Wednesday 11 March, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (19)

*****************
15 March 2009
*****************

கடவுள் வளர்க்கும் காரியம்!

ஆத்திரம் ஆத்திரமாக வந்தது முஜாஹிதீன் களுக்கு. ஆப்கனை ஆக்கிரமிக்க வந்துள்ள சோவியத்துக்கு எதிராக யுத்தம் என்பது விருப்பம்தான். ஆனால், அதை நடத்தத் தேவையான வலிமை? அப்போது அவர்களுடைய யுத்தப் பயிற்சி, ஆயுத பலம் ஆகியவை எதுவும் சொல்லிக் கொள்கிறாற்போல் இல்லை.

நடப்பதையெல்லாம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்த பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ., தீவிரமாகத் திட்டம் வகுக்கத் தொடங் கியது. ஆப்கனை ஆக்கிரமிக்க வந்திருப்பது சோவியத் ரஷ்யா. இந்தியாவின் உற்ற தோழன். ஆப்கனில் சோவியத்தை அனுமதித்தால், அது நம்முடைய எதிர்காலத்துக்கான தலைவலி. ஆக, நாம் சோவியத்தை எதிர்த்தே தீரவேண்டும்... குறைந்தபட்சம் மறைமுக மாகவாவது.

இன்னொரு கோணமும் இருக்கிறது. சோவியத்துக்கு எதிராக நாம் ஏதாவது செய்தால், அது அதன் பரம எதிரியான அமெரிக்காவுக்கு சந்தோஷத்தைக் கொடுக் கும். அமெரிக்க அதிபரான ஜிம்மி கார்ட்டர், பாகிஸ்தானுக்குக் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருந்த உதவிகளைத் திரும்பக் கொடுக்க முன்வருவார். பணம் தருவார்... ஆயுதம் தருவார்! ஆக, சோவியத்துக்கு எதிராக நாம் எடுத்துவைக்கும் ஒரு அடி, நமக்குப் பல பலன்களைத் தரும்.

தீவிர ஆலோசனைக்குப் பிறகு அதிபர் ஜியாவுல் ஹக்கை சந்தித்துப் பேசினார், ஐ.எஸ்.ஐ. இயக்குநர் அக்தர் அப்துர் ரஹ் மான். அப்போது சோவியத்துக்கு எதிரான யுத்தத்துக்கு முஜாஹிதீன்களுக்கு உதவினால், கிடைக்கப்போகும் பலாபலன்கள் பற்றி எடுத்துச்சொன்னார். எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொண்ட ஜியா, பலத்த யோசனைக்குப் பிறகு அக்தரிடம் முதல் கேள்வியை எழுப்பினார்..

'முஜாஹிதீன்களுக்கு நம்மால் என்ன உதவி செய்ய முடியும்?'

இதற்காகவே காத்துக்கொண்டிருந்தவர் போல விளக்கம் கொடுக்கத் தொடங்கினார் அக்தர். 'எல்லை வழியாக முஜாஹிதீன்களை நம் பக்கம் அழைத்து வருவோம். அவர்களுக்குத் தங்குமிடம், பயிற்சிப் பாசறை அமைத்துக் கொடுப்போம். நம் ஐ.எஸ்.ஐ-யும் ராணுவமும் அவர்களுக்குத் தேவையான ஆயுதப் பயிற்சிகளைக் கொடுக்கும். பிறகு அவர்கள் ஆப்கன் சென்று சோவியத் படைகளை வெளுத்துக் கட்டுவார்கள்!'

'ஆயுதப் பயிற்சியை நாம் கொடுத்து விடுவோம்; ஆனால், ஆயுதங்கள்?'

'இருக்கவே இருக்கிறது சி.ஐ.ஏ. இங்கே நாம் பயிற்சி கொடுப்பது எல்லாமே அமெரிக்க உளவுநிறுவன மான சி.ஐ.ஏ-வின் கழுகுக் கண்களுக்கு அகப்பட்டுவிடும். பிறகு அவர்களே ஆயுத உதவிகளைச் செய்ய முன்வரு வார்கள். அந்த ஆயுதங்களை நாம் முஜாஹிதீன்களுக்குக் கொடுத்து விடலாம். நமக்கு பைசா செலவில்லை. ஆனால், லாபம் வெகு அதிகம். என்ன சொல்கிறீர்கள்?'

'நடத்துங்கள்!' என்று சொல்லி விட்டார் ஜியா. உற்சாகம் பொங்க வேலையை ஆரம்பித்துவிட்டது ஐ.எஸ்.ஐ. முஜாஹிதீன்கள் என்னதான் போராளி களாக இருந்தாலும்... அவர்களில் பெரும்பாலானோருக்கு ஆயுதங்களுடன் நேரடி உறவு இருந்ததில்லை. மனத் தளவில் போராளிகளாக இருந்தனர்; உடல் பலமும் இருந்தது. அவர்களுக்கு ஆயுதங்களை அறிமுகம் செய்து, கையாளக் கற்றுக்கொடுப்பது பெரும் பாடாக இருந்தது ஐ.எஸ்.ஐ-க்கு. நேரடித் தாக்குதல் கெரில்லாத் தாக்குதல் என்று அத்தனையும் அத்துப்படியாகும் வரை ஐ.எஸ்.ஐ. பயிற்சி கொடுத்தது.

விஷயம் சி.ஐ.ஏ-வுக்குச் சென்றது. அப்படியே அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கும் சென்றது. 'நல்ல காரியம் செய்கிறார்கள். நாம் உதவாவிட்டால் எப்படி?' என்று நானூறு மில்லியன் டாலர்களைப் பொருளாதாரம் மற்றும் ராணுவ உதவியாக வழங்கினார் ஜிம்மி கார்ட்டர். 'போட்டுவைத்த ஆப்கன் திட்டம் ஓகே கண்மணி!' என்று ஆட்டம் போடத் தொடங்கியது ஜியாவின் மனசு.

அமெரிக்கா அள்ளிக் கொடுத்ததில் கொஞ்சம் முஜாஹிதீன்களுக்கும் கிள்ளிக் கொடுத்தது பாகிஸ்தான். அதை முதலீடாக வைத்துக்கொண்டு அடுத்தடுத்து முன்னேறிச் சென்றனர் முஜாஹிதீன்கள். எழுபதுகளின் இறுதியில் தொடங்கிய யுத்தம், அடுத்த பத்தாண்டுகளுக்கு நீடித்தது. அல் கொய்தா, ஒஸாமா பின்லேடன், ஜிஹாத், தாலிபன்கள் ஆகிய பதங்களெல்லாம் சர்வதேச மீடியாவில் உலா வரத் தொடங்கியது அந்தப் பத்தாண்டுகளில்தான்!
ரஷ்யப் படையினரை வெளியேற்றிவிட்டுத்தான் மறு வேலை பார்த்தனர் முஜாஹிதீன்கள். இத் தனைக்கும் பிள்ளையார் சுழி போட்ட பாகிஸ்தான் அதிபர் ஜியாவுல் ஹக், மெள்ள ஆப்கன் விவ காரத்தில் இருந்து ஒதுங்கி, பாகிஸ்தானின் அடுத்த கட்ட முன்னேற்றம் குறித்த நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

அது, கடவுள் வளர்க்கும் காரியம்.

ஜியாவுக்கு கடவுள் என்பது மதம். இஸ்லாமிய மதம். ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகை செய்யக் கூடிய ஜியாவை ராணுவ வட்டாரத்தில் மௌலவி என்று செல்லமாக அழைப்பது வழக்கம். அத்தனை தீவிர மதப்பற்றாளர். ஆட்சி நிர்வாகம் என்பது இஸ்லாமிய முறைப்படி மட்டுமே இயங்கவேண்டும் என்பதுதான் ஜியாவின் ஒரே இலக்கு. அதை சாத்தியப்படுத்தும் வழிகள் பற்றித்தான் சதா சர்வகாலமும் சிந்தித்துக் கொண் டிருந்தார்.

அப்போதுதான் மத இயக்கமான 'ஜமாத் இ இஸ்லாமி' என்ற அமைப்பு ஜியாவுடன் வெகுவாக நெருக்கம் காட்டத் தொடங்கியது. மசூதிக்கும் ராணுவத்துக்குமான உறவு மேம்படத் தொடங்கியது ஜியா காலத்தில்தான். அந்த இயக்கத்தின் தலைவர்களுடன் அடிக்கடி பேசியதன் காரணமாக, அவருடைய எண்ணங்கள் எல்லாம் இஸ்லாமிய மயமாக்கலை நோக்கியே குவியத் தொடங்கின. இஸ்லாமிய முறைக்கு ஒவ்வாத நிர்வாக நடைமுறைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது ஜியா அரசு.
அவற்றில் முக்கியமானது ஷரியத் நீதிமன்றங்கள். வழக்கமாகச் செயல்பட்டு வந்த உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களும் இனி இந்த நீதிமன்றங்களையே நாடவேண்டும். குர்ஆனில் சொல்லப் பட்டுள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப, இந்த ஷரியத் நீதிமன்றம் இயங்கும் என அறிவித்தார் ஜியா.

ஏற்கெனவே ஜியா உருவாக்கி வைத்திருந்த 'மஜ்லிஸ் இ ஷ§ரா'வை இப்போது தன் இஸ்லாமிய மயமாக் கலுக்குப் பயன்படுத்த விரும்பினார். உடனடியாக அந்தக் குழுவினரை அழைத்துப் பேசினார். இறுதியாக அவர்களுக்கு நான்கு வேலைகளைக் கொடுத்தார்.

* தேசம் முழுக்க இஸ்லாத்தைப் பரப்பும் பணிகளை முடுக்கிவிடுங்கள்.

* இஸ்லாமிய ஜனநாயகத்தைக் கொண்டுவருவதற்கான திட்டங்களைத் தயார் செய்யுங்கள்.

* தேச நிர்வாகம் மற்றும் அயலுறவு தொடர்பாக இஸ்லாம் என்ன சொல் கிறது என்பதை நெறிமுறைகளாக வகுத்துக்கொடுங்கள்.

* இஸ்லாமிய வழியில் பொருளாதார மற்றும் சமூகச் சீர்த்திருத்தத்தை ஏற்படுத்த வழிவகை செய்யுங்கள்.

பாகிஸ்தானின் ஒவ்வொரு மனிதரும் கண்டிப்பாக குர்ஆன் வாசிக்கவேண்டும். அரசு அலுவலகங்களில் நடத்தப்படும் விழாக்கள் இஸ்லாமிய முறைப்படி மட்டுமே நடத்தப்பட வேண்டும். அரபு மொழியில் மட்டுமே தொலைக்காட்சி, வானொலியில் செய்தி வாசிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் எத்தனை மணிக்குத் தொழுகை நடத்தவேண்டும் என்று வானொலியில் அறிவிப்பு வெளி யானது.
அரபு மொழியை ஆர்வத்துடன் படிக்கும் மாணவர்களுக்குக் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டன. அரசுப் பணியாளர்கள் அத்தனை பேருக்கும் பதவி உயர்வுகள் அவர்கள் செய்கிற வேலையைப் பொறுத்துத் தரப்படவில்லை. இஸ்லாமிய ஒழுங்கு களைக் கடைப்பிடிக்கும் அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. ராணுவத்திலும் இதே அணுகுமுறைகளே அனுசரிக்கப்பட்டன.

மத வரி என்ற பெயரில் புதிய வரிகள் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டன. அந்த நிதியைக்கொண்டு நாடு முழுக்க ஏராளமான மசூதிகள் கட்டப்பட்டன. ரம்ஜான் மாதத்தில் எல்லோ ரும் கண்டிப்பாக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். தவறினால் ஐந்நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மது அருந்துதல், திருடுதல், பாலியல் குற்றம் செய்தல் போன்றவற்றுக்கு இஸ்லாமிய முறைப்படி ஆயுள் சிறை தொடங்கி... கல்லால் அடித்துக் கொலை செய்வது வரை தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் ஜியா. ஒரு பெண் வன்புணர்ச்சி செய்யப்படுகிறார் என்றால், ஷரியத் நீதிமன்றத்தில் நான்கு பேர் சாட்சியம் கூறவேண்டும். இல்லாவிட்டால், அது கள்ள உறவு என்று அறிவிக்கப்படும். ஜியாவின் இந்த அதிரடிகளால் திணறத் தொடங்கினர் பாகிஸ்தான் பிரஜைகள்.

முகம் முழுக்கப் புன்னகையாக இருந்தது ஜியாவுக்கு. தனது கனவுகள் நிறைவேறப் போகின்றன. இஸ்லாம் தழைக்கப் போகிறது. அதுவும் என்னால்; என் நடவடிக்கைகளால். என் ஆட்சியில். வானத்தில் பறப்பது போல உணர்ந்தார் ஜியா. இன்னும் என்ன செய்யலாம் என்று நண்பர்களிடம் கேட்டார்.

'போதும். எல்லை மீறவேண்டாம். கொஞ்சம் அரசியலில் கவனம் செலுத்துங்கள்!' என்று ஆலோசனை கொடுத்தனர் நண்பர்கள். அதற்குக் கட்டுப்பட்டு ஜியா அரசியல் பக்கம் எட்டிப் பார்த்தார். அங்கே ஜியாவின் இஸ்லாமிய மயமாக்கலுக்கு எதிராக அரசியல் கட்சிகள் எல்லாம் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்துக் கொண்டிருந்தன. போராட்டம். பேரணி. ஊர்வலம்.

அவ்வளவுதான் கண்கள் சிவந்துவிட்டன ஜியாவுக்கு. அடுத்து அவரிடம் இருந்து வந்த உத்தரவு அனைத்து அரசியல் கட்சிகளையும் கதிகலங்கச் செய்தது!

No comments: