மர்மம் பற்றி எழுத வேண்டும் என்றும் இன்னொரு மகன் கேட்கிறார்)!

இந்த மனித மனம் இருக்கிறதே, அது மிகவும் விசித்திரமாகத்தான் இருக்கிறது. ராத்திரி என்ன சாப்பிட்டோம் எனக் காலையில் சுத்தமாக மறந்து போகிறது. உடனிருக்கிற எந்த மகளாவது (உடன் இருந்து சகாயம் செய்வதெல்லாம் பெற்ற மகள் அல்ல, வரித்துக்கொண்ட மகள்களோ மகன்களோ தாம்!) காலைப் பலகாரத்திற்குப் பிறகு மாத்திரை சாப்பிட்டாயா, எடுத்துத் தரவா என்று கேட்டால் சாப்பிட்டோமா இல்லையா என்பது அதற்குள் மறந்து போகிறது. ஆனால் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவங்கள் அச்சடித்த மாதிரி தெள்ளத் தெளிவாகப் பதிந்து கிடக்கின்றன. வயது ஏற ஏற இப்படித்தான் பழைய சம்பவங்கள் கூர்மை பெற்று நினைவு அடுக்குகளில் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் போலும்.

நான் ஆராய்ச்சி மாணவன் அல்ல, வார்த்தைகளின் உச்சியில் எண் குறித்து, அடிக் குறிப்பாக விவரம் சொல்வதற்கு. என்றைக்கோ நடந்த சம்பவங்களில் நேரில் சம்பந்தப்பட்டோ, அல்லது கேள்விப்பட்டோ ஒரு சாட்சிக்காரனாக இருந்த சந்தர்ப்பங்களின்போதெல்லாம் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இது பற்றிப் பதிவு செய்ய வேண்டிவரும், ஆகையால் ஆதாரங்களைத் தேடி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வோம் என்கிற முன் யோசனை எதுவும் எனக்கு இருந்ததும் இல்லை. நினைவில் இருப்பதை எழுதுகிறேன், நான் சொல்வதுதான் சரி என்கிற பிடிவாதம் இல்லை; விருப்பப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்ளலாம், இல்லாதவர்கள் ஒதுக்கித்தள்ளி விடலாம்.

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சாவி தமிழ் நாட்டிலிருந்து கிழக்கு வங்காளம் போய் காந்திஜியோடு கூடவே நடை பயணமாகச் சென்று திரும்பி வந்து நவகாளி யாத்திரை என்கிற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடர் எழுதினார். பிறகு அது புத்தகமாகவும் வந்தது.
சாவியின் எழுத்தில் விவரங்களின் பதிவைக் காட்டிலும் காந்திஜியைப் புனிதப் படுத்தி பூசனை செய்யும் மெய் சிலிர்ப்புதான் இருக்கும். மக்களின் அழுகுரலைவிட காந்திஜி மீதான ஆராதனைகள்தான் உரக்கக் கேட்கும். சமூக வரலாற்றுப்பார்வையுடன் பிரச்சினையை அணுகும் கண்ணோட்டம் அந்த எழுத்தில் இருக்காது. ஆகையால் நவகாளி நிகழ்வுகளையும் அவற்றின் பின்னணியில் காந்திஜியின் சாதனையையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கு சாவியின் நவகாளி யாத்திரை புத்தகத்தைப் பரிந்துரைக்க மாட்டேன்.

நவகாளி இன்று வங்க தேசத்தில் உள்ளது. அது ஒரு சிறிய மாவட்டம். சணலும் நெல்லும் வெற்றிலையும் முக்கியப் பயிர்கள். வருஷத்தில் ஏப்ரல் தொடங்கி அக்டோபர் வரை அங்கு மழை பெய்துகொண்டிருக்கும். தென்மேற்கு, வட கிழக்குப் பருவக் காற்றுகள் இரண்டுமே விளையாடுகிற பூமி. பயிர்கள் பெரும்பாலும் மழை நீருக்குள் மூழ்கித்தான் கிடக்கும். மழை இல்லாத நவம்பர் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட காலத்தில்தான் பயிõரிடும் பணி நடக்கும். இன்றளவும் அது வறியவர் மிகுந்த பிரதேசமாகத்தான் இருந்து வருகிறது (1963 ல் கல்கத்தாவில் இருந்த போது கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த பகுதிக்கு ஒருமுறை செல்லும் வாய்ப்புக் கிட்டியது. சிட்டகாங், நவகாளி ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தேன். எல்லாம் வெறும் வெள்ளக்காடு!)

பிரிவினைக்கு முன் வங்காளம் ஒரு தனி மாநிலமாக இருந்தது. ஒரிஸ்ஸாவின் பெரும் பகுதி, பிஹாரின் பெரும் பகுதி, அஸ்ஸாõமின் பெரும் பகுதி எல்லாமே அதில் அடக்கம். வங்காள ராஜதானி என்று அழைக்கப்பட்ட அந்தப் பெரு நிலப் பரப்பு, 1946 ல் அகில இந்திய முஸ்லிம் லீகின் ஆளுகையில் இருந்தது. அப்போதெல்லாம் ராஜதானி முதல்வர்கள் பிரதமர் என்றே அழைக்கப்பட்டனர். வங்காள ராஜதானியின் பிரதமராக அப்பொழுது இருந்தவர் முஸ்லிம் லீகின் தலைவர்களில் ஒருவரான ஹுசைன் சுரவர்த்தி.

ஆங்கிலேயர் வருகைக்கு முன் ஹிந்துஸ்தானத்தை அடக்கி அதிகாரம் செலுத்தியவர்கள் முகமதியர்கள். ஆகவே ஆங்கிலேயர்கள் அதிகாரத்தை ஹிந்துக்களின் கட்சியான காங்கிரசிடம் ஒப்படைத்துவிட்டு ஹிந்துஸ்தானத்திலிருந்து வெளியேறினால் பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் கீழ் சிறுபான்மையினரான முகமதியர் நிரந்தரமாக இருந்து வரநேரிடும். அது முகமதியரின் சுய கவுரவத்திற்கு இழுக்கு. ஆகவே முகமதியருக்கு அவர்கள் பெரும்பான்மையினராக உள்ள பகுதியை ஹிந்துஸ்தானத்திலிருந்து பிரித்துத் தனி நாடாகத் தந்துவிட வேண்டும் என வாதித்த முகமது அலி ஜின்னா, 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் நாளைப் பாகிஸ்தான் பிரிவினை கோரும் நேரடி நடவடிக்கை தினமாக ஹிந்துஸ்தானம் முழுவதும் தமது முஸ்லிம் லீக் கட்சி அனுசரிக்கும் என அறிவித்தார் (1946 ஜூலையில் முஸ்லிம் லீக் கட்சியின் செயற் குழு சம்பிரதாயமாகக் கூடி இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது).

கலாசார அடிப்படையிலும், பூகோள அமைப்பிலும் ஹிந்துஸ்தானம் ஒரே தேசியம் எனச் சுட்டிக்காட்டிய டாக்டர் அம்பேத்கர், சமய த்தின் பேரால் முகமதியர் பிரிவினை கோருவது அபத்தம் என்று சொன்னார். நாடு முழுவதுமே ஊருக்கு ஊர் முகமதியர் வசிக்கும் பகுதிகள் உள்ள நிலையில், ஆங்காங்கே முகமதியர் கூடுதலான எண்ணிக்கையில் வாழும் ஊர்களும் இருக்கையில், மத அடிப்படையில் முகமதியருக்கென ஒரு தனி தேசத்தை ஹிந்துஸ்தானத்திலிருந்து உருவாக்கிக் கொடுப்பது எவ்வாறு சாத்தியம் என்று அவர் கேட்டார். எக்காலமும் ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களே பெரும்பான்மையினராக இருக்கக் கூடுமாதலால் அவர்களுக்குக் கட்டுபட்டு இருப்பது சுய கவுரவத்திற்கு இழுக்கு என முகமதியர் எண்ணும் பட்சத்தில் அவர்களுக்கு தேசத்தை பிரித்துக் கொடுத்து விடுவதே மேல்; ஆனால் அதன் பிறகு அவர்கள் அனைவரும் பிரித்துக் கொடுக்கப்படும் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். பதிலுக்கு பாகிஸ்தானாக அமையும் பகுதியில் உள்ள ஹிந்துக்களை ஹிந்துஸ்தானத்திற்கு அழைத்துக்கொள்ள வேன்டும். இது நடக்க வில்லையென்றால் ஹிந்துஸ்தானத்திற்கு மதக் கலவரம் என்கிற தலைவலி நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கும் என்றும் டாக்டர் அம்பேத்கர் எச்சரித்தார். அம்பேத்கர் பாகிஸ்தான் கோரிக்கை பற்றித் தெரிவித்த கருத்தை முழுமையாக வெளியிடாமல் முகமதியருக்கு தேசத்தைப் பிரித்துக் கொடுத்துவிடுவதே மேல் என்று இடையில் அவர் சொன்ன ஒரு வரியை மட்டும் வைத்துக்கொண்டு அம்பேத்கர் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்ததாகச் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் (மதம் மக்களுக்கு அபின் என்று மார்க்ஸ் சொன்னதாகச் சொல்லிக் கொண்டு திரிவதுபோலத்தான் இதுவும்! அதற்கு முன்னும் பின்னும் மார்கஸ் என சொன்னார் என்பது அவர்களுக்கே தெரியாது!).

வங்காள ராஜதானியின் அரசு முஸ்லிம் லீகின் வசம் இருந்தமையால் அங்கு பாகிஸ்தான் பிரிவினை கோரும் தினம் அதிகாரப் பூர்வமாகவே திட்டமிடப் பட்டது. ஆகஸ்ட் 16 ஒரு விடுமுறை தினமாகவே கருதப்படும், காவல் துறையினர் கூட அன்று வேலைக்கு வர மாட்டார்கள் என்று வங்காளப் பிரதமர் சுரவர்த்தி பகிரங்கமாகவே அறிவித்தார். முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் அந்த அறிவிப்பின் உட்பொருளைச் சரியாகப் புரிந்து கொண்டார்கள் (பின்னர் வங்காளம் முழுமையையும் ஒரு தனிச் சுதந்திர நாடாக அடைந்து தாமே ஆண்டு அனுபவிக்க வேண்டும் எனவும் சுரவர்த்தி முதற்சி செய்து பார்த்தார்!).

மா நில அரசங்கத்தின் ஒத்துழைப்போடு ஒரு லட்சம் பேருக்குத் தேவையான ரேஷன் அரிசியும் பிற உணவுப் பண்டங்களும் நேரடி நடவடிக்கை தினத்தை அனுசரிக்க வரும் முஸ்லிம் லீகர்களுக்கு வழங்குவதற்காகச் சேகரித்து வைக்கபட்டன. குறிப்பாக பிஹாரிலிருந்து ஆயிரக்ககணக்கான முரட்டு முகமதிய ரவுடிகள் வரவழைக்கப்பட்டனர். இதற்காகவே சிறையிலிருந்தும் கொலை பாதகங்களுக்கு அஞ்சாத போக்கிரிகள் விடுவிக்கப்பட்டதாகவும் பிற்பாடு குற்றச்சாட்டு எழுந்ததுண்டு. அந்தக் கால கட்டத்து ஸ்டேட்ஸ்மன் நாளிதழிலும் ஆனந்த பஜார் பத்திரிகா போன்ற வங்க மொழி நாளிதழ்கள்களிலும் இவை பற்றிச் செய்திகள் பதிவாகியுள்ளன. ஸ்டேட்ஸ்மன் அப்போது வெள்ளைக்காரர்களால் நடத்தப்பட்டு வந்த பத்திரிகை. ஆகவே அதன் செய்திக்கு உள் நோக்கம் எதுவும் கற்பிக்க இயலாது.

வங்காளத்தின் தலைநகரான கல்கத்தாவில் 1946 ஆகஸ்ட் 16 சாதரணமாகத்தான் விடிந்தது. முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் தெருக்களில் திரண்டு, ஹிந்துக்களும் சீக்கியர்களும் திறந்து வைத்திருந்த கடைகளை மூடுமாறு வற்புறுத்தத் தொடங்கினார்கள். பாகிஸ்தான் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதனால் நாங்கள் கடையை மூட வேண்டிய அவசியம் இல்லை என்று ஹிந்து, சீக்கிய வியாபாரிகள் வாதித்தனர். உடனே கடைகளை நோக்கிக் கல் வீச்சு தொடங்கியது. வெகு விரைவில் அது ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் திட்டமிட்டுத் தாக்கும் கலவரமாக உருவெடுத்தது. எப்படியும் நேரடி நடவடிக்கை தினம் ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் தாக்குவதில் முடியும் என எதிர்பார்த்த வங்காளிகளும் சீக்கியர்களும் முன்னெச்சரிக்கையுடன் இருந்ததால் பதில் தாக்குதல் நடத்தி நிலைமையைச் சமாளித்தார்கள். ஆனால் அரசே முகமதியர் பக்கம் இருந்ததாலும் பாதுகாப்பு கிட்டாததாலும் ஹிந்துக்களும் சீக்கியர்களும் அதிக அளவில் உயிர்ச் சேதமும், பொருள் சேதமும் அடைய நேரிட்டது.

ஒரே நாள் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நேரடி நடவடிக்கை ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் கொன்று குவிப்பதற்கு வசதியாக நாலைந்து நாட்கள் நீடித்தது. ஆக்ரோஷமிக்க வங்காளிகளும் சீக்கியர்களும் சளைக்காமல் பதில் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் திட்டமிட்டு வந்திரு ந்த உள்ளூர் வெளியூர் கும்பல்களின் கைதான் மேலோங்கியிருந்தது. எனினும் வைசிராய் வேவலுக்குக் கலவரம் குறித்து அறிக்கை அனுப்பிய சுரவர்த்தி அரசு, முகமதியர் தரப்பில்தான் அதிகச் சேதம் எனத் தெரிவித்தது! வங்காளத்தின் ஆங்கிலேய கவர்னர் இரு தரப்பினரிடையிலான மோதலில் வெள்ளையருக்குப் பாதிப்பு வந்துவிடலாகாது என்பதற்காக ராணுவத்தின் பாதுகாப்பு வெள்ளையருக்குக் கிடைக்கச் செய்வதிலேயே கவனமாக இருந்தார். சுரவர்த்தி அறிக்கையின் நம்பகத் தன்மை குறித்து அவர் கவலைப்படவில்லை. வைசிராய் வேவல், சுரவர்த்தியின் அறிக்கையை அப்படியே நகல் செய்து பிரிட்டிஷ் அரசின் இந்தியா மந்திரிக்கு அனுப்பிவைத்தார்!

கல்கத்தாவில் கலவரம் அடங்கத் தொடங்கியதும், வங்காளத்தின் பிற பகுதிகளுக்கு அது பரவத் தொடங்கியது. முக்கியமாக முகமதியர் அதிக எண்ணிக்கையில் வாழும் இடங்களில் அது வேகம் எடுத்தது.

கிழக்கு வங்காளத்தின் நவகாளி மாவட்டத்திற்கு இவ்வாறாகத்தான் கலவரம் போய்ச் சேர்ந்தது. முஸ்லிம் லீக் அறிவித்த ஒரே நாள் நேரடி நடவடிக்கை தினம் ஆகஸ்ட் 16. ஆனால் நவகாளியில் அதைச் சாக்கிட்டு அக்டோபர் மாதம் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது.

அன்றைய நவகாளி மாவட்டத்தில் எழுபது சதம் முகமதியர், முப்பது சதமே ஹிந்துக்கள். கிறிஸ்தவர்கள் அன்று அங்கு இல்லையென்றே சொல்லிவிடலாம். அது ஒரு வெறும் விவசாய பூமி. மாட்டு வண்டி போக்குவரத்துகூடச் சொற்பம். படகுப் பயணம் அதிகம். எண்பது சத நிலம் ஹிந்து நிலச் சுவான்தார்கள் வசம் இருந்தது. ஆனால் முப்பது சத ஹிந்துக்களும் அவற்றுக்குச் சொந்தம் என்று எண்ணிவிடக் கூடாது. நிலப் பிரபுக்களின் எண்ணிக்கை குறைவுதான். மக்களில் பெரும்பாலானவர்கள் குத்தகைதாரரும் விவசாயக் கூலிகளும்தாம். உப தொழில்கள் செய்வோர் இரு சமயத்தவரிலும் இருந்தனர். பொதுவாக மாவட்டத்தில் முகமதியர் பெரும்பான்மையினராக இருப்பினும் பல கிராமங்களில் ஹிந்துக்கள் கூடுதலாகவும் சில இடங்களில் சரிசமமாகவும் இருந்தனர். ஹிந்து விவசாயக் கூலித் தொழிலாளரில் தலித்துகளே கூடுதல்.

அக்டோபர் மாத மையத்தில் நவகாளி மாவட்ட முகமதியர் ஹிந்துக்கள் மீதான தமது தாக்குதலைத் தொடங்கினார்கள். மாவட்டத்தில் ஹிந்துக்களை இன அழிப்புச் செய்துவிடுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

வங்கப் பெரும் பஞ்சம் என்று பெயர் பெற்ற, 1943 ல் நிகழ்ந்த கொடிய பஞ்சத்தின்போது நவகாளி நிலச் சுவான்தார்கள் ஹிந்து, முகமதியர் என வேறுபாடு பாராமல் ஏழை விவசாயத் தொழிலாளர் அனைவரிடமுமே நிர்த்தாட்சண்யமாகத்தான் நடந்துகொண்டார்கள். ஆனால் முகமதிய விவசாயத் தொழிலாளர்கள் சமயத்தின் அடிப்படையில் நிலச் சுவான்தார்கள் மீது தாக்குதலைத் தொடங்குமாறு தூண்டிவிடப்பட்டனர். அது விரைவில் ஹிந்துக்கள் அனைவர் மீதுமான தாக்குதலாக விரிவடைந்தது. தலித்துகளின் சேரிகள் கூடத் தீக்கிரையாக்கப் பட்டன!
வழக்கம் போல ஹிந்துக்களில் ஆண்கள் கொடூரமாகக் கொல்லப்படுவதும் பெண்கள் பாலியல் கொடுமைக்கு இலக்காவதும் தொடர்ந்தது. கொல்லப்பட்ட ஆண்களின் மனைவிமார் வலுக்கட்டாயமாக முகமதியராக மத மாற்றம் செய்யப்பட்டு பலவந்த மணம் செய்விக்கப்பட்டனர்.

நவகாளியில் ஹிந்துக்கள் மீதான படுகொலைத் தாக்குதல் நடந்துகொண்டிருந்தபோது காந்திஜி கல்கத்தாவில்தான் இருந்தார். அங்கு அவர் சமரசப் பணிகளைச் செய்து கொண்டிருந்த போது நவகாளியில் ஐம்பதாயிரத்திலிரிருந்து எழுபதாயிரம் வரையில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அன்று நவகாளி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை இருபது முதல் இருபத்தைந்து லட்சம் வரை. அக்டோபர் மாதம் முழுவதும் முகமதியரின் தாக்குதலுக்குப் பலியான பிறகு வெளி மாவட்ட ஹிந்துக்களின் துணையோடு நவகாளி மாவட்ட ஹிந்துக்கள் சுதாரித்துக் கொண்டு பதிலடி கொடுக்கத் தயாரானபோது, பிரதமர் சுரவர்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்க நவம்பர் மாதம் 6 ஆம் தேதி நவகாளி வந்து சேர்ந்தார், காந்திஜி. கிராமம் கிராமமாகப் பாத யாத்திரை சென்று ஹிந்துக்களை சமாதானப் படுத்தலானார்.

முகமதியர் தாக்கினாலும் ஹிந்துக்கள் திருப்பித் தாக்கலாகாது. அஹிம்சையே ஹிந்துக்களின் ஆயுதம். முகமதியரால் வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்களை ஹிந்து இளைஞர்கள் மணம் செய்துகொள்ளவேண்டும். வலுக்கட்டாயமாக முகமதியராக மதம் மாற்றப்பட்டவர்கள் விரும்பினால் திரும்பவும் ஹிந்துக்களாகிவிடலாம். அவர்களை ஹிந்துக்கள் ஏற்றுக்
கொள்ள வேண்டும். இவையெல்லாம் காந்திஜி மக்களுக்குச் சொன்ன அறிவுரைகள். தினமும் மாலையில் பிரார்த்தனை கூட்டம் நடத்தி சர்வ சமய வேதங்களை ஓதச் செய்வார். குறிப்பாகக் குரானிலிருந்து அதிக வரிகள் படிக்கச் செய்து முகமதியரை அமைதி வழிக்குத் திருப்ப முயற்சி செய்வார்.

பிரார்த்தனைக் கூட்டங்கள் நடக்கும்போது முகமதியர் ஓரமாக நின்று கேட்டுவிட்டுக் கூட்டம் முடிந்ததும் சென்றுவிடுவார்கள். ஹிந்துக்கள் மட்டும் கலைந்து செல்லாமல் பழி கிடப்பார்கள். காந்திஜி எழுந்து செல்லும்போது அவர் பின்னாலேயே பய பக்தியுடன் செல்வார்கள்!
நவகாளியில் மக்களை அமைதிப்படுத்த வந்த காந்திஜியோடு இருந்த குழுவினருள் திருமணமாகாத ஒரு முகமதியப் பெண்ணும் இருந்தார். முகமதியர் அதிக எண்ணிக்கையில் இருந்த நவகாளி கிராமத்திற்கு அவர் சென்று மக்களைச் சந்தித்தபோது ஹிந்துக்கள் தமது வழிபாட்டுத் தலத்தில் பூஜை செய்து வந்த வாளை முகமதியர் கைப்பற்றிச் சென்றுவிட்டதாகத் தெரிய வந்தது. உடனே அந்த வாள் எங்கு இருந்தாலும் அதனை முகமதியர் ஹிந்துக்களிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று அந்த முகமதியப் பெண் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த வாள் ஹிந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வில்லை. முகமதியப் பெண் தமது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

நவகாளியில் முகமதியரைத் தமது கோரிக்கையை ஏற்கச் செய்வதற்காக ஒரு முகமதியப் பெண் உண்ணாவிரதம் தொடங்கினார்! அது இன்றைய காலை உணவுக்குப் பிறகு மாலைவரை மட்டுமே நடக்கும் அடையாள உண்ணாவிரதம் அல்ல. கோரிக்கை ஏற்கப்படும் வரையிலான தொடர் உண்ணாவிரதம்.

முகமதியர் மனம் மாறும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய முகமதியப் பெண்மணியின் பெயர் அம்துஸ் ஸலாம். அம்துஸ் உண்ணாவிரதம் நீடித்ததேயன்றி ஹிந்துக்களின் பூஜைக்குரிய வாள் வந்து சேர்ந்தபாடாயில்லை. அம்துஸ் திரும்பத் திரும்பத் தமது கோரிக்கையை வலியுறுத்தினார். அம்துஸ் உண்ணாவிரதம் இருப்பதை அறிந்து காந்திஜி அங்கு வந்துவிட்டார். அதன் பிறகு முகமதியர் குற்ற உணர்வுடன் ஓர் உண்மையை வெளியிட்டனர்.
வாளைத் திரும்பக் கொடுப்பது சாத்தியமில்லை. ஏனென்றால் ஆத்திரத்தில் ஒரு குளத்தில் அது வீசி எறியப்பட்டுவிட்டது. அதைக் கண்டெடுப்பது இயலாத காரியம். இதை அறிந்த பின் அம்துஸ்ஸுக்கு வேறு வழி தெரியவில்லை. பிற சமயத்தவரின் வழிபாட்டு சுதந்திரத்தில் இனி தலையிடுவதில்லை என வாக்குறுதியளிக்கும் ஒப்புதல் கடிதம் எழுதி முகமதியர் அனைவரிடமும் அதில் கையொப்பமிடச் செய்து தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார், அம்துஸ் ஸலாம்.

அறிவுத் தெளிவுடன் துணிவும் மிக்க அந்த முகமதியப் பெண்மணியின் பெயர் நமது சரித்திரப் புத்தகத்தில் தேடினாலும் கிடைக்காது. அதனால் அவருக்கு என்ன நஷ்டம்? இழப்பெல்லாம் நமக்குத்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் அவருக்குத் தலை வணங்குவோம். காந்திஜி தமது ஹரிஜன் பத்திரிகையில் அம்துஸ் பற்றி எழுதியிருக்கிறரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் காந்திஜியின் நவகாளி யாத்திரை பற்றிச் செய்தி சேகரிக்க உலகின் பிரபல பத்திரிகைகளிலிருந்தெல்லாம் நிருபர்கள் வந்திருந்தனர். அவர்களில் அமெரிக்காவின் ஷிகாகோ டெய்லி நாளிதழின் தெற்கு ஆசிய நிருபர் பிலிப்ஸ் டால்போட் நவகாளி பற்றிய உண்மைத் தகவல்கள் பலவற்றையும் தெரிவித்ததோடு இந்தச் செய்தியை
யும் பதிவு செய்திருக்கிறார்.

காந்திஜியின் வருகைக்குப் பிறகு நவகாளியில் கலவரம் ஓயலாயிற்று என்ற போதிலும் அதற்குள் இன அழிப்பு என்று சொல்லும் அளவுக்கு மாவட்டத்தில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டுவிட்டிருந்தனர். ஹிந்துக்கள் கூடுதலாக உள்ள கிராமங்களில் முகமதியரைத் திருப்பித் தாக்குவது தவிர்க்கப் படுவதற்கே காந்திஜியின் நவகாளி யாத்திரை பெரிதும் பயன்பட்டது. அக்டோபர் மத்தியில் நவகாளியில் முகமதியர் தொடங்கிய இனக் கலவரத்தை அடக்கக் கல்கத்தாவிலிருந்து நவம்பர் 6 ஆம் தேதிதான் காந்திஜியால் நவகாளி செல்ல முடிந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். கல்கத்தாவில் 1947 தொடக்கத்தில் காந்திஜி உண்ணாவிரதம் இருந்ததும் தேசப் பிரிவினையைத் தம்மால் தவிர்க்க இயலவில்லை என்ற வேதனையில் சுய தண்டனையாக மேற்கொண்டதுதான். மேலும் பழி தீர்க்கமாட்டோம் என ஹிந்துக்களிடம் உத்தரவாதம் பெறுவதற்காகவும் அவர் உண்ணா விரதம் இருந்தார். பாகிஸ்தான் கோரிக்கையை முகமதியர் கைவிட வேண்டும் என்பதற்காக அவர் உண்ணாவிரதம் இருந்ததில்லை. ஏனெனில் உண்ணாவிரதம் என்கிற தமது வலிமை மிக்க ஆயுதம் முகமதியரிடம் செல்லுபடியாகாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அதேபோலத் தமது அஹிம்சைப் போராட்டம் ஆங்கிலேயரை மட்டுமே வழிக்குக் கொண்டுவரும் என்பதைத் தாம் அறிந்திருப்பதாக அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். மனிதாபிமானம் சிறிதும் இல்லாத போர்த்துக்கீசியர், ஸ்பானியர்கள் போன்ற ஐரோப்பியர் அதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள் என அவர் அறிந்திருந்தார்.

படங்கள்:

1. நவகாளியில் காந்திஜி பாத யாத்திரை

2. கல்கத்தாவில் தமது ஆத்ம சுத்திக்காகவும் ஹிந்துக்களிடமும் சீக்கியர்களிடமும் முகமதியரைப் பழி வாங்க மாட்டோம் என வாக்குறுதி அளிக்க வற்புறுத்தியும் உண்ணாவிரதம் இருக்கும் காந்திஜி

No comments: