Thursday 12 July, 2007

விகடன் கட்டுரை - முஸ்லிம் அடிமைகள்

நெல்லையை கலக்கிய மகளிர் போராட்டம்...

முஸ்லிம் பெண்கள் அடிமைகளா...? Junior Vikatan 15 July 2007

‘‘உயிரற்ற உடலுக்குப் பள்ளிவாசலில் அனுமதி. உயிருள்ள பெண்களுக்கு மட்டும் தடை விதித்து அவமதிப்பா..? உயிரும், உணர்வும் உள்ள எங்களை அடக்கி வைப்பதேன்..?’’ & இப்படியரு கோஷத்தோடு ‘தமிழ்நாடு பெண்கள் ஜமாத்’ என்ற அமைப்பு நெல்லையில் நடத்திய ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில்தான் கட்டுப்பாடுகளைக் கடந்து இப்படி அன லாய் கொதித்தார்கள் இஸ்லாமியப் பெண்கள்.

புதுக்கோட்டையில் இயங்கும் ‘ஸ்டெப்ஸ் பெண்கள் மேம்பாட்டு மையம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியது. இந்த அமைப்பினர் ஊர் ஊராகச் சென்று முஸ்லிம் பெண்களை ஒருங்கிணைத்து, பெண்களுக்கென்று தனியாக ஜமாத்தின் கிளைகளை ஏற்படுத்தத் தொடங்கினார்கள். அப்போதே இதற்குப் பல்வேறு முஸ்லிம்
அமைப்புகளிடமிருந்தும், முஸ்லிம் ஆண்களிடமிருந்தும் ஊருக்குள் இருக்கும் ஜமாத்திடமிருந் தும் எதிர்குரல்கள் எழ ஆரம்பித்தன. ஆனாலும் இந்த அமைப்பினர் தொடர்ந்து பல ஊர்களிலும் ஆண்கள் ஜமாத்திற்குப் போட்டியாக பெண்கள் ஜமாத்தை அமைத்து, முஸ்லிம் பெண்களின் பிரச்னைகளை விசாரித்துத் தீர்ப் பும் வழங்க ஆரம்பித்தனர். இடையிடையே ஜமாத்களில் பெண்களும் நுழைய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல ஊர்களிலும் போராட்டங் களையும் நடத்தத் தொடங்கினர். அந்த வகையில்தான் கடந்த 7&ம் தேதியன்று பாளையங்கோட்டை ஜவஹர் திடலில், இஸ்லாமிய மதத்திற்குள்ளேயே பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தினார்கள்.

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஒன்றான மேலப்பாளையம் அருகிலேயே இருப்ப தாலும், தடை செய்யப்பட்ட சில இஸ்லாமிய அமைப்பு களின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் அங்கு இருப்பதாலும் இந்தப் போராட்டம் போலீஸ§க்கு ஏகத்துக்கு டென்ஷனைக் கிளப்பியிருந்தது. உளவுத்துறை போலீஸா ரும் உண்ணாவிரதப் பந்தலைச் சுற்றி கழுகுப் பார்வையோடு சுற்றினார்கள். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்களின் மனக்குறைகளை எல்லாம் காட்டமான வார்த்தைகளால் போட்டுத் தாக்கினார்கள் இஸ்லாமியப் பெண்கள்.

உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்தவரும், ‘ஸ்டெப்ஸ்’ நிறுவனத்தின் இயக்குநருமான ஷெரிஃபாவிடம் பேசினோம்.

‘‘இஸ்லாமிய மார்க்கத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டு விட்டதாகவும், அதற்கு குர்&ஆனே சாட்சி எனவும் ஆண்கள் இன்று வரையில் பெருமைப் பேச்சு பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், நடைமுறையில் முஸ்லிம் பெண்கள் எந்தவித உரிமையும் இல்லாமல் அடிமைகளாகத் தான் நடத்தப்படுகின்றனர். அப்படி பெண்களை அடிமைப் படுத்துவதற்கு மார்க்கத்தையும், குர்&ஆனையும் ஆண்கள் முகமூடியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். குர்&ஆனில் பெண்களுக்குக் கல்வி, திருமணம், விவாகரத்து, சொத்து மற்றும் அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நடைமுறையில் இவை அனைத்தும் மறுக்கப்படு கின்றன. ஆண்களையே உறுப்பினர்களாகக் கொண்ட ஜமாத் அமைப்புகள், பெண்களைப் பற்றிய பிரச்னைகளில் முடிவெடுப்பதற்குக்கூட பெண்களை ஆலோசிப்பதில்லை. சொல்லப் போனால் பெண்களை எங்குமே ஜமத்துக்குள் அனுமதிப்பதில்லை. ஜமாத் இயங்கும் பள்ளிவாசல் பகுதியில் உயிரற்ற பிணங்களை அனுமதிக்கும் ஆண்கள், பெண்களை அனுமதிக்கமாட்டார்களாம். உயிரும் உணர்வு கலந்தவர்கள்தானே பெண்களும்... தேவையில் லாத கட்டுப்பாடுகளைப் போட்டு பெண்களை அடக்கி வைக்க முயலுவதேன்?’’ என்றவர்,

‘‘குடும்ப, பாலியல் வன்முறைகளால் இறந்துபோகும் இஸ்லாமியப் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல இஸ்லாமிய பெண்களின் சந்தேகத்துக்குரிய மரணங்கள் நான்கு சுவர்களுக்குள் மறைக்கப்படுகின்றன. காலம் மாறிவிட்ட இன்றைய சூழலிலும் இளவயது திருமணங்களும், பல நூறு பவுன்கள் மஹர்(வரதட்சணை) வாங்குவதும் தொடர்கின்றன. மார்க்கத்தைப் பற்றி வாய்கிழிய பேசும் இஸ்லாமிய பெரியவர்களுக்கு இதுவெல்லாம் தெரியாதா..? மார்க்கம் இதைத்தான் போதிக்கிறதா..? மதத்தின் பெயரால் இஸ்லாமியப் பெண்களுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமைகளைப் பற்றிப் பேசினால் மத விரோதியாக சித்திரிக் கிறார்கள். நாங்கள் எங்களுக்கு சிறப்பான அதிகாரத்தை வழங்குங்கள் என்று புதிதாக எதையும் கேட்க வில்லை. ஏற்கெனவே குர்&ஆனில் சொல்லப்பட்டி ருக்கும் உரிமைகளைக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். அதைத் தனி நபராகக் கேட்டால் தீர்வு கிடைக்காது என்றுதான் பெண்கள் ஜமாத்தாக ஒருங்கிணைந்திருக்கிறோம். ஆரம்பித்த புதிதிலும், இப்போதும் எங்களுக்கு முஸ்லிம் ஆண் களிடமிருந்து ஏராளமான நெருக்கடிகள். முஸ்லிம் பெண் ஒருத்தி பெண்கள் ஜமாத்தில் உறுப்பின ராக இருந்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் அளவுக்குக் கொடுமைகள் நடக்கின்றன...’’ என்று நீளமாகப் பேசிவிட்டு நிறுத்தினார்.

பிறகு, அவரே தொடர்ந்து பேசுகையில், ‘‘ஆண்கள் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள், தங்களின் அதிகாரம் பறிபோகிறது என்ற அடிப்படையில் எங்களை ஏற்றுக் கொள்ளாததைக்கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், மாநில அளவில் ஜமாத்துகளை கட்டுப்படுத்தும் அமைப்பான வக்ஃப் போர்டு பெண்கள் ஜமாத்துகளை அங்கீ கரிக்க மறுப்பதோடு நாங்கள் அனுப்பும் கடிதங்களைக் கூட பெற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பி விடுகிறது. இன்றைய உண்ணாவிரதத் துக்கு தென்காசி, செங்கோட்டை, வல்லம் போன்ற பகுதி களிலிருந்தெல்லாம் பெண்கள் வந்திருக்கின்றனர். ஆனால், கூப்பிடு தொலைவில் இருக்கிற மேலப்பாளையத்திலிருந்து ஒருத்தர்கூட வரவில்லை. அங்கு அந்த அளவுக்குக் கட்டுப் பாடுகளும், அடக்கு முறைகளும் மிகுந்திருக்கின்றன. மிக சமீபத்தில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த மும்தாஜ் என்ற பெண், விபசாரம் செய்தாள் என்ற குற்றத்துக்காக பட்டப்பகலில் பலர் நடமாடும் வீதியில் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறாள். வெட்டியவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் சிலர்தான் என பலரும் சொல்கின்றனர். விபசாரம் செய்வது தப்புதான். ஆனால், அதற்கு மும்தாஜ் மட்டும்தான் காரணமா..? மும்தாஜுடன் கூட இருந்தவனை ஏன் விட்டு விட்டார்கள்? அவன் ஆண் என்பதாலா..? அரபு நாடுகள் போல தண்டனை கொடுக்கும் நீங்கள், உங்கள் கோபத்தை நல்லதுக்குப் பயன்படுத்துங்கள். அதற்கு முன்னால் குர்&ஆனை ஒரு முறைக்கு இரு முறையாக நன்றாகப் படியுங்கள். மனிதர்கள் மனித நேயத்தோடு வாழ நபிகள் அமைத்துக்கொடுத்த ஷரியத் சட்டங்களை அசிங்கப்படுத்தாதீர்கள்...’’ என்றார் காட்டம் குறையாமல்!

இது தொடர்பாக ‘தவ்ஹீத்’ ஜமாத் அமைப்பின் மாநிலச் செயலாளர் சம்சுல்ஹா ரஹ்மானியிடம் கேட்ட போது, ‘‘குர்&ஆனில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லா உரிமைகளும் நடைமுறையில் இல்லாமல் இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஜமாத்துகளுமே முழுமை யாக மாறிவிட்டன. பெண்கள் துப்புரவாக இருக்க முடியாத ஒரு சில நாட்களைத் தவிர, மற்ற நாட்களில் எல்லா தொழுகைகளுக் கும் பள்ளிவாசலுக்குள் பெண்கள் அனுமதிக்கப் படுகிறார்கள். ஒருவேளை ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதனை உள்ளுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வதை விடுத்து இப்படியெல்லாம் மார்க்கத்தைப் பற்றி பொதுப்படையாக அவதூறு பேசி பிரச்னையை ரோட்டுக்குக் கொண்டு வருதெல்லாம் தேவையில்லாதது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் தனி மனிதத் தவறு களையும் மார்க்கத்தின் தவறாக பேசுவதும் தவறு தான். மற்றபடி அவர்களும் தங்களுக்கென்று தனியாக ஜமாத்கள் நடத்திக் கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. மும்தாஜ் கொலையைப் பொறுத்த வரையில் நாங்களும் அந்தச் செயலை மிகவும் கடுமையாகவே கண்டித் திருக்கிறோம். எந்தவொரு தவறுக்கும் கொலை தீர்வாக இருக்க முடியாது... பெண்கள் ஜமாத்தினர் நெல்லைக்கு வந்து உண்ணாவிரதம் நடத்தியிருப் பதால் நெல்லைப்பகுதியில் எந்தப் பிரச்னை யும் ஏற்பட்டுவிடாது... பெண்கள் தனியாக செயல் பட்டுப் பிரச்னைகளைத் தீர்வு காணும் அளவுக்கு இங்கு எந்தப் பிரச்னையும் இல்லை...’’ என்றார் சீரியஸாக.

இந்த உண்ணாவிரதப் போராட்டம், மேலப்பாளையம் இஸ்லாமியர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக் கிறது. இதன் எதிரொலி எப்படியும் இருக்கலாம் என்பதால், உறக்கத்தைத் தொலைத்துவிட்டு அலைந்து கொண்டி ருக்கிறது உளவுத்துறை போலீஸ்.

Copyright(C) Vikatan.com

No comments: