Wednesday 25 March, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (22)

******************

25 March 2009

*****************


நடுவானில் நடந்த நாடகம்!


துணிச்சல்கார மனிதர்என்பது தான் முஷ்ரப் மீது நவாஸ் ஷெரீஃபுக்கு ஈர்ப்பு ஏற்படக் காரணம். 1998-ல் ராணுவத் தளப தியாக இருந்தவர் ஜெனரல் ஜஹாங்கீர் கராமத். ஏனோ நவாஸ§க்கு கராமத் தின் சகவாசம் பிடிக்கவில்லை. அவரு டைய இடத்துக்குப் புதிய நபரைக் கொண்டுவர விரும்பினார். அப்போது முஷ்ரப் பெயர்தான் அவருக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. உடனடியாக அவரை வரசொல்லி உத்தரவு போட்டார் நவாஸ்.

பழைய டெல்லியில் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்ந்த
மத்தியதர இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்த முஷ்ரப், ராணுவக் காதல் வந்தபோது வெறும் ஜவானாகத்தான் முகாமுக்கு வந்தார். படிப்படியான பதவி உயர்வுகளுக்குப் பாதை வகுத்துக் கொடுத்தவை அவருடைய துணிச்சல், உழைப்பு. முக்கியமாகக் கட்டுப்பாடு. இப்போது ஜெனரல் அந்தஸ்துக்கு வந்திருந்தார் முஷ்ரப்.

தலைமைத் தளபதி கராமத் இருக்கும்போது, பிரதமர் தன்னிடம் பேச என்ன இருக்க முடியும் என்று யோசித்துக்கொண்டே பிரதமர் இல்லம் நோக்கி விரைந்தார் முஷ்ரப். வழியில் அவ்வப்போது வாழ்த்து அழைப்புகள், அவருடைய மொபைல் போனை பிஸியாக வைத்திருந்தன. பிரதமரை பார்ப்பதற்குள் விஷயம் புரிந்துவிட்டது முஷ்ரப்புக்கு.

'கராமத் ராஜினாமா செய்து விட்டார். இனிமேல் நீங்கள்தான் ராணுவத் தலைமைத் தளபதி'.

உள்ளுக்குள் உற்சாகம் நிரம்பி வந்தது. கராமத்துக்கு இன்னும் பதவிக்காலம் முடியவில்லை.தவிரவும், தன்னைவிட சீனியர்கள் பலர் இருக்கின்றனர். இருந்தும் தன்னை உச்சாணிக் கொம்பில் உட்காரவைத்திருக்கிறார் நவாஸ். எத்தனை பெரிய வாய்ப்பு... காற்றில் மிதப்பது போல இருந்தது அவருக்கு. பெருமிதத்தை வெளிக்காட்ட வெட் கமாக இருந்தது. கம்பீரமாக சல்யூட் அடித்து நன்றி சொன்னார் முஷ்ரப்.

பதவி ஏற்று சில மாதங்கள் நகர்ந்தன. திடீர் திடீரென ராணுவ அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். யார் எங்கே எப்போது நியமிக்கப்படுகிறார்கள் என்ற விவரமே முஷ்ரபுக்குத் தெரியவில்லை. சாதாரண லெப்டினன்ட் ஜெனரல் ஒருவர் ஓவர் நைட்டில் உயர்பதவிக்கு வந்தார். குழப்பமாக இருந்தது முஷ்ரபுக்கு.

'எல்லாம் என் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் கைங்கர்யம்தான்'.
நமட்டுச் சிரிப்பு சிரித்தார் நவாஸ். ஆத்திரம் ஆத்திரமாக வந்தது முஷ்ரபுக்கு. நவாஸின் நடவடிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டால் அதைவிட அபத்தம் இருக்க முடியாது. உடனடியாக இதற்கு முடிவு கட்டியாக வேண்டும். தன் அதிருப்தியை நவாஸிடம் நேரடியாகவே வெளிப்படுத்த முடிவு செய்தார்.
'அய்யா, ராணுவத்தில் நீங்கள் செய்யும் காரியங்களில் எனக்குத் துளியும் சம்மதமில்லை!' சொல்லிவிட்டாரே ஒழிய... இரவு முழுக்க நவாஸின் எதிர்வினை குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தார். நவாஸின் முகம் கொடூரமாக மாறியது, நினைவை விட்டு அகலவே இல்லை. கோபக்கார மனிதர். என்ன வேண்டுமானாலும் செய்வார். நாம் முந்திக்கொள்ள வேண்டும்.

அப்போது அவருக்குத் தோன்றிய சிந்தனை, போர். காஷ்மீரை மையமாக வைத்து இந்தியாவுக்கு எதிராக ஒரு யுத்தம். ஆனால், நேரடியாக அல்ல... மறைமுகமாக. அதே பழைய டெக்னிக். முதலில் முஜாஹிதீன்கள். பிறகு ராணுவம். கூடவே கூடாது என்று சொல்லிவிட்டார் நவாஸ். காரணம், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்திய பிரதமர் வாஜ்பாய், லாகூர் நோக்கிப் பேருந்தில் வந்துகொண்டிருந்தார்.

சரியென்று தலையசைத்துவிட்டுச் சென்ற முஷ்ரப், தீவிரவாதிகளைப் பார்த்துக் கண்ணசைக்க அவர்கள் களத்தில் இறங்கிவிட்டனர். ஊடுருவலாகத் தொடங்கி, அது யுத்தமாக உருவெடுத்த கதையை நாம் இரண்டாவது அத்தியாயத்திலேயே விரிவாகப் பார்த்துவிட்டோம். அமெரிக்காவின் தலையீட்டுக்குப் பிறகு ஒரு வழியாக யுத்தம் முடிவுக்கு வந்தது.
'பிரதமரான எனக்கே தெரியாமல் கார்கில் யுத்தத்தைத் தொடங்கி விட்டார் முஷ்ரப்!' என்று சொன்னார் நவாஸ். பிரதமருக்குத் தெரியாமல் இங்கே எதுவும் நடப்பதில்லை என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார் முஷ்ரப். விளைவு, கார்கில் யுத்தம் இருவருக்கும் இடையே மிகப்பெரிய விரிசலை உருவாக்கியது.

உண்மையில் கார்கில் யுத்தம் பாகிஸ்தானுக்குத் தோல்வியைக் கொடுத்திருந்தாலும், உள்நாட்டில் முஷ்ரப் மீது அபரிமிதமான நம்பிக்கையை உருவாக்கியிருந்தது. நேர்மாறாக நவாஸ் மீது வில்லன் இமேஜ் உருவாகி யிருந்தது.

நச்சு விதைக்கு நீர் பாய்ச்சிவிட்டோமே என்று நொந்துபோன நவாஸ், முஷ்ரபை அடக்கிவைக்கும் காரியத்தில் இறங்கினார். அப்போது வேலை விஷயமாக இலங்கை சென்றிருந்தார் முஷ்ரப். மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்தினார் நவாஸ். பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதியாக ஜெனரல் ஜியாவுதீனை நியமித்தார். இலங்கையில் காரியம் முடிந்ததும் விமானம் மூலமாக பாகிஸ்தான் திரும்பிக் கொண்டிருந்தார் முஷ்ரப்.

'அய்யா, விமானத்தை இஸ்லாமாபாத்தில் தரையிறக்கக்கூடாது என்று சொல்கிறார்கள், என்ன செய்யலாம்?'

தூக்கிவாரிப் போட்டது முஷ்ரப்புக்கு. பைலட் சொல்வதைத் துளியும் நம்ப முடியவில்லை. முஷ்ரப், அவர் மனைவி உள்ளிட்ட இருநூறு பயணிகள் நடுவானில். அங்கே இறங்கக்கூடாது என்றால் எங்கே இறங்குவது? நவாஸ் புண்ணியத்தில் ஏதோ சதி நடக்கிறது என்பது புரிந்துவிட்டது. சில நிமிடங்களில் கராச்சி கமாண்டர் விமானத் தைத் தொடர்புகொண்டு பேசினார். 'ஒன்றும் பிரச்னையில்லை. இஸ்லாமாபாத்தில் விமானம் இறங்கலாம்.'

எதிரி என்ன நினைப்பார் என்பதை முன்கூட்டியே கணிக்கும் சக்தியை வழங்கிய அல்லாவுக்கு நன்றி சொல்லிக்கொண்டார் முஷ்ரப். ஆம். இலங்கை புறப்படுவதற்கு முன்பே நவாஸின் நடவடிக்கை எப்படி யெல்லாம் இருக்கலாம் என்று ஒரு விதமாக யோசித்துவைத்திருந்தார் முஷ்ரப்.
ராணுவ அதிகாரிகளை அழைத்த அவர், 'நவாஸ் நமக்கு எதிராக ஏதேனும் காய் நகர்த்தினால், உடன டியாக அவரை கைது செய்யுங்கள். ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சகலமும் வந்துவிட வேண்டும். சகலமும் என்றால் மீடியா, அரசாங்கம் உள்ளிட்ட சகலமும்.'

முஷ்ரப் பதவிநீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக ஜியாவுதீன் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி தொலைக்காட்சிகளில் கசிந்த மறுநொடியே, களத்தில் இறங்கிவிட்டது ராணுவம். தொலைக்காட்சி நிலையம், வானொலி நிலையம், விமான நிலையங்கள். இறுதியாக, நவாஸ் ஷெரீஃபையும் கைது செய்துவிட்டது ராணுவம்.

பத்திரமாகத் தரையிறங்கிய முஷ்ரப், உடனடியாக அதிகாரிகளை அழைத்துப் பேசினார். நள்ளிரவில் வானொலியில் முஷ்ரபின் குரல் ஒலித்தது.
'தேசத்தை அபாயத்திலிருந்து மீட்டெடுக்கும் நோக்கத் துடன் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியிருக்கிறது!'

ஜியாவுக்குப் பிறகு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த முஷ்ரப், அடுத்து என்ன செய்வாரோ என்று எல்லோருமே வியர்க்க விறுவிறுக்கப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், மனிதர் தன் எதிரிகளை நசுக்கிப் பார்ப்பதில் ஆர்வம் செலுத்தவில்லை. முதலில் இமேஜ் வளர்க்கும் நடவடிக் கையில் இறங்கினார்.

தலைமை நிர்வாக ஆட்சியாளர் என்ற முறையில் நாட்டில் இருக்கும் அடிப்படைப் பிரச்னைகளில் ஆர்வம் செலுத்தினார். முக்கியமாகப் பொருளாதாரம், வறுமை, கல்வி. 'இந்த மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வேலை செய்யுங்கள்' என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் முஷ்ரப்.
நவாஸ் ஷெரீஃபால் உச்சத்துக்கு வந்த முஷ்ரப், அவர் பாணியிலேயே மேலும் உச்சத்துக்கு செல்ல விரும்பினார். ஆம். இந்தியாவுடன் சிநேகம் வளர்க்க விரும்பினார். கார்கில் யுத்தத்தின்போது அவர் ராணுவத்தளபதி. அரசியல்வாதி அல்ல. இன்று நிலைமை வேறு. அரசியலில் அந்தஸ்து வேண்டுமானால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். தெளிவான திட்டத்துடன் காய் நகர்த்தினார்.

ஜூலை 14, 2001. ஆக்ராவில் இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த நாள் குறிக்கப்பட்டது. ஆனால், மனிதருக்கு தலைமை ஆட்சியாளராக வந்து இந்தியாவுடன் பேசுவதில் கொஞ்சம் தயக்கம். எல்லாமே என்னுடைய பிடியில். பிறகு எதற்கு தலைமை நிர்வாக ஆட்சியாளர் என்று நீட்டி முழக்கவேண்டும்? இனிமேல் அடியேனே பாகிஸ்தானின் அதிபர் என்று அறிவித்தார்.

அதிபர் என்ற முறையில் ஆக்ராவில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒன்றும் பெரிதாக சாதித்துவிடவில்லை என்றாலும், 'அமைதி விரும்பி' என்பதை எல்லோருக்கும் அறிவிக்கக் கிடைத்த அற்புத வாய்ப்பு அது. பயன்படுத்திக் கொண்டார்.

பேச்சுவார்த்தை முடித்து விட்டு பத்திரமாக பாகிஸ்தான் திரும்பியபோது அங்கே நீதிமன்றம் அறிவித்திருந்த தேர்தல் கெடு தேதி பீதியைக் கொடுத்தது. எப்போதுமே பாகிஸ்தானில் ராணுவம்மூலம் ஆட்சியைப் பிடிப்பவர்களுக்கு தேர்தல் என்றாலே வேப்பங்காய் தான். முஷ்ரபுக்கும் அப்படியே. அதற்காக தேர்தலை அப்படியே வெறுத்து ஒதுக்காமல், என்ன செய்தால் அதைத் தனக்குச் சாதக மாக மாற்றிக்கொள்ள முடியும் என்று சிந்திக்கத் தொடங்கினார்.

முதல் கட்டமாக தன் அதிபர் பதவி சட்டபூர்வமானது என்பதை உலகத்துக்கு அறிவிக்க விரும்பினார். ஒரு மசோதா மூலம் இதை சாத்தியப்படுத்திவிடலாம் என்றார்கள் அடிப்பொடிகள். உடனடியாக மசோதா வாக்கெடுப்புக்கு வந்தது. 'உங்களை அதிபராக ஏற்க முடியாது' என்று முரண்டு பிடித்தனர் நவாஸ§ம் பெனாசிரும். ஆனாலும், வாக்கெடுப்பு நடந்தது. முஷ்ரப் அதிபரானது, அதிகாரபூர்வமாக்கப்பட்டது எல்லாம் ராணுவ மகிமை.

அக்டோபர் 12, 2002. இதுதான் தேர்தலுக்காக நீதிமன்றம் கொடுத்திருந்த தேதி. முஷ்ரபும் தயார். ஆம், அவருடைய பெயரைச் சொல்லிக்கொண்டு ஒரு புதிய கட்சி உருவாகியிருந்தது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (காயிதே அஸம்) என்பதுதான் கட்சியின் பெயர். முஷ்ரப் என்ற மூளைக்கார மனிதரின் மேற்பார்வையில் நடந்த தேர்தலில் அவருக்கே அமோக வெற்றி. தேர்தலின் முடிவில் அதிபர் நாற்காலியில் அமர்ந்தார்.

இனி ஒருவரும் வாய் திறக்கமுடியாது என்று நினைத்தவருக்கு, ஒரு திடீர் கலகக்குரல் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

'ஒரே நபர் நாட்டின் அதிபராகவும் ராணுவத் தலைமைத் தளபதியாகவும் செயல்பட முடியாது. கூடாது!'

No comments: