Monday 9 March, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (17)

*************
8 March 2009
*************
ஜியா என்றொரு சுறா!

'ஆமாம். முறைகேடுகள் நடந்தது உண்மைதான்... மறுக்கவில்லை! எல்லாத் தொகுதிகளிலுமா நடந்துவிட்டது? இல்லையே... வெறும் முப்பது தொகுதிகளில்தானே நடந்துள்ளது. எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம்? போய் வேலையைப் பாருங்கள்!'

-திமிர் குறையாமல் பேசினார் புட்டோ. தன்னம் பிக்கையா... தலைக்கனமா என்று இனம் காண முடியாத வகையில் இருந்தது அவருடைய பேச்சு. கொந்தளித்துவிட்டனர் எதிர்க்கட்சியினர். 'தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்கள். புதிதாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், நாடு மிகப் பெரிய போராட்டங்களை சந்திக்கும். எது உங்களுக்கு வசதி?' கிடுக்கிப்பிடி போட்டனர்.

நிலைமையை சமாளிக்க எதிர்க்கட்சித் தலைவர் களுடன் சமரசம் செய்துகொள்ள விரும்பினார் புட்டோ. இரு தரப்புப் பிரதிநிதிகளும் பேசினர். ஆனால், முடிவு எதுவும் எட்டப்படாமல் விவகாரம் தொங்கலிலேயே இருந்தது. புட்டோவின் திட்டமும் அதுவாகவே இருந்தபடியால், அமைதியாக நாட்களை நகர்த்திக்கொண்டு இருந்தார். ஆறிய கஞ்சி பழங்கஞ்சியாகிவிடும் என்பது அவருடைய எதிர்பார்ப்பு.

அரசியல் வட்டாரம் குழப்பத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் சமயத்தில்... ராணுவப் படையின் தலைவர் ஜியா வுல் ஹக், ஓசையில்லாமல் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். கூடவே லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் அலி சிஸ்தி. அவரை ஜியாவின் மனசாட்சி என்று சொன்னால் பொருத்த மாக இருக்கும்.

'நாட்டில் கொந்தளிப்பு அதிகமாக இருக்கிறது. ஏதாவது செய்தே தீரவேண்டும்!' என்றார் ஜியா. 'இது தான் சரியான வாய்ப்பு என்பதால் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்' என்றார் ஃபைஸ் அலி சிஸ்தி. பலத்த யோசனைக்குப் பிறகு அவர்கள் மேற்கொள்ள இருந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் ஃபேர் ப்ளே' என்று பெயர் வைக்கப்பட்டது. 'நல்ல நாடகம்' என்று அர்த்தம்.
நள்ளிரவு மணி பன்னிரண்டு. திடீரென பிரதமர் புட்டோவின் இல்லத்தில் நின்றிருந்த பாதுகாவ லர்கள் மாற்றப்பட்டனர். மேலிடத்து உத்தரவு என்று விளக்கம் சொல்லப்பட்டது. முற்றி லும் புதிய முகங்கள் ஆயுதங்களோடு நின்ற னர். பிரதமர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு ஏதோ நெருடியது. பிரதமரின் காதுக்குள் கிசுகிசுத்தனர். 'ம்ஹ§ம்... இருக்காது. ஜியா அப்படிச் செய்யக் கூடியவர் அல்ல. கவலைப்படாதீர்கள்!' என்று சமாதானம் சொல்லி அனுப்பிவைத்தார் புட்டோ.

சில நிமிடங்கள் கழித்து வாச லில் ராணுவ வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அதிலிருந்து இறங்கிய அதிகாரி ஒருவர் விறுவிறுவென புட்டோவுக்கு எதிரே வந்து நின்றார். வழக்கமாக அடிக்கும் சல்யூட் எதுவும் இல்லை. புரிந்துவிட்டது புட்டோவுக்கு. ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது. ஜியாவுல் ஹக்

பால் மாறிவிட்டார். நம்பிக்கை துரோகி. முணுமுணுத்தபடியே எதற்கும் ஒரு முறை டெலிபோனில் பேசிவிடலாம் என்று ரிஸீவரை எடுத்தார். உயிரிழந்து கிடந்தது டெலிபோன்.

'எனக்கு ஒன்றும் ஆகாது. எல்லாம் சரியாகிவிடும். அமைதியாக இரு...' வருத்தத்தில் சுருண்டு படுத்திருந்த மகள் பெனாசிரை தேற்றினார் புட்டோ. உண்மையில் அது தனக்கே அவர் சொல்லிக்கொண்ட சுய ஆறுதல். ஜூலை 5, 1977 அன்று அதிகாலையிலேயே முர்ரி நகரத்தில் இருக்கும் பங்களாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் புட்டோ. வழக்கம் போல ரேடியோவில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார் ராணுவ ஆட்சியாளர் ஜியாவுல் ஹக்.
'தேசத்தில் நிகழ இருந்த மிகப் பெரிய உள்நாட்டு யுத்தத்தைத் தவிர்க்கும் வகையில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. அனைத்து மாகாண அரசுகளும் கலைக்கப்படுகின்றன. பீதி வேண்டாம். பயம் வேண்டாம். நான் இருக்கிறேன். ஆகவே கவலையும் வேண்டாம். இன்று தொடங்கி சரியாக தொண்ணூ றாவது நாள் தேர்தல் நடத்தப்படும். பிறகு நாட்டின் நிர்வாகம் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும்!'

பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைக் சேர்ந்த முக்கியமான தலைவர்கள் பலரையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார் ஜியா. வம்பு செய்யும் ஆசாமிகள் என்ற சாயல் தெரிந்தாலே, அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். இதனால் ஜியா வின் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தன எதிர்க் கட்சிகள்.

புட்டோவுக்கு முடிசூட்டுவதற்காக அவருடைய அடிவருடியான ஜியாவுல் ஹக் நடத்தும் நாடகம் இது என்று குற்றம் சாட்டின. இந்த சமயம் பார்த்து ஜூலை 29 அன்று புட்டோ ஜாமீனில் விடுதலை செய்யப்படவே, எதிர்க்கட்சிகள் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கிவிட்டன. 'பார்த்தீர்களா... பார்த்தீர்களா... நாங்கள் சொன்னது உண்மையாகிவிட்டது!' என்று கூவின. மனதுக்குள் சிரித்துக்கொண்டார் புட்டோ.

ராணுவமே எல்லாம் என ஆன பிறகும் புட்டோ மீது துளியும் நம்பிக்கை குறையவில்லை மக்களுக்கு. அவர் ஒரு செல்வாக்கு மிக்க மக்கள் தலைவர் என்பதை அவரைப் பார்க்க வந்த ஜனத்திரள் நிரூபித்தது. அடுத்தடுத்து பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது பாகிஸ்தான் மக்கள் கட்சி. அவருடைய பேச்சைக் கேட்கத் திமிறிக்கொண்டு வந்தது கூட்டம். மக்கள் தீர்ப்புக்கு எதிராக ராணுவ ஆட்சியாளர் செயல்படுகிறார் என்று ஜியாவை கடுமையாக விமர்சித் தார் புட்டோ.

கூட்டங்களில் புட்டோவின் பேச்சு கள், பொதுமக்களின் குரல்கள் எல்லாம் ஜியாவின் பார் வைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.முக்கியமாக பஞ்சாப் மாநிலம் முல்தான் பகுதியில் நடந்த கூட்டத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் திரண்டிருந்தனர். இது ஜியாவை மிகவும் உறுத்தியது. கொஞ்சம் அலட்சியமாக இருந்தாலும் புட்டோ விஸ்வரூபம் எடுத்துவிடுவார் என்பதால், உடனடியாக அவரை கைது செய்ய உத்தர விட்டார் ஜியா. அதற்கு அவர் சொன்ன காரணம் விநோதமானது.

'மக்கள் எல்லோரும் புட்டோ மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே அதிக அளவில் திரண்டு வருகிறார்கள். ஒருவேளை, அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட் டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவரு டைய உயிரைக் காப்பாற்றவேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அவரைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்கிறது ராணுவம்!'

ஆடு, ஓநாய் கதையை நினைவுபடுத்திய இந்த விளக்கம் வருவதற்குள் தன்னுடைய பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக மனைவி நஸ்ரத்தை நியமித்திருந்தார் புட்டோ. செப்டம்பர் 17, 1977 அன்று மீண்டும் கைதான புட்டோ மீது கொலைச் சதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தூக்கிவாரிப் போட்டது புட்டோவுக்கு. 'யாரைக் கொல்ல சதி செய்தேன்? யாஹியா கானையா? அயூப் கானையா? அல்லது ஜியா வுல் ஹக்கையேவா?' -குழம்பிப்போயிருந்த புட்டோவுக்கு தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டது.
'அகமது ராஸா கஸ¨ரி என்பவர் பாகிஸ்தானின் முக்கியமான அரசியல்வாதி. தேர்ந்த வழக்கறிஞரும்கூட. அவருக்கும் புட்டோவுக்கும் இடையேயான முன் விரோதம் காரணமாக, கஸ¨ரியை கொலை செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தார் புட்டோ. ஒரு நாள் காரில் பயணம் செய்துகொண்டிருந்த கஸ¨ரியை துப்பாக் கியால் சுட்டுக் கொல்ல முயன்றார், புட்டோவின் கைக்கூலி ஒருவர். அப்போது அருகில் அமர்ந்திருந்த கஸ¨ரியின் தந்தை குண்டடிபட்டு மரணமடைந்தார். அந்த சம்பவம் தவிர பதினான்கு முறை கஸ¨ரியை கொலை செய்ய புட்டோவின் கைக்கூலிகள் முயற்சி செய்துள்ளார்கள். அத்தனையும் புட்டோவின் கண்ணசைவுக்கு ஏற்ப நடந்தவையே. ஆகவே, கொலைச்சதி தீட்டிய வழக்கில் நீங்கள் கைது செய்யப்பட்டுள் ளீர்கள்!'

வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. யாருமே எதிர்பாராத திருப்பமும் வந்தது. சாட்சிகள் முரண்பாடாக இருக்கின்றன. குற்றச்சாட்டுகள் குழப்பத்தைத் தருகின்றன என்று கூறி புட்டோவை விடுதலை செய்தார் நீதிபதி சமாதனி. போன உயிர் வந்து சேர்ந்திருந்தது புட்டோவுக்கு. ஆனாலும், சளைக்காமல் அடுத்த ஆயுதத்தை எடுத்தார் ஜியா.

'அகமது ராஸா கஸ¨ரியை கொலை செய்ய சதி செய்த குற்றத்துக்காக ராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறீர் கள்!'

வாயடைத்துப்போனார் புட்டோ.ஜியாவை வெறும் அமைதிப் புறா என்று நினைத்திருந்தார் புட்டோ. திடுதிப்பென மாபெரும் சுறாவாக அவதாரம் எடுத்து தன்னையே விழுங்கக் கூடியவராக இருப்பார் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் கைது. வழக்கு விசாரணை. இந்த முறை வலுவாக வலை பின்னி யிருந்தார் ஜியா.

வழக்கமாக இதுபோன்ற வழக்குகள் கீழ் நீதிமன்றத் துக்குத்தான் வரும்.அதன் தீர்ப்புக்குப்பிறகு தேவைப் பட்டால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு செல்ல லாம். ஆனால், புட்டோ மீதான வழக்கு மட்டும் நேரடியாக லாகூர் உயர் நீதிமன்றத்தில் வந்திருந்தது. இதன் மூலம் புட்டோவுக்கு நியாயமாகக் கிடைக்கக்கூடிய மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டது. எல்லாம் ஜியாவின் கைங்கர்யம்.

உயர் நீதிமன்றத்தில் புட்டோ வழக்கை விசாரிப்பதற்கென்று நீதிபதி மௌல்வி முஷ்டாக் அலி தலைமையில், ஐந்து நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். புட்டோவுக்குத் தரப் பட்டிருந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. அக்டோபர் 24, 1977 அன்று வழக்கு விசா ரணைகள் தொடங்கின. நீதிமன்றத்தில் ஆஜரான புட்டோவை அவருக்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கூண்டில் வைத்து விசாரணை செய்தனர்.

பலத்த வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு மார்ச் 18, 1978 அன்று புட்டோவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று சொல்லிவிட்டார் புட்டோ. ஆனால், அவருடைய குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். மீண்டும் வழக்கு விசாரணை. கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்குத் தன்னிலை விளக்கம் கொடுத்தார் புட்டோ. அப்போது ஒரு குறிப்பைக்கூட கைவசம் வைத்துக்கொள்ளாமல் பேசினார். எல்லோரையுமே பிரமிக்க வைத்தது புட்டோவின் வாதம். எல்லாமே விழலுக்கு இறைக்கும் நீர் என்பதை புட்டோ நன்றாகவே உணர்ந்திருந்தார். அதுதான் நடந்தது.

மார்ச் 24, 1979 அன்று புட்டோவுக்கான தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. மறு நாள் ராவல்பிண்டியில் இருக்கும் மத்திய சிறைச்சாலை புட்டோவின் இறுதி யாத்திரைக்காகத் தயாராகியது. கடைசி நிமிடத்தில் ஜியா மனம் மாறுவார் என்று ஏங்கிக்கிடந்தனர் புட்டோவின் குடும்பத்தினர். தொண்டர் களும் அப்படியே. ஜியா மாறவில்லை; ஆகவே, தீர்ப்பும் மாறவில்லை!

கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டு காலப் பொதுவாழ்க் கையை ஒற்றைத் தூக்குக் கயிறு முடித்துவைத்தது. புட்டோவின் மரணம், ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்தது. அதே சமயம், மாபெரும் மக்கள் சாம்ராஜ்ஜியத்தை நடத்திய புட்டோவையே தூக்கில் போடும் அளவுக்கு வன்மம் பொருந்திய மனிதர் பாகிஸ்தானின் தலைமைப் பீடத்தை ஆக்கிரமித்திருக்கிறார் என்பது மக்களை வெலவெலக்க வைத் திருந்தது!

No comments: