Monday 9 March, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (18)

**************
11 March 2009
**************
மைதானத்தில் விழுந்த அணுகுண்டு!

ஒரு ஞாபகத்துக்குச் சொல்ல வேண்டுமானால்... எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் முதலமைச் சராகப் பொறுப்பேற்ற ஐந்தாவது நாள் (ஜூலை 5, 1977) பாகிஸ் தான் ஜியா வுல்ஹக் என்ற ராணுவ மனிதரின் கட்டுப் பாட்டுக்குள் வந்தது. இங்கே பரவசம் என்றால், அங்கே பதைப்பதைப்பு. அன்று தொடங்கி தொடர்ந்து பதினொரு ஆண்டுகளுக்கு ஜியாவுல் ஹக்கின் கைப்பிடிக்குள் அகப்பட்டிருந்தது பாகிஸ்தான். அத்தனையும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாதஆண்டுகள்.

தன் ஆட்சிக்காலத்தில் ஜியாவுல் ஹக் மூக்கை நுழைத்து மூர்க்கத்தனம் காட்டாத துறைகளே பாகிஸ் தானில் இல்லை. ஆட்சிமுறையில் அவர் நடத்திய அதிரடிகள் ஒவ்வொன்றும் மிரள வைப்பவை. ராணுவத்துக்குள் மதத்தை நுழைத்த புண்ணியவான். அரசுக்கு ஊன்றுகோலாக இருந்த உளவு நிறுவனத்தை, உலக்கையாக மாற்றி அதிரடி உபயோகம் செய்தார்.

ஆப்கன் விஷயத்தில் வல்லரசான சோவியத்தை எதிர்த்துக் களமிறங்கி, இன்னொரு வல்லரசான அமெரிக்காவை அசர வைத் தார். இன்னும் இன்னும் நிறைய சுவாரஸ்யங்கள் இருக் கின்றன அவருடைய வாழ்க்கையில். முக்கியமாக தனக்குக் கொம்பு சீவி வளர்த்துவிட்ட ஜுல்பிகர் அலி புட்டோவின் கழுத்தையே தூக்கில் தொங்கவிட்டு வேடிக்கை பார்த்தவர் ஜியா.

ஒரு சாதாரணப் போர்வீரனாக ராணுவத்துக்குள் நுழைந்த ஜியா, ராணுவ ஆட்சியாளராக மாறியதோடு, அத்தனை ஆண்டு காலம் தொடர்ச்சியாக ஆட்சி செய் தது பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் இன்றளவும் பிரமிப்பைத் தருகிற விஷயம். இந்த இடத்தில் ஜியாவுல் ஹக்கின் நதிமூல, ரிஷிமூலங்களைத் தெரிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் அவருடைய ராணுவத்தில் அவர் எத்தனை பெரிய மனிதர் என்பதையும் அவருடைய வளர்ச்சியின் விஸ்வரூபம் எப்படிப்பட்டது என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் (1924) பிறந்தவர் முகமது ஜியா வுல்ஹக். தந்தை முகமது அக்பர், ராணுவ குமாஸ்தா. நடுத்தரத்துக்கும் சற்றே கீழான குடும்பம். அதற்கேற்ற வாழ்க்கை முறை. சிம்லாவில் பள்ளிப் படிப்பை முடித்த ஜியா பட்டம் வாங்கியது டெல்லியில் உள்ள கல்லூரியில்.

படிக்கும் காலத்திலேயே மனிதருக்கு ராணுவக் கனவுகள் வந்துவிட்டன. 1943-ல் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் ஜியா. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பர்மா, மலேயா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. கூர்தீட்டக் கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் கனக்கச்சிதமாகப் பயன் படுத்திக்கொண்டார். பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவத்தில் இணைந்தார்.
எதையும் விரைவாகக் கற்றுக்கொள்ளக் கூடியவர். நேர்மையானவர். திறமைக்குப் பஞ்சமில்லை. விளைவு, அமெரிக்காவில் இருக்கும் ராணுவக் கல்லூரியில் பயிற்சிகளுக்காக அனுப்பப்பட்டார். 1967-ல் ஜோர்டான் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஜோர்டான் மன்னரை, பாலஸ்தீன விடுதலைப் படை யினர் சிம்ம சொப்பனமாக இம்சித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவருக்கு நேசக்கரம் நீட்டிய தலைவர்களுள் ஒருவர், பாகிஸ்தான் அதிபராக இருந்த யாஹியா கான். ஒரு படையை ஜோர் டானுக்கு அனுப்பிவைத்தார். அதற்குத் தலைமை ஏற்றவர் ஜியாவுல் ஹக்.
ஜோர்டானில் அவர் நிகழ்த்திய மாயம், 1969-ல் பிரிகேடியர் அந்தஸ்தை வாங்கிக்கொடுத்தது. அடுத்த மூன்றாவது ஆண்டில் மேஜர் ஜெனரலானார். முல்தான் நகரில் பணியாற்றியபோது முதன்முதலாக புட்டோவை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பழகினார். நட்பு கனியத் தொடங்கியது.

ராணுவத்தில் இருக்கும் சாதாரண வீரர் தொடங்கி, தலைமை தளபதி வரை எல்லோருக்கும் மதுப்பழக்கம் ஒரு அடையாளம். யாஹியா கான், அயூப் கான் உள்ளிட்ட பலருக்கும் மது இல்லாமல் வேலை ஓடாது. சாப்பிடுவதற்கு முன் ஒரு பெக் விஸ்கி அடிக்காவிட்டால் அயூப் கானுக்கு சாப்பாடு இறங்காது. நண்பர்களுடன் இணைந்து மது அருந்தலாம் என்ற ஒரே காரணத்துக்காகவே அவ்வப்போது திட்டம் தீட்டலாம், ஆலோசனை நடத்தலாம் என்று அரட்டைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்வாராம் யாஹியா கான்.

பாகிஸ்தானில் இருக்கும் பாரம்பரியமிக்க பிண்டி கிளப் உள்ளிட்டவற்றில் அயூப் கான், யாஹியா கான் போன்ற ராணுவப் பெருந்தலைகளைப் பார்க்கலாம். ஆனால், ஜியா நேரெதிரான குணம் கொண்டவர். ஆல்கஹாலுக்கும் ஜியாவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். வாடையே ஆகாது. கொஞ்ச காலம் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தவர், பிறகு அதையும் விட்டுவிட்டார்.

ஜியாவின் அத்தனை அசைவுகளையும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்த புட்டோ, தான் அதிபரானதும் ஜியாவை ராணுவப்படையின் தலைவராக நியமித்தார். இது உண்மையிலேயே ஜியாவுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி. கூடுதல் தகுதி மிக்க அதிகாரிகள் பலர் இருந்தும் புட்டோவின் ஒரே சாய்ஸ், ஜியாவுல் ஹக்.

புட்டோ அதிபராக இருந்தபோது ஜியாவின் நடவடிக் கைகள் ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துபவை. தான் அளவுக்கு அதிகமாக புட்டோவை நேசிப்பதை அவருக்கு நிரூபிக்க அதிகம் மெனக்கெடுவார் ஜியா. ஒரு நாள் புட்டோவை சந்தித்தபோது கையில் புனித குர்ஆனை வைத்துக்கொண்டு, 'புட்டோவே பாகிஸ் தானின் ஒரே மீட்பர். அவருக்கு என்றென்றும் நான் கடமைப்பட்டவன்!' என்று ஜியா சத்தியம் செய்தார் என்றுகூட ஒரு தகவல் பாகிஸ்தானில் பரபரப்பாக உலா வந்தது.

ஜியாவின் புட்டோ மீதான விசுவாசம் எந்த அளவுக்குச் சென்றது தெரியுமா? ஒரு முறை புட்டோவிடம் ஆலோ சனை நடத்துவதற்காக வந்திருந்தார் அமெரிக்க அதிகாரி ஒருவர். அந்தக் குறிப்பிட்ட சந்திப்பின்போது ஜியாவும் கலந்துகொண்டார். புட்டோவின் கண்ணசைவுக்கு ஏற்ப ஜியாவின் உடலசைவுகள் இருந்தன.

சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த அந்த அதிகாரி, 'புட்டோவுக்கு இன்னொரு நூரா கிடைத்திருக்கிறார்' என்று சொல்லிவிட்டுச் சென்றார். சங்கடத்தில் நெளிந் தனர், அதிபர் மாளிகை அதிகாரிகள். காரணம், நூரா என்பது புட்டோவின் வேலைக்காரர் நூர் முகம்மதுவின் செல்லப் பெயர். நிற்க.
ஜியாவுல் ஹக் இப்போது பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பதவிக்கு வந்ததும், அவர் கொடுத்த வாக்குறுதிகள் மூன்று. 'தொண்ணூறு நாள்களில் தேர்தல் நடத்தப்படும்' என்பது அதில் ஒன்று. ஆனால், அதை நிறைவேற்றும் திட்டத்தை திடீரெனக் கைவிடுவதாக அறிவித்தார். 'மிகப் பெரிய தேர்தலை சந்திக்கும் அளவுக்கு தேசத்துக்கு நிதிபலம் இல்லை' என்ற ஒற்றை விளக்கத்தோடு முடித்துகொண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால், ஜியா வீசிய அணுகுண்டு, பாகிஸ்தான் அரசியல் கட்சிகளின் மைதானத்தில் விழுந்து வெடித்துச் சிதறியது.

'பாகிஸ்தான் அரசியல்வாதிகள் ஊழல்களின் ஊற்றுக்கண்களாக மாறியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் களைந்த பிறகு தேர்தல் நடத்தினால் போது மானது என்பதுதான் பெரும்பாலான பொதுமக்களின் விருப்பம். ஊழல் செய்த மக்கள் பிரதிநிதிகள் மீது விசாரணை நடந்துவருகிறது. அந்தப் பணிகள் முடிந்து தண்டனைகள் அறிவிக்கப்படும். அரசியல் மீது படிந்தி ருக்கும் கறைகள் அகன்றதும் தேர்தல் நடத்தப்படும்.'
கொந்தளித்துவிட்டார் பேகம் நஸ்ரத். இவரை தெரி கிறதல்லவா? புட்டோ கைது செய்யப்பட்ட சமயத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டவர். புட்டோவின் மனைவி. 'நாட்டில் சட்டவிரோதமாக ராணுவம் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆகவே, அதைத் தகுதி இழக்கச் செய்து மக்களாட்சி ஏற்பட வழிசெய்ய வேண்டும்' என்று வழக்குத் தொடர்ந்தார் பேகம் நஸ்ரத்.

விஷயம் ஜியாவின் கவனத்துக்குச் சென்றது. மௌனமாகப் புன்னகை செய்துவிட்டு அடுத்த வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த யாகூப் அலி இரவில் அதிரடியாக நீக்கப்பட்டு, அந்த இடத்துக்கு அன்வர் உல் ஹக் அமர்த்தப்பட்டார். வழக்கை விசாரித்த புதிய நீதிபதி, 'ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதில் சட்டமீறல் எதுவும் இல்லை. நாட்டின் பாதுகாப்புக்கு ராணுவ ஆட்சி அவசியம் என்று கருதப்பட்டது. ஆகவே, அமல்படுத்தப்பட்டது' என்று தீர்ப்பு வழங்கி னார். சர்வம் ஜியா மயம்.

செப்டம்பர் 16, 1978... அதிபர் பஸல் இலாஹி சௌத்ரியின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது. அவரு டைய பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்ய விரும்பினார் ஜியா. மறுத்துவிட்டார் சௌத்ரி. என்ன செய்யலாம்? சௌத்ரிபோல் அதிகம் பிரச்னை செய்யாத மனிதரை அதிபராக நியமிக்கவேண்டும். அதற்குக் கால அவகாசம் இல்லை. அவசரத்தில் செய்கிற காரியமும் இல்லை. கீழே இருப்பவனை மிதித்துக்கொண்டு மேலே போகும் ஆசாமிகள் அதிகம் உள்ள தேசம் இது. அந்தப் பொறுப்பையும் நாமே ஏற்றுக்கொண்டால் என்ன? யோசனை வந்த நிமிடமே நாட்டின் அதிபராகத் தன்னை அறிவித்துக்கொண்டார் ஜியா.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. தேர்தலும் இப்போதைக்கு இல்லை என்றாகிவிட்டது. அதற்காக ஆக வேண்டிய காரியங்களை எல்லாம் ஆறப்போட முடியாது அல்லவா... அப்போது ஜியாவின் கனவில் உருவான திட்டம், மஜ்லிஸ் இ ஷ¨ரா. 'ஆலோசனைக் குழு' என்று இதற்கு அர்த்தம். பொருளாதார வல்லு நர்கள், நிர்வாகிகள், கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், சட்டமேதைகள் என்று பலரையும் உள்ளடக்கிய அமைப்பே இந்த மஜ்லிஸ் இ ஷ¨ரா. நாடு முழுவதிலும் இருந்து 284 பிரதிநிதிகள் அந்த அமைப்புக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். நாட்டை நிர்வகிக்க, திட்டங்களை வடிவமைக்க, பொருளாதாரத்தைச் சரிப்படுத்த, வெளியுறவை மேம்படுத்த என்று அதிபருக்குத் தேவையான அத்தனை ஆலோசனைகளையும் வழங்குவதுதான் அந்த அமைப்பினரின் பணி. 'அந்த உறுப்பினர்கள் எல்லாம் அதிபரால் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்பதால், அந்தக் குழுவால் சுயமாக, சுதந்திரமாக, உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாது' என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.

ஜியா எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. காரணம், அவருடைய கவனம் முழுக்க, அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மீது குவிந்திருந்தது. அங்கு வந்து களேபரம் செய்துகொண்டிருந்த சோவியத் துருப்புகள் பேயாட்டம் ஆடத் தொடங்கியிருந்தன. ஆபத்து. மிகப் பெரிய ஆபத்து. இன்று ஆப்கானிஸ்தானுக்கு வந்தது, நாளை பாகிஸ்தானுக்கு வராது என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஏதாவது செய்தே தீரவேண்டும். நாற்காலியில் சாய்ந்தபடியே கண்களை மூடி சிந்தனையில் மூழ்கியிருந்தார் ஜியா. அந்த நேரம் பார்த்து...

'ஐயா, உங்களை சந்திக்க ஐ.எஸ்.ஐ. இயக்குநர் வந்திருக்கிறார்...'

No comments: