Wednesday 29 October, 2008

ஜெயமோகன் அவர்களது "எனது இந்தியா" கட்டுரையும் எதிர்வினைகளும் -7

இந்தியா:கடிதங்கள்
October 17, 2008 – 1:33 am

அப்பாலும்…அன்புதகு ஜெ,

உடம்பின் பாற்பட்டு எழுதுபவன் நான். அப்படி இதுவரை உணர்த்தவில்லை என்றால் அறிவித்துக் கொள்கிறேன். இதை வேண்டுமென்றே செய்துவருவதாகவும் நம்புகிறேன். ஒரு சமன்பாட்டுக்காக இப்படி என்றும் கற்பித்துக் கொள்கிறேன்.

இந்த இயல்பு காரணம் உங்கள் ‘வலி’ எனக்கு நெருக்கமாக இருந்தது. கோமல் சுவாமிநாதனைப் பற்றி எழுதியதில் உள்ள நேர்த்தி அல்போன்ஸம்மாவைப் பற்றி எழுதியதில் கூடி வரவில்லை, ஆனால் அல்போன்ஸம்மாவைப் பற்றி எழுதியதே பயன்மேன்மை மிக்கதாக எனக்குப் பட்டது. நான் செயல்பட எடுத்திருக்கிறதாக நம்பும் நிலைபாடுக்கு இது அப்பாற் பட்டது.

கோமல் பட்டு உங்களில் விட்டுச் சென்ற பாடு, இனி வர இருக்கும் வலியை எல்லாம் ‘வ்பூ’வி விடலாம் என இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளும் சூத்திரத்தை அளிக்கிறது. ஆனால் அல்போன்ஸம்மாவின் வலி, ‘ஆன்மீகம்’ என்கிற சொல்லாடத் தயங்குவேனால், உடம்புக்கு அப்பால் எழுகிறது. மறக்கப்பட்ட அவர், குழந்தைகள் வழி எழுந்ததும் அல்லது எழுப்பித்த உங்கள் எழுத்தும் அதற்கு இசைகிறது.

அன்னை தெரேஸாவைப் புனிதராக்கக் கோரிய வரலாறும் அறிவேன். அவர்கள் அல்போன்ஸம்மாவைப் புனிதராகியதே பொருத்தம் என்கிற அறிவுத் தளத்துக்குப் போகிற திறமையும் எனக்கில்லை. இதுகளில் எல்லாம் அரசியல் கூட இருக்கலாம். ஆனால் ‘வறுமை எக்காலமும் உங்களோடு இருக்கும்; நான் இருக்கப் போவதில்லை’ என்றவர் என்பு தோல் போர்த்திய உடம்பில் இயேசு.

ஹிட்லர்-பஜ்ரங்தள் கட்டுரைத் தீ யணைப்புக் கட்டுரைதான் ‘எனது இந்தியா’ என்று தோன்றியது, ஆனால் பெங்களூர் நண்பருக்கு உங்கள் மறுபடி அப்படி இல்லை என்றாக்குகிறது. ஒரு தனித்த படைப்புக்குள் உங்கள் சமனிலை தோன்றாது; மொத்தமும் படிக்கவேண்டும் போலும். ‘ஒரு எழுத்தாளருக்கு எல்லாம் தெரியும்’ என்றொரு முற்று மதிப்பை அவர்மீது சுமத்துவதால் வரும் கோளாறுதானே இது? அவரும், ஆடும் துலாப் போல், எழுதி எழுதிச் சமநிலைக்கு வர முயல்பவர்தான் அல்லவா? என்ன, அல்போன்ஸம்மாபோல் அப்பாலும் எழும் தருணங்கள் அவருக்கு உண்டு.

அன்போடு
ராஜசுந்தரரஜன்

பி.கு. பதிப்பிக்க விரும்பினால் வேண்டாததை வெட்டிக்கொள்ள உரிமை தருகிறேன்.

********

எனது இந்தியா என்கிற உங்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக அல்லது உடன்வினையாக கடிதங்கள் அனுப்பிய வாசகர்களுக்கு நீங்கள் அளித்த பதில்களையும் உங்கள் கட்டுரையின் விடுபட்ட பகுதிகளாகவே சேர்த்து வாசித்தேன். இந்தக் கட்டுரை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அல்ல என நீங்கள் ஒப்புக் கொண்டிருப்பதுடன் ஆதாரங்களை சேகரித்து எழுத உங்களுக்கு அவகாசமோ மனமோ இல்லையென்றும், நீங்கள் அந்த மாதிரி கட்டுரைகளை நம்புவதும் இல்லையென்று சிறில் என்பவருக்கு அளித்த பதிலில் அறிவித்துள்ளீர்கள். உணர்வுப்பூர்வமாகவே நானும் இக்கட்டுரை குறித்து எழுத விழைகிறேன்.

இந்திய எதிர்ப்பு என்பதிலிருந்து நான் துவங்குகிறேன். “இதன் போலீஸ், நீதிமன்றம், அரசாங்கம், மதங்கள், பண்பாட்டு அமைப்புகள் அனைத்துமே அநீதியை மட்டுமே செய்துகொண்டிருப்பவை என இவை நேரடியாகவும், மறைமுகமாகவும் வாதிடுகின்றன. சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர் போன்றவர்கள் இந்த தேசத்துக்கு எதிராக கிளர்ந்தெழவேண்டுமென இவை அறைகூவுகின்றன. இந்த தேசத்தின் இறையாண்மை என்பது தான் இந்த நாட்டுமக்களின் உண்மையான முதல் எதிரி என இவை பிரச்சாரம் செய்கின்றன”. நீங்கள் குறிப்பிடுகிற பத்திரிகைகள் குறைந்த அளவு ஜனங்களாலேயே வாசிக்கப்படக் கூடியவை. பெரும்பான்மையான மக்கள் மேற்படி அமைப்புகளை நன்றாகவே புரிந்தும் அவைகளுக்கு அடிபணிந்துமே தங்கள் சிந்தனையில் மாறாது தொடர்கிறார்கள். சிற்றிதழ் வாசகன் என்பவன் மைய இதழ்கள் அல்லது பத்திரிகைகள் கிடைக்காமல் சிற்றிதழ்களின் பக்கம் வருகின்றவன் அல்ல. மாறாக வெகுஜன ஊடகங்களைத் தாண்டியும் இன்னும் ஆழமாக அல்லது மாற்றுச்சிந்தனைகளைத் தெரிந்து கொள்ளவே அவன் இப்பக்கம் வருகிறான். இறையாண்மை குறித்த இந்தச் சிந்தனை அருந்ததி ராய் எழுதிய காஷ்மீர் பிரச்சினை குறித்த கட்டுரையிலிருந்து உங்களுக்கு எழுந்திருக்கலாம் என நம்புகிறேன். காஷ்மீர் பிரச்சனைதான் இந்தியாவில் வாழ்கிற ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் பிரச்சனை என்பதாக உங்கள் கட்டுரையிலிருந்து ஒருவர் புரிந்து கொள்ள இடமிருக்கிறது. இந்திய இறையாண்மையிலிருந்து விலகிச் செல்வதற்கான போராட்டத்தை நடத்திக்கொண்டிருப்பவர்கள் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். காஷ்மீர்ப் பிரச்சனையில் ஆரம்பத்திலிருந்தே மூன்று குரல்கள் உரக்கக் கேட்கின்றன. ஒன்று காஷ்மீரைப் இந்திய இணைப்பிலிருந்து பிரித்து பாகிஸ்தானத்தோடு சேர்ப்பது. இரண்டு காஷ்மீரத்தை இந்திய ஒன்றியத்தோடே தொடர்வது. மூன்று பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சேராமல் தனிப் பிரதேசமாகஅறிவித்துக் கொள்வது. இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு சில காலம் வரை காஷ்மீர பிரச்சனையின் முக்கிய நோக்கம் தனி நாடாக அறிவித்துக் கொள்வதாகத்தான் இருந்தது. அதற்கான அரசியல் நியாயங்களும் அக்காலகட்டத்தில் அம்மக்களுக்கு இருந்ததாகவே நம்பத் தோன்றுகிறது. இந்த மூன்று குரல்களில் பாகிஸ்தானோடு இணைவது என்கிற குரலுக்குத்தான் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிர்த்தும் ஆதரித்தும் முன்னுரிமை கொடுத்தன. அதையே ஊடகங்களும் வளர்த்தெடுத்தன. காஷ்மீரத்தில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கதே. ஆனால் அதற்குப் பின்தான் போராட்டம் தொடங்கியது என நீங்கள் எழுதியிருப்பது வரலாற்றை பூசி மெழுகுதல். அம்மண்ணின் மைந்தர்கள் பண்டிட்டுகள் என்றால் இஸ்லாமியர்கள் வந்தேறிகாளா? தனிக் காஷ்மீர் என்கிற குரலை ஒடுக்கியதில் இந்திய பாகிஸ்தானிய அரசுகளின் தேசியவாதங்களின் பங்கை நீங்கள் மறுக்கிறீர்களா?. இஸ்லாமியர்கள் ஒரு அரசை உருவாக்க முனைந்தாலே அது தாலிபான் அரசாகத்தான் இருக்கும் என்பதை எப்படி நம்புகிறீர்கள். எனில் ஏனைய இஸ்லாமிய நாடுகள் அனைத்துமே தாலிபான் நாடுகளா? தாலிபான்கள் ஆயுதபலத்தினாலே முறையான அரசமைப்பற்ற ஆப்கானிஸ்தானில் ஒரு பைத்தியக்கார இஸ்லாமிய அரசை உருவாக்கினர். இஸ்லாம் மட்டுமல்ல இந்து, பெளத்த, கிருத்துவ மதங்களின் அடிப்படையில் எந்த அரசுகள் அமைந்தாலும் அவையும் தாலிபான் அரசுகளே. காஷ்மீரத்தில் ஆயுதப் போராட்டம் எண்பதுகளுக்கு பின்பு எழுந்ததே. அதற்கு முன்புவரை அந்த மண்ணில் ஆயுதங்களை வைத்து போராடிக் கொண்டிருந்தது இந்திய பாகிஸ்தானிய அரசுகளே. இந்திய ராணுவத்தாலே காணமல் போகின்றவர்கள், கொலை செய்யப் படுபவர்கள், வன்புணர்ச்சிக்கு உள்ளாகிற பெண்கள், ஊனமுறுவோர் அனைவருமே தாலிபான் அரசமைக்கிற விருப்பமுள்ளவர்களா?இந்தக் குற்றங்களைச் செய்ததற்காக தண்டிக்கப்பட்ட இந்திய ராணுவத்தினர் எத்தனை பேர் என்பதை நீங்கள் கூறமுடியுமா? காஷ்மீரத்திலேபோலீஸ், நீதியமைப்பு, அரசாங்கம் ஆகியவை அம்மக்களுக்கு நீதிமட்டுமே செய்கின்றன என நம்புகிறீர்களா?. அதிகபட்ச எரிச்சலுக்குள்ளாகிற சமூகத்தின் எந்தப் பிரிவினரும் அந்த எரிச்சலுக்கு காரணமான சமூகத்திடமிருந்து பிரிந்து செல்லவே ஆசைப்படுவார்கள். நிலையற்ற அரசுகளாலும், பயங்கரவாத்தினாலும் சீரழிகிற பாகிஸ்தானோடு இணைவதைக் காட்டிலும் இந்திய ஒன்றியத்தில் ஐய்க்கியமாவது பொருளாதார, பாதுகாப்பு காரணங்களுக்காக உகந்த ஒன்று என காஷ்மீர மக்களுக்குச் சொல்ல இன்றைக்கு யார் இருக்கிறார்கள்? காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவை நீக்குவோம் என்பது மாதிரியான பதில்களே கிடைக்கின்றன.

வங்க தேச அகதிகள் குறித்து நீங்கள் பொத்தம் பொதுவாகச் சொன்னது ஆட்சேபத்திற்குரியது. இதுகாறும் பயங்கார நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட வங்க தேசவத்தவர் எத்தனை பேர்? இந்திய சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர் எத்தனை பேர்?. அவர்களிடம் கைக்காசு பெற்றுக் கொண்டு இந்திய நிலப்பரப்பிற்குள் அனுப்பி வைக்கிற இராணுவத்தினர் சிலரை முன்வைத்து இந்திய இராணுவமே தேசப் பாதுகாப்பு குறித்த பிரக்ஞையற்றது என்று சொல்வது மாதிரியிருக்கிறது வங்க தேசத்திலிருந்து வந்தவர்கள் அனைவருமே இந்தியாவுக்கெதிரான பயங்கரவாத்தில் ஈடுபடுகின்றனர் என்பது. அவர்களுடைய மதம் அப்படிக் கற்பிக்கிறது என எழுதுவது அப்பட்டமான பாசிஸவாதம். ஸ்டாலினின் வன்கொடுமைகளுக்குக் காரணமே கம்யூனிசம்தான் என நீங்கள் பின் தொடரும் நிழலின் குரலில் சொன்னது மாதிரித்தான் மொத்த இஸ்லாமிய மக்கள் தொகையில் சிலர் செய்யும் குற்றங்களுக்கு அந்த மதம்தான் காரணம் எனச் சொல்வதும். இந்துக்கள் வேற்றுமதத்தினரை கொலை செய்தால், கொள்ளை அடித்தால், வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் அந்த மதம்தான் அதற்குக் காரணம் எனச் சொல்வீர்களா? அப்படி அந்த மதம் அவர்களுக்கு போதிக்குமானால் இந்தியாவில் இருக்கிற அத்தனை முஸ்லீம்களும் இன்றைக்கு பயங்கரவாதிகளாகத்தான் ஆகியிருக்க வேண்டும். வேறு ஒருவருக்குச் சொன்ன பதிலில் சாதாரண உழைக்கும் முஸ்லீம்களை முல்லாக்கள்தான் அப்படி மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என சொல்லியிருக்கிறீர்கள்.
அருந்ததிராய் அவசர கதியிலோ அல்லது அவருடைய கருத்து நிலைப்பாட்டிலிருந்து பரபரப்புக்காக எழுதுகிறார் என நீங்கள் சொல்லி நிறுத்தியிருந்தால அதை வேறு தளத்தில் விவாதிக்கலாம். ஆனால் பயங்கரவாத நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி இருக்கும் என நம்பத் தோன்றவில்லை. இவர்களைப் பற்றி இவ்வாறு கருத்துச் சொல்ல எந்த இந்திய தேசபக்த அமைப்பிடமிருந்து நீங்கள் நிதியுதவி பெருகிறீர்கள்? அப்சல் குரு தூக்கிலடப்பட வேண்டும் என்பதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் அத்வானியைவிட அதிகமாக உள்ளது. இந்திய நீதி அமைப்பில் ஒருவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதே நீதி செய்யப்படுவது என நீங்கள் எழுதியிருப்பது நல்ல நகைச்சுவை. மூதாதையர் மரபு என எதைச் சொல்ல வருகிறீர்கள்? மூதாதை என்பவன் எந்தக் காலத்தைச் சேர்ந்தவன். மூதாதை, ஆதி, தொன்மம் போன்ற சொற்களின் மீதிருக்கும் obsession உங்களுக்கு எப்போது குறையும்? எந்த மூதாதையின் மரபை நாம் தூக்கிப் பிடிப்பது? ஜனநாயகம் நிதானமானது என நீங்கள் எழுதியுள்ளீர்கள். ஒடுக்குமுறைக்குள்ளாகிற சமூகப் பிரிவினரிடம் நிதானத்தைப் போதிப்பது அந்த ஒடுக்குமுறைக்கு கொடுக்கிற பதிலாக இருக்குமா? ஜனநாயகம் வளர்ச்சிப் போக்கில் செல்ல வேண்டுமானால் மதம் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என நீங்கள் உங்கள் வரலாற்றுப்போதத்திலிருந்து தெரிந்துகொள்ளவில்லையா? எல்லா மதங்களும் அவற்றைப் பின்பற்றுகிறவர்களின் வீட்டிற்குள்ளே அல்லது தத்துவ ஞான சபைகளுக்குள்ளே தீவிரமாகச் செயல்படட்டும். சமூக, அரசியல், பொருளியல் தளங்களில் தலையிடாமல் இருக்கட்டும். தேசபக்தி குற்றமாக்கப்படவில்லை. “பெரும்பான்மையினர் அடிப்படைவாதம் தேசபக்தியாகவும், சிறுபான்மையினரின் அடிப்படைவாதம் தீவிரவாதமாகவும் எடுத்துக் கொள்ளப்படும்” என நேரு சொன்னது பொருந்திப் போகிற சூழல் இன்றைக்கு நிலவுவதால் அப்படி ஆகிவிட்டது. “வெல்க இந்தியா” எனச் சொல்ல மாட்டீர்களா? வெல்க என்றால் யாரை அல்லது எதை?. நீங்கள் பாரதம் எனச் சொல்வது தற்போதைய இந்திய நிலப்பரப்பா? அல்லது rss காரர்களின் mapபா? உங்களுக்கு குறளின் மீதிருக்கும் ஈடுபாடு அறிந்ததே. “யாகாவராயினும் நாகாக்க” என்கிற பிரபலமான குறளை சற்றே மாற்றி உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன், “யாகாவராயினும் கைகாக்க”. எழுதியபின் எடிட் செய்யவும். தினமும் நீங்கள் இணையத்தில் எழுதிக் குவிக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை.

பால சுப்ரமணியன்

*****************************

அன்புள்ள நண்பருக்கு,

நான் ஏற்கனவே நீங்கள் எழுதியிருக்கும் விஷயங்களுக்கெல்லாம் தெளிவான விளக்கங்களைச் சொல்லியிருக்கிறேன். அவற்றுக்குப்பின்னும் எழுதப்பட்ட உங்கள் கடிதம் உங்கள் உணர்ச்சிகளை வெலிபப்டுத்துவதென்பதை நானும் புரிந்துகொள்கிறேன். துரத்தப்பட்ட காஷ்மீரி பண்டிட்டுகள் காஷ்மீர் மண்ணின் மக்கள் என்றால் முஸ்லீம்கள் அப்படி அல்லவா என்று கேட்பது, வெல்க பாரதம் என்றால் எவரை என்று கேட்பது போன்ற விவாதங்கள்தானே நம்மிடையே இரவுபகலாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

நான் சொல்லும் பாரதம் இந்திய மக்கள் பரவல்மூலம் இயல்பாக இந்நிலப்பகுதியில் உருவாகி சுதந்திரப்போராட்டம் மூலம் திரட்டப்பட்டு காந்தியாலும் நேருவாலும் உருவகிக்கப்பட்ட நவீன தேசியம் என்பதை பலமுறை சொல்லிவிட்டேன். அதில் மதத்துக்கு அரசியல் சார்ந்த மதிப்பு ஏதும் இருக்கலாகாது என்று திட்டவட்டமாகவே இதே இணைய தளத்தில் எழுதியிருக்கிறேன். இந்தியாவில் உள்ள எந்த ஒரு மத இன மொழி சமூகத்தினருக்கும் சமான உரிமை இல்லாத தேசிய உருவகம் இந்தியாவை அழிக்கும்.

நீங்கள் என் கட்டுரையை எப்படிப் புரிந்து கொண்டீர்கள் என்ற வியப்பு உருவாகிறது. அருந்ததி ராயும் பிறரும் எழுதுவது சிற்றிதழ்களில் அல்ல. இந்நாட்டின் சிந்தனையை வடிவமைக்கும் மைய ஊடகத்தில். அவற்றை பொறுப்பில்லாமல் மிகைப்படுத்தி எழுதி சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் மனதில் அவநம்பிக்கையினை உருவாக்குவதே நம் சிற்றிதழ்களின் ‘மாற்று; குரலாக இருக்கிறது. அதையே என் கட்டுரையில் சொல்லியிருதேன். அதை ஒரு அரசியல் சரியாக முன்வைத்து மாற்றுக்குரல்களையும் ஐயங்களையும்கூட முத்திரைகுத்தல் வசைபாடல்களுடன் அவர்கள் முன்வைப்பதனால் உண்மையான விவாதமே நிகழாமல் ஒற்றைப்படையாக இருக்கிறது நம் சிற்றிதழ் உலகம். இதைத்தான்நீங்கள் மாற்று என்கிறீர்கள்.

காஷ்மீரி மக்களின் அதிருப்தி ஒரு இஸ்லாமிய அரசிலேயே அவர்களால் இருக்க முடியும் என்பதை ஒட்டி மட்டுமே உருவானது. அதை அவர்களே மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். இந்தியாவின் பலநூறு இஸ்லாமிய இதழ்கள் ஒவ்வொரு இதழிலும் எழுதுகின்றன. அந்த மனநிலை இன்றைய நவீன தேசிய உருவகம் எதிலும் அடங்காததும் அழிவு உருவாக்குவதுமாகும். இந்த உண்மையைச் சொல்லி அதற்கான தீர்வு கானலாம், குறைந்தது விவாதமாவது செய்யலாமென்னும்போது ஏன் அது உங்களுக்கு சிக்கலைக் கொடுக்கிறது? அதை அவர்களே சொல்லும்போது நீங்கள் ஏன் மழுப்பத் துடிக்க வேண்டும்? தங்கள் சக மனிதர்களை கொன்று விரட்டிவிட்டு மதவெறிசார்ந்த அடிப்படைவாத அரசு ஒன்றுக்காக குரல்கொடுக்கும் காஷ்மீரிகள் தாலிபானிய அரசையன்றி வேறெதை நாடுகிறார்கள்?சவூதி அரேபிய சிரியா ஈரான் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் இருப்பது தாலிபானியத்தன்மை கொண்ட ஆட்சியே.

என் நோக்கில் பாரதம் இந்தியா எல்லாமே ஒரே சொற்கள்தான். வெல்க இந்தியா என்று சொன்னால் மட்டும் என்னுடன் சேர்ந்துகொள்வீர்களா என்ன? மாற்றுத்தரப்பு ஒன்றை முன்வைத்ததுமே நாவை அடக்கு என்ற குரல் எழும் ஜனநாயகத்தன்மை நம் சிற்றிதழ்ச்சூழலில் எபப்டி வந்தது? அதுவே என் வினா
நன்றி
*****************

அன்புள்ள ஜெயமோகன்,

உயிர்மை இதழ் தேசத்துக்கு ஊறுவிளைவிக்கும் கட்டுரைகளை வெளியிடுகிறது என்று நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால் அந்த இதக்ழ் தொடங்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை நீங்கள் அதில் எழுதும் முக்கியமான எழுத்தாளர். ஏன் இந்த முரண்பாடு?
செல்வம்
சென்னை

**********************

அன்புள்ள செல்வம்,

உங்கள் கடிதம் என்னை அவதூறு செய்து வரும் கடிதங்கள் அளவுக்கே என்னை பாதித்தது. நம் சூழலில் அரசியல் சார்ந்து எதைச்சொன்னாலும் அதன் பின் வருடக்கணக்காக அதையே விளக்கிக்கொண்டிருக்க வேண்டிய நிலை. இதுவே என்னை அரசியல் சார்ந்து எதையுமே சொல்லக்கூடதென தடுக்கிறது. ஒன்று சொல்லிக்கொள்கிறென். என்னுடிய நெருங்கிய நண்பரான மனுஷ்யபுத்திரனை நான் பல வருடங்களாக அணுக்கமாக அறிவேன். அவரது அறிவாற்றல் கவித்துவம் ஆகியவற்றில் எப்போதும் நம்பிக்கை எனக்கு உண்டு. அவர் என்னிடம் கடும் விரோதம் கொன்டிருந்த நாட்களில்கூட அவரை நான் என் நண்பராகவே எண்ணியிருக்கிறேனெ ந்பதை அவரே அறிவார். என்னுடைய சொந்த வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் நான் சந்தித்த சிக்கல்களின் போது என்னுடன் உறுதியாக நின்ற வெகுசில நண்பர்களில் அவரும் ஒருவர். இப்போது நான் நடுவயதை தாண்டிவிட்டேன். இனி எல்லா நட்புகளும் தவிர்க்க முடியாத கடைசித் தருணம் வரை நீடிக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்.

மனுஷ்யபுத்திரன் இந்த தேசம் மீது அவநம்பிக்கை கொண்டவர் என்றோ அல்லது எதிர்மறையான செயல்களில் ஈடுபடுகிறவர் என்றோ நான் எண்ணவில்லை. நான் பேசியது பொதுவாக சிற்றிதழ்களைப் பற்றி. ஆங்கில மைய ஊடகங்களால் ‘பொலிடிகல் கரெக்ட்னெஸ் ‘ ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. அதை உருவாக்குபவர்களுக்கு இந்நாட்டின் மீது அரசியல் தாக்குதல் நிகழ்த்தும் சக்திகளுடன் மறைமுகத் தொடர்புகள் உள்ளன– அதற்கான ஆதாரங்களுடன் ஒரு கட்டுரையை நான் எழுதுவேன்.
அந்த அரசியல்சரியை அப்படியே ஏற்று நம்முடைய சிற்ற்தழ்கள் செயல்படுகின்றன. இதில் விதிவிலக்கான சிற்றிதழ்கள் குறைவே. இதற்குக் காரணம் அந்த அரசியல் சரியையே நம்முடைய ‘எலைட்’ வாசகர்கள் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அபப்டி எண்ணுவதே அறிவுஜீவித்தனம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். கிட்டத்தட்ட 30 வருடக்கால தொடர்ச்சியான பிரச்சாரம் மூலம் உருவான ஒரு தரப்பு இது. உயிர்ம்மையின் கட்டுரைகளும் காலச்சுவடு கட்டுரைகளும் இந்த மனநிலையின் வெளிப்பாடுகளே. அதைப்பற்றி ஒரு வெளிபப்டையான விவாதத்தை நிகழ்த்த வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்பதே என்னுடைய எண்ணமாகும்.அதையே என் கட்டுரையில் குறிப்பிட்டிருதேன்
என் கருத்துக்கு மாறாக கருத்துக்களைச் சொல்லக்கூடியவர்கள் என் பகைவர்களும் அல்ல. அவர்கள் என் நண்பர்கள். அவர்களிடம் விவாதம்செய்தே நான் என்னை மேம்படுத்திக் கொள்கிறேன். உயிர்மையில் நான் கடுமையாக நிராகரிக்கும் பல ஒருபக்க சார்புள்ள கட்டுரைகளை எழுதிய அ.முத்துகிருஷ்ணன் என்னுடைய நெருக்கமான நண்பர். சென்ற மாதம்கூட அவரது வீட்டுக்குச்சென்று ஒருநாள் தங்கியிருந்தேன். இளம் தலைமுறையில் அவரளவுக்குப் படிக்கக்கூடிய சிலரையே நான் கண்டிருக்கிறேன். அவரை நேர் எதிர் திசையில் இருந்து பார்க்கக்கூடிய என்னுடைய நண்பர் நீல கண்டன் அரவிந்தன் அவர்களில் ஒருவர். அடிபப்டையான விவாதங்களையே வெறுப்பில்லாமல் செய்ய இயலும்.
மனுஷ்ய புத்திரன் சென்ற காலங்களில் எழுதிய பல கட்டுரைகளில் இஸ்லாமின் பெயரால் நிகழூம் வன்முறைகளை கடுமையாகக் கண்டித்திருக்கிறார். இஸ்லாமிய மதத்தை ஒரு ஆன்மீக மார்க்கமாகவே பார்க்கவேண்டும், அரசியலாக அல்ல என்று வல்யுறுத்துபவர்களில் ஒருவராக இருக்கிறார். அதன்பொருட்டு அவரை இஸ்லாமிய அடிபப்டைவாத சக்திகள் வெறுக்கிறார்கள் என்பதையும் கண்டிருக்கிறேன். அவரைப்போன்ற அறிவுஜீவிகள் நம்முடைய பண்பாட்டின் பெரும் செல்வங்கள் என்றே நான் எண்ணுகிறேன். ஒரு விஷயத்தில் எனக்கு அவருடன் மாற்றுக்கருத்து உள்ளது என்றால் நான் என் நன்பரான அவரிடமிருந்து விலகிவிடவேண்டுமா என்ன?

பத்து வருடம் முன்பு எனக்கு அவருடன் ஒரு கருத்துவேறுபாடு வந்தபோது என் மனைவி சொன்னாள், கருத்துக்கள் இருக்கட்டும். உன் நண்பர்கள் இல்லாத வெட்ட வெளியில் கருத்துக்களை கட்டிப்பிடித்துக்கொண்டு என்ன செய்யப்போகிறாய் என்று. நான் அப்போதே அவருக்கு ஒரு கடிதம் எழுதி என் மாறாத அன்பை தெரிவித்தேன்.

உங்கள் தகவலுக்கு, வரும் உயிர்மையில் என்னுடைய குறுநாவல் வரப்போகிறது. நான் எழுதிய மிகச்சிறந்த கதைகளில் ஒன்று — ஊமைச்செந்நாய்

ஜெயமோகன்

****

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

முதலில் உங்கள் எழுத்தின் மீதான ஆழ்ந்த ஈடுபாட்டிற்கு இந்த இளைஞனின் மரியாதை கலந்த வணக்கங்கள், நான் உங்களைப் போலவே எழுத்து என்கிற ஒரு மிகப் பெரும் உந்து ஆற்றலைப் பயன்படுத்தி பல்வேறு சமூக அவலங்களைத் துடைக்க முடியும் என்று நம்புகிறவன். நாம் பல்வேறு தலங்களில் முரண்பட்டாலும் அவற்றை ஒரு சகோதரர்களுக்கு இடையிலான கருத்தியல் போராக மட்டுமே எண்ணுகிறேன்.

இந்த இளைஞனின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து உங்கள் விளக்கங்களை வழமை போல நீண்ட ஒரு கடிதத்தின் மூலம் நீங்கள் வெளிப்படுத்தி இருப்பது என்னை வியப்பில் மட்டுமில்லை, உங்கள் மீதான அன்பு அதிகரித்ததிலும் உறுதியாகிறது. நான் ஒரு வலைப்பூவை வடிவமைத்து அதில் எனது பதிவுகளை செய்து வருகிறேன், உங்களுக்கு நேரம் கிடைத்தால் அவற்றை படித்துப் பார்த்து உங்கள் மேலான கருத்துரைகளை வழங்கினால், அவை எம்மை மேலும் செம்மைப் படுத்தும்.

வலைப்பூவின் முகவரி:
http://tamizharivu.wordpress.com (தமிழ்)
http://kaiarivazhagan.wordpress.com (ஆங்கிலம்)

அருந்ததி ராயை மட்டும் வீட்டு விட்டீர்கள்? சரி அவர் தப்பிக்கட்டும்.

மரியாதை கலந்த நன்றிகளுடன்

கை.அறிவழகன்
***

அன்பு ஜெ சார்.

எனது இந்தியா கட்டுரை ஒரு மிகப்பெரும் விவாதத்திற்கு வழி கோலட்டும்.

நண்பர் அரிவழகனின் கடிதம் படித்தேன். ஒரு புறங்கை வீச்சில் உங்களைப்போன்ற பலரின் கவலைகளை காசு கொடுத்து வாங்கிய கல்வியாலும் கணிணிக் குறியீடுகளாலும் விளைந்ததாய் எழுதியது வேதனை. ஒன்று முதல் பட்ட வகுப்பு வரை அரசு பள்ளியிலும் கல்லூரிகளிலும் இலவசமாய்ப் படித்து உத்தியோகம் பெற்ற என்னைப்போன்ற பல்லாயிரவரின் உள்ளக்கிடக்கையே உங்கள் கட்டுரை. நான் பிறந்து வளர்ந்த நாடும் மதமும், இந்தியா, இந்து மதம். அதிர்ஷ்ட வசமாய் இவை உலகின் மிகச்சிறந்த தேசங்களில், மதங்களில், கலாச்சரங்களில், பண்பாட்டில் ஒன்றாக இருப்பதால் இவற்றை நாங்கள் மிகப்பெருமித்தத்துடன் அங்கீகரித்துள்ளோம். இவற்றில் குற்றங்கள்/குறைகள் உண்டு. ஆனால் குறைகள் உலகின் எல்லா மூலைகளிலும் எல்லா அமைப்புகளிலுமிருப்பதால் எம் நாட்டையும், மதத்தையும் கரித்துக்கொட்டவோ, அழித்துத்தீர்க்கவோ ஆத்திரம் எமக்கில்லை. குறைகளைக் களைய முயற்சிப்போம் - ஆனால் குத்து வெட்டு மூலம் இல்லை. குத்து வெட்டின் மூலம் எதையும் சாதித்ததில்லை. அமைப்புகளில் குறைகள் சராசரி மனிதனின் சராசரி குணங்கள் (சோம்பல், சுயனலம், பொறாமை, அகந்தை இன்ன பிற) அழியும் வரை இருந்தே தீரும். அது இந்து மதமோ, நாத்தீக கழகங்களோ, பொதுவுடமை கட்சிகளோ, அல்லது தலித் இயக்கங்களோ ஆகட்டும். இதற்கு கொந்தளிப்பதென்றால் இங்கு பல நூறு பிரளயங்களை உருவாக்குவோமா? பிறகு மீதம் என்ன? இங்கு அடிப்படையில் எல்லா தலைவர்களும் (மதம் உட்பட)அவர்தம் தொண்டர்களும் அவரவர் இயக்கங்களை சொத்து சுகம் சேர்க்கும் கற்பக மரமாய் பார்ப்பதை நிறுத்தட்டும். கை கால் சுகமாய் இருக்கும் அனைவரும் உழைத்தே சாப்பிடட்டும். எல்லா உயிர்களின் மேலும் எல்லையில்லா அன்போடும், கருணையோடும் இருக்கட்டும். மரம், மட்டை, குளம் குட்டை, மயில், குயில், கோழி என்று அனைத்தும் நம் உயிரோடு ஒன்றி விட்டால், அப்புறம் நாம் எங்கே பிற உயிரை அதுவும் மனிதரை (தலித்தோ, பார்ப்பனரோ, முஸ்லீமோ, ஏழையோ, யாரோ)வதைப்பது? இங்கே பிரச்சினைகள் வற்றாமல் இருந்தால்தான், தலைகள் வளமாய் இருக்க முடியும் என்று பார்க்கிறார்கள். இதற்காக பிற நாட்டின், மதங்களின், அமைப்புகளின் கைக்கூலிகளாக நாம் மாறினால் பிறகு ஏது விடிவு? மனிதன் தலையில் மலம் சுமப்பது, இன்றும் சில தினக்கூலிகள் சாக்கடையில் முங்கி முத்துக்குளிப்பது இவையெல்லாம் நம் நாட்டின் சாபங்கள். கண்டிப்பாய் வெட்கம். அவலம். ஆனால் இதற்கு யாரைக் கேள்வி கேட்பது? ஓட்டு ஒரு ஆயுதமா இல்லை அதை துருப்பிடிக்க விட்டோமா? இல்லை இதற்கு நாடையே அழிப்பேஎன் என்பதா தீர்வு? கேள்விகள் நிறைய. ஆனால் எந்தக் கேள்விக்கும் வன்மம், வன்முறை, அழித்தொழித்தல் பதிலே இல்லை -

அன்புடன் ரகு நாதன்.

****

இந்திய மண்ணில் வாழும் எல்லா மக்களும் இந்திய தேசியத்தின் இறையாண்மைக்கு அடிமைகளாக இருக்க வேண்டுமென்று சொன்னது யார்? அந்த இந்திய தேசியம் இந்து தேசியமே. அதை ஏற்க மறுக்கும் கருத்துச்சுதந்திரம் இங்கு ஒவ்வொரு சுதந்திர சிந்தனையாளனுக்கும் உண்டு. தமிழ் தேசியம் ஒருபோதும் இந்திய தேசியத்துக்கு அடிமையாகாது என்பதை நீர் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய இறையாண்மை பேசுபவர்கள் சொல்வது இந்து இறையாண்மையைத்தான். இந்து வெறியை மட்டுமே நீர் எழுதுகிறீர். எஸ்.வி.ராஜதுரையின் இந்து இந்தி இந்தியா என்ற நூலை நீங்கள் படித்துப்பார்க்க வேண்டும்.

[வசைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன]

கரு. முத்துச்சண்முகம்
***********************

அன்புக்குரிய நண்பருக்கு,

மிக்க மகிழ்ச்சி. இம்மாதிரி முத்திரை குத்தி கடிதங்கள் நிறைய வருகின்றன. உங்களால் இதைத்தான் செய்ய முடியும். உங்கள் தரப்புக்காக இதை பிரசுரம்செய்கிறேன்.

நான் ஏற்கனவே சொல்லியதை சொல்லி முடிக்கிறேன். நவீ£ன தேசியங்கள் என்பவை ஒரு நிலப்பகுதியில் நீண்ட வரலாற்றுச்செயல்பாடுகளின் விளைவாக மக்கள் பரவி வாழ்ந்து மெல்லமெல்ல பொது அடையாளம் ஒன்று உருவாவதன் விளைவாக பிறக்கக் கூடியவை. இந்திய தேசியம் என்பது அவ்வாறு உருவான ஒன்று. இந்த மக்கள்பரவல் நாமறிந்த வரலாற்றுக்காலம் முழுக்க நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் எல்லா இன மத மொழி மக்களும் கலந்து வாழ்கிறார்கள். ஆகவே இது இந்தியா ஆகியது. இந்த உண்மையை உணர்ந்த தேசிய முன்னோடிகளால் உருவாக்கப்பட்டது இந்திய தேசியம். காந்தி ,நேரு போன்றவர்கள் இந்த நவீன தேசியத்தின் சிற்பிகள். அவர்கள் வகுப்புவாதிகளோ இனவாதிகளோ அல்ல . இன்றும் அவர்கள் உருவாக்கிய மத இன சார்பற்ற விழுமியங்கள் மேல்தான் இந்த நாடு கட்டப்பட்டுள்ளது. அப்படியேதான் அது நீடிக்கும் - மத மொழி இந வெறிகள் தலைதூக்காதது வரை.

இந்த நாட்டில் பக்தி இயக்கம் முதல் தலித் இயக்கம் வரை ஒரு அகில இந்திய தன்மையுடன் மட்டுமே உருவாகி இருக்கின்றன. இந்த நாட்டின் கருத்தியல் வளர்ச்சி எப்போதும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளது. இதன் மக்களின் பொருளியல் பின்னிப்பிணைந்துள்ளது.

இந்த நவீன தேசியத்துக்கு மாற்றாக இங்கே முன் வைக்கப்படுபவை முழுக்கமுழுக்க மத மொழி இன அடிபப்டையிலான உபதேசியங்கள். அவை கோடானுகோடி மக்களை பிரித்து ஒருவரோடொருவர் போரிடச்செய்து அழிவுக்கே கொண்டுசெல்லும். பிரிவினையின் கொடுமையை நாம் நன்கறிந்தவர்கள். இந்திய இறையாண்மையை ஏன் வலியுறுத்துகிறேன் என்றால் அது அழிந்தால் இங்கே உருவாவது வெறுப்பின் அடிப்படையில் உருவகிக்கப்படும் நசிவு தேசியங்கள் என்பதனாம்லேயே.
காந்தியையும் நேருவையும் வகுப்புவாதிகளாகவும் சாதியவாதிகளாகவும் சித்தரிக்கும் எஸ்.வி.ராஜதுரையின் மோசடி நூலை நான் படித்திருக்கிறேன். அதே ஆயுதத்தை நான் எடுத்து ஈ.வே.ரா மீதும் திராவிட இயக்க முன்னோடிகள் மீது அவர் மீதும் போட முடியும் — உண்மையின் அடிப்படையில். எஸ்.வி.ராஜதுரை வாதிடுவது அவரது சாதி மேலாதிக்கம் பெறக்கூடிய, பல லட்சம் தலித்துக்களை அடிமையாக்கி, தெலுஙக்ர்களை கன்னடர்களை அகதிகளாக்கி, அதன்மீது அவரது சாதியின் வணிகக்கொடியை பறக்கவிட வழியமைக்கக்கூடிய, ஒரு தமிழ்த்தேசியத்துக்காக. அப்பட்டமான அந்த ·பாசிஸ்டுக்கு நேரு என்ற பேரை உச்சரிக்கும் தகுதியே இல்லை.காந்தி பற்றிய எஸ்.வி.ஆரின் அவதூறை அ.மார்க்ஸே இன்று ஏற்றுக்கொள்ளமாட்டார்.இந்தியாவுக்கு எதை நான் சொல்கிறேனோ அதையே மலேசியாவுக்கும் சொல்கிறேன் என நீங்கள் என் கட்டுரையை படித்தால் அறியலாம். இந்தியா போன்றே ஒரு நவீன பல்லினத் தேசியமாகவே மலேசியாவும் உருவகிக்கப்பட்டிருக்கிறது. அதில் இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதனால் அவர்களின் மேலாதிக்கம் சற்றெ அங்கிருக்கலாம். அங்குள்ள இந்துக்கள்– தமிழர் தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதாக உணர்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட அடையாளத்தால் அவர்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது அதே அடையாளத்தில் ஒன்று திரண்டு உரிமைகளுக்கான போராட்டத்தில் ஈடுபடுவது இயல்பானதே.
ஆனால் அது ஒருபோது அங்குள்ள மக்களுக்கு எதிரானதாக ஆகிவிடலாகாது. அங்குள்ள நவீன தேசியத்தை இனவாத தேசியத்தால் பிளப்பதாக ஆகிவிடக்கூடாது. தமிழர்களின் வாழ்க்கை அங்குள்ள இஸ்லாமிய மக்களுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. அவர்களின் நம்பிக்கையை இவர்கள் ஒருபோதும் இழக்கக் கூடாது.ஆகவே முற்றிலும் நேர்நிலை நோக்கு கொண்ட அறவழிப்போராட்டமே அதற்குரியது. வெறி கிளப்பும் பேச்சுகளை நிகழ்த்தும் தமிழக சமநிலையில்லா தமிழிய, இந்துத்துவ அறிவுஜீவிகளை அவர்கள் அருகிலும் விடக்கூடாது.

இதையே நான் எங்கும் சொல்வேன். முரண்பாடுகள் மீது வெறுப்பையும் காழ்ப்பையும் கொட்டாதீர்கள். தங்கள் பலநூற்றாண்டு முரண்பாடுகளை தீர்த்துக்கொண்டு ஐரோப்பா முன்னேறுகிறது. இல்லாத முரண்பாடுகளை உருவாக்கி அவர்களிடம் ஆயுதம் வாங்கி நாம் போரிட்டு அழியத்தான் வேண்டுமா?

அவ்வளவுதான். இனி என்னிடம் சொற்கள் இல்லை.

ஜெயமோகன்

மலேசியா, மார்ச் 8, 2001

மலேசியா மறுபக்கம்

இந்தியா:கடிதங்கள்

No comments: