Monday 9 March, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (16)

*************
4 March 2009
*************

அணுவின்றி அசையாது பாகிஸ்தான்!

ஆயிரம் கனவுகள் இருந்தன புட்டோவுக்கு. தேசத்தைப் பற்றி. அரசியல் பற்றி. ஆட்சி, அதிகாரம் பற்றி. ராணுவ எதிர்காலம் பற்றி நிறைய கனவுகள். அதில் ஒன்று, அணு ஆயுதக் கனவு.

அயூப்கானின் ஆட்சியின்போது ஐ.நா-வுக்குச் சென்ற குழுவில் உறுப்பினராக இருந்தபோதே மனிதருக்கு அணு ஆயுதக் காதல் வந்துவிட்டது. காரணம், முந்தைய ஆண்டுதான் பாகிஸ்தானில் இருக்கும் நாற்பது விஞ்ஞானிகளைத் தங்கள் நாட்டுக்கு அழைத்துச்சென்று அணு இயற்பியல் பற்றிய பால பாடங்களைக் கற்றுக்கொடுத்து அனுப்பியிருந்தது அமெரிக்கா.

அமெரிக்காவில் பயிற்சி பெற்ற நாற்பது விஞ்ஞானிகளும் அணு ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு வசதியாக 1956-ல் பாகிஸ்தான் அணுசக்தி ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதைவைத்து மிகப்பெரிய வித்தை களைக் காட்டி உலகத்தை பிரமிக்க வைக்கலாம். குறிப்பாக, இந்தியாவை மிரளவைக்கலாம் என்று கனவு காணத் தொடங்கியிருந்தார் புட்டோ.

துடிப்பு நிறைந்த மனிதரான புட்டோவுக்கு மிக முக்கியமான அமைச்சகம் வழங்கப்பட்டது. கனிம வளத்துறை. அது போதாதா..? உற்சாகம் பொங்க அணு ஆராய்ச்சிப் பணிகளுக்குப் பச்சைக்கொடி காட்டினார் புட்டோ. அதன்பிறகு, பாகிஸ்தானின் அணுசக்தி ஆணையம் நாலு கால் பாய்ச்சலில் நடைபோடத் தொடங்கியது.

டாக்டர் இஷ்ராத் உஸ்மானி என்பவர் அணுசக்தி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். உடனடியாக பின்ஸ்டெக் என்ற அணுசக்தி நிறுவனம் மற்றும் பிஸ்ட் என்ற அறிவியல் நிறுவனம் ஆகியவற்றை உருவாக்கினார். கூடவே, கராச்சியில் அணுசக்தி மையம் ஒன்றும் உருவாக்கப்பட்டது.
தேசம் முழுக்க இயற்பியல் மாணவர் களைக் கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அணு விஞ்ஞானிகள் ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று திறமை நிறைந்த மாணவர்களைத் தேடிப்பிடித்து அழைத்துவந்தனர். பலத்த வடிகட்டலுக்குப் பிறகு அறுநூறு மாணவர் கள் தேர்வு செய்யப்பட்டனர். வெவ்வேறு காலகட்டங் களில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட அவர் களுக்கு, அங்கே அணு இயற்பியல் பயிற்சிகள் தரப் பட்டன.

பாகிஸ்தான் அணு ஆயுதத்தில் ஆர்வம் செலுத் தியது அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்தது. அப்போது அமெரிக்காவின் நட்பு வளையத்தில் இருந்தது பாகிஸ்தான். ஆகவே, அதன் ஆர்வத்துக்குத் தீனிபோடும் வகையில் மூன்றரை லட்சம் அமெரிக்க டாலர்களை ஆயுத உதவியாக அளித்தது. அந்தப் பணத்தைக் கொண்டுதான் பாகிஸ்தான் அணு ஆராய்ச்சி ரியாக்டர் (PARR-1) உருவாக்கப்பட்டது.

பிறகு, 1964-ல் வெளியுறவுத்துறை அமைச்சராக புட்டோ நியமிக்கப்பட்டார். அரசியல் சங்கதிகள் ஆயிரம் இருந்தன. காய் நகர்த்தல்கள் நிறைய செய்ய வேண்டியி ருந்தன. இருப்பினும், தன் 'அணு' காதலை புட்டோ கைவிடவே இல்லை.

அப்போது தன்னுடைய அணுஆயுதக் கனவுக்கு சீனப் பிரதமர் சூ யென் லாய் நேசக்கரம் நீட்டுவார் என்பது புட்டோவின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதைச் சொல்லியே அதிபர் அயூப்கானை அழைத்துக் கொண்டு பீஜிங் சென்ற புட்டோ, சூ யென் லாயிடம் உதவி கேட்டார். அமெரிக்கக் கூடாரத்தில் இருந்து விலகி தன்னுடைய மந்தைக்கு வந்த ஆட்டை எப்படி மேய்ப்பது என்பது சூ யென் லாய்க்குத் தெரியாதா? 'உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். நம்பிக்கையாகப் போய்வாருங்கள்' என்று ஊக்கம் கொடுத்து அனுப்பிவைத்தார்.

சூ யென் லாயின் உத்தரவாதம் புட்டோவுக்கு மன வலிமையை வாரி வழங்கியிருந்தது. செய்தியாளர்களை சந்தித்த புட்டோ, 'இந்தியா அணுகுண்டு தயாரிக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் வெறுமனே அதை வேடிக்கை பார்க்காது. பட்டினி கிடந்தோ அல்லது புல்லைத் தின்றோ எங்களுக்கென்று ஒரு அணுகுண்டையாவது தயாரிக்காமல் விடமாட்டோம்' என்று முழங்கினார். அதன்பிறகு, அரசியல் மாற்றங்கள் புயல் வேகத்தில் நிகழ்ந்து, ராணுவ ஆட்சியாளராக வந்து அமர்ந்து விட்டார் புட்டோ.

அணு ஆயுத சோதனைகள் அடுத்த நகர்வு குறித்து ஆலோசனை செய்வதற்காக பலுசிஸ்தானின் முக்கிய நகரமான குவெட்டாவில் ரகசியக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தார் புட்டோ. அந்தக் கூட்டத்துக்கு அப்துஸ் சலாம், இஷ்ராத் உஸ்மானி, முனிர் அகமது கான் உள்ளிட்ட வெகுசில அணுசக்தி மூளைகளே அழைக்கப்பட்டிருந்தன. ஆனால், திடீரென கூட்டத்தை பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் முல்தான் நகருக்கு மாற்றினார்.

ஜனவரி 24, 1972 அன்று நிகழ்ந்த அந்தக் கூட்டத்தில் அணுகுண்டு மற்றும் அணுஆயுதங்கள் குறித்த தன் கனவுகளை அணு விஞ்ஞானிகளிடம் கண்கள் விரிய விவரித்த புட்டோ, பேச்சின் இறுதியில் சொன்னது இதுதான்:
'இனி உங்கள் அனைவருடைய சுவாசம், சிந்தனை, செயல் எல்லாமே அணுகுண்டுதான்!'

விஞ்ஞானிகளை அணுகுண்டின் பக்கம் அனுப்பி விட்டு மீண்டும் அரசியல் களத்துக்கு வந்தார் புட்டோ. காரணம், கடமைகள் இரண்டு காத்துக்கொண்டு இருந்தன. 1971 யுத்தத்தின்போது இந்தியாவிடம் பறிகொடுத்த இடத்தை பேச்சுவார்த்தை மூலம் மீட்டெடுக்க வேண்டும். இந்தியாவிடம் சரணடைந்த பாகிஸ்தான் வீரர்களைத் திரும்பப்பெற வேண்டும். உலக நாடுகளின் உதவியோடு இரண்டை யுமே சுலபமாகச் சாதித்துவிட முடியும். இருந்தும், புட்டோவின் மூளை குறுக்குவழியில் சிந்தித்தது.

இந்தியா வசம் சிறைபட்டிருக்கும் வீரர்களுடய குழந்தைகளின் தவிப்பைக் கடிதம் மூலமாக வெளிப் படுத்தி உலக நாடுகளின் அனுதாபத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டார் புட்டோ. அப்போது தொண்ணூறாயிரம் பேர் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் எழுபதாயிரம் பேர் ராணுவ வீரர்கள். உள்நாட்டுப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களே மீதமுள்ள இருபதாயிரம் பேர்.

இந்திய-வங்கதேசக் கூட்டுப்படையினரிடம்தான் பாகிஸ்தான் ராணுவத்தினர் சரணடைந்தனர். வங்க தேச அதிபர் முஜிபுர் ரஹ்மானுக்கு, வீரர்களைத் திரும்ப ஒப்படைப்பதில் விருப்பமில்லை. ஆகவே, 'என்னால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது' என்று கைவிரித்துவிட்டார் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி.

'சரி, அந்தப் பிரச்னையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். முதலில் எங்களிடமிருந்து கைப்பற்றிய நிலப்பகுதிகளை ஒப்படையுங்கள்' என்று கேட்டார் புட்டோ. இதுவிஷயமாகப் பேசுவதற்கு சிம்லாவில் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. அப்போதுதான் பெனாசிர் என்ற பெண்ணின் முகம் உலக நாடுகளின் பார்வையில் தென்பட்டது. அப்பா புட்டோவுடன் வந்திருந்தார்.
பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர் நிறுத்தக் கோட்டை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடாக ஏற்றுக்கொள்ள சம்மதித்தார் புட்டோ. ஆனால், அதையே சர்வதேச எல்லையாகத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி விட்டார். இறுதியாக, ஜூலை 3, 1972 அன்று சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தங்கள் வசம் இருந்த போர்க்கைதிகளைத் திரும்ப ஒப்படைத்தது இந்தியா.

'போர்க்கைதிகளை விடுவித்து மக்கள் மத்தியில் தன்னை சாதனையாளராகக் காட்டிக்கொள்ள விரும்பினார் புட்டோ. அதற்காகவே சிம்லா ஒப்பந்தத்தில் நிறைய சமரசம் செய்துகொண்டார்' என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டத் தொடங்கின. அதற்கெல்லாம் கவலைப்பட்டு மூலையில் உட்காரும் ரகத்தைச் சேர்ந்தவர் அல்ல புட்டோ.

ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களைத் தருவிப்பது தொடர்பாக வடகொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தொடங்கினார். உண்மையில், விடுபட்டுப் போன பேச்சுவார்த்தை அது. அயூப்கான் காலத்திலேயே வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற முறையில் வடகொரியா சென்றிருந்த புட்டோ, ஆயுதம் தொடர்பாக அஸ்திவாரம் போட்டுவிட்டு வந்திருந்தார்.
பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பாகிஸ்தான்-வடகொரியா இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. உடனடியாகக் கப்பல் மூலமாக ஏராளமான ஆயுதங்கள் கராச்சிக்கு வந்திறங் கின. ஏவுகணைகள், ஏவுகணை செலுத்தி, வெடி பொருள்கள் மற்றும் சில உதிரி பாகங்கள் ஆகியவை வந்திறங்கின. இதற்கான தொகையை அமெரிக்க டாலர்களாகக் கொடுத்தது பாகிஸ்தான் அரசு. அதன்பிறகுதான் பாகிஸ்தானுக்கான முதல் அணு உலை உருவாக்கப்பட்டது.

அணு ஆராய்ச்சி விஷயத்தில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டபோதும் புட்டோவுக்கு அவர்களுடைய வேகத்தில் திருப்தியில்லை. தவிரவும், அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த விஞ்ஞானிகள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் முளைத்திருந்தன. இதனால் பாகிஸ்தான் அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்த உஸ்மானியைப் பதவி நீக்கம் செய்துவிட்டு, முனீர் அகமது கானை நியமித்தார் புட்டோ.

தவிரவும் புட்டோவின் கனவுத்திட்டமான அணுகுண்டுத் தயாரிப்புக்கு நிறைய நிதி ஆதாரம் தேவைப்பட்டது. எல்லாவற்றுக்கும் கையை ஊன்றிக் கரணம் போட முடியாது. கொஞ்சம் அக்கம் பக்கத்து ஆசாமிகளின் உதவி வேண்டும் என்ற நிலை. சிறிதும் தயக்கமின்றி சுற்றுப் பயணம் கிளம்பினார் புட்டோ. அப்போது அவர் குறிவைத்த நாடுகள் எல்லாமே மத்திய கிழக்கில் இருக்கும் இஸ்லாமிய நாடுகள்.

ஈரான், துருக்கி, மொராக்கோ, லிபியா, எகிப்து, சிரியா, சவூதி அரேபியா என்று பல நாடுகளுக்கும் சென்று 'புதிய பாகிஸ்தானை நிர்மாணிக்க உதவுங் கள்' என்று வேண்டுகோள் விடுத்தார் புட்டோ. எல்லோருமே மையமாகத் தலையாட்டி வைத்தனர். அதிகாரப்பூர்வமாக யாரும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. ஆனாலும், நம்பிக்கை குறையாமல் பாகிஸ்தான் வந்திறங்கினார் புட்டோ.

திடீரென புட்டோவுக்கு ஏதோ பொறிதட்டியது. ஆம்... அவருடைய ஆட்சிக்கு எதிராக ராணுவப் புரட்சி நடத்த ராணுவ அதிகாரிகள் திட்டம் போட்டிருப்பது புட்டோவின் கவனத்துக்கு வந்தது. கண்ணசைத்தார். உடனடியாக 59 ராணுவ அதிகாரிகள் கைது செய்யப் பட்டனர். நொடிப் பொழுதில் ராணுவப் புரட்சி பிசுபிசுத்துப்போனது. இனிமேலும் பழைய நபர்களை நம்பினால் சரியாகாது என்ற முடிவுக்கு வந்த புட்டோ, ராணுவ பிரிகேடியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஜியா உல் ஹக் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தார்.

இதற்கிடையே புதிய அரசியலைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் ஒரு இஸ்லாமியக் குடியரசாக மாறியது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய புட்டோ, தான் வகித்து வந்த அதிபர் பதவியை ஃபஸல் இலாஹி சௌத்ரிக்கு வழங்கிவிட்டு ஆகஸ்ட் 14, 1973 அன்று பாகிஸ்தானின் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நாற்காலியை மாற்றிக்கொண்டாரே ஒழிய, தன் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளவில்லை புட்டோ. அரசியல். ஆயுதம். அணுசக்தி. இத்யாதி இத்யாதி விஷயங்களில் கவனம் செலுத்திக்கொண்டே இருந்தார். கொஞ்சம் கவனம் கலைந்தாலும் அவரை உசுப்பேற்றும் காரியத்தில் இறங்கி சேவை செய்தது இந்தியா.

மே 18, 1974. இந்தியா முதன்முறையாக அணுகுண்டுச் சோதனை ஒன்றை நிகழ்த்தியது. அதற்கு சூட்டப்பட்ட சங்கேதப் பெயர், 'சிரிக்கும் புத்தர்.' ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் வெடித்த அந்த குண்டு புட்டோவின் தூக்கத்தைச் சிதறடித்தது!

No comments: