Monday 16 March, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (20)

***************
18 March 2009
***************

வந்தார் பெனாசிர் புட்டோ!

தேர்தல் வேண்டும், அதுவும் உடனடியாக. 1981--ம் ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானில் இருந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் உச்சரித்த ஒரே கோஷம் இதுதான். இதை ஜியா துளியும் கண்டுகொள்ளவில்லை. தன் இமேஜை வளர்ப்பதற்காக இஸ்லாம் என்ற போர்வையை அணிந்துகொண்டு திரியும் ஜியாவுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் கொந்தளித்தன.
விஷயம் ஜியாவின் கவனத்துக்குச் சென்றது. மனிதர் யோசித்தார். கலகம் செய்பவர்களை எங்கே அடித்தால் வலிக்கும் என்பது அவருக்கு நன்றாகவே
தெரியும். அனுபவஸ்தர். ஏகப்பட்ட அரசியல் கட்சிகள் ஆவேசக்குரல் எழுப்பிக்கொண்டிருக்கின்றன. எல்லோருமே பெரிய ஆட்கள் கிடையாது. பெரும்பாலும் நண்டு, சிண்டு, வண்டு, வாண்டுகளே. எல்லோர் மீதும் கை வைப்பதற்குப் பதிலாக மெகா சைஸ் திமிங்கிலமான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மீது கைவைத்தால், மற்றவை பெட்டிப்பாம்பாகிவிடும் என்று நினைத்தார்.

'இந்த நொடியிலிருந்து பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.'

உத்தரவுக்கு அர்த்தம் புரியாமல் குழம்பியது, அந்தக் கட்சியின் தலைமை. உடனடியாக ஜியாவிடம் இருந்து விளக்கம் வந்தது.

பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது. ஊர்வலம், பேரணி பற்றிய சிந்தனையே வரக்கூடாது. போராட்டம் என்பதை நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. ஆனால், அரசியல் கட்சி மட்டும் இருக்கலாம், இயங்கலாம்.

சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை, அரசியல் கட்சிகளுக்கு! மேலே இருக்கும் சங்கதிகள் எதுவும் இன்றி அரசியல் கட்சிகள் எப்படி இயங்க முடியும்?

குரல்வளையை பகிரங்கமாக நெரிக் கிறார் ஜியா என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தெளிவாகப் புரிந்தது. இன்று பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஏற்பட்ட நிலை நாளை எல்லாக் கட்சிகளுக்கும் ஏற்படாது என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. இனியும் மூட்டையில் இருந்து பிரிந்த நெல்லிக்காய்களைப் போல சிதறிக்கிடந்தால் தன் பூட்ஸ் காலால் எல்லா அரசியல் கட்சி களையும் நசுக்கிவிடுவார் ஜியா என்று நினைத்தனர்.
உண்மையில் அவர்களுக்கு வந்தது பயம். உயிர்பயம். எதிர்காலம் குறித்த அச்சம். மறுநொடியே எல்லாக் கட்சிகளும் ஒரு குடையின்கீழ் திரள்வது என்று முடிவு செய்துவிட்டன. பாகிஸ்தானில் இயங்கிவந்த ஒன்பது முக்கியக் கட்சிகளின் தலைவர்களும் கராச்சியில் சந்தித்துப் பேசினர்.

'வாருங்கள் ஒன்றிணைந்து போராடுவோம். தேர்தல் நடத்த வலியுறுத்துவோம். ஜனநாய கத்தை மீட்டெடுப்போம்.'

எல்லோரும் தலையசைக்கவே ஒன்பது கட்சிகளின் கூட்டமைப்பு உருவானது. அதேசமயம் பாகிஸ்தானில் இயங்கிவந்த அடிப்படைவாதக் கட்சிகள் சில, இந்த அமைப்பில் சேராமல் தனித்தே இயங்கத் தொடங்கின.
அரசியல் கட்சிகளின் திடீர் சங்கமம் ஜியாவை உசுப்பேற்றியது. 'தனித்தனியே தலைவலி கொடுத்தது போதாதென்று கூட்டம் சேர்த்துக்கொண்டு வேறு குழப்பம் செய்கிறீர்களா? இருங்கள், உங்கள் கால்களை உடைக்கிறேன்!' என்று நறநறத்தார். அவருடைய எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் செயல்படத் தொடங்கியது பாகிஸ்தான் காவல்துறை. அரசுக்கு எதிராக மூச்சுவிட ஒருவர் எத்தனிக்கிறார் என்று தெரிந்தாலே அவரைக் கைது செய்து கம்பிகளுக்குள் திணித்தது.

நித்தம் நித்தம் கைதுகள் தொடர்ந்தன. அந்தக் களே பரத்தில் அரசியலுக்குப் புதுமுகமாக அறிமுகம் ஆகியிருந்த புட்டோவின் மகள் பெனாசிர் புட்டோவையும் கைதுசெய்து உள்ளே வைத்துவிட்டது ஜியா அரசு. கலவரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சித் தொண்டர்களை சுட்டுத்தள்ளவும் அரசு தயங்கவில்லை. பலத்த போராட்டத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட பெனாசிர், பாகிஸ்தானிலிருந்து வெளியேறி வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்.

1986 ஏப்ரல் மாதம் பெனாசிர் புட்டோ பாகிஸ்தான் திரும்பியபோது அவருக்கு ஆதரவாக மக்கள் சக்தி திரண்டிருந்தது. அவருடைய பேச்சைக் கேட்க வந்த கூட்டத்தின் அளவு புட்டோவின் பொதுக்கூட்டங்களை நினைவூட்டின. இதோ தேர்தல், அதோ தேர்தல் என்று போக்குக் காட்டிக்கொண்டிருந்த ஜியாவுக்கு இப்போது உண்மையிலேயே தேர்தல் நடத்தும் சிந்தனை வந்திருந்தது.
'அன்புமிக்க மக்களே, நீங்கள் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்பட இருக்கிறது. அநேகமாக 1988 நவம்பரில் தேர்தல் நடத்தப்படும். தயாராகுங்கள்.'

ஜியாவின் அறிவிப்பு பொதுமக்களை சந்தோஷப்படுத் தியது. அரசியல் கட்சிகளைக் குதூகலிக்க வைத்தது. ஆக வேண்டிய காரியங்கள் அத்தனைக்கும் தேவையான உத்தரவுகளை ஒருபக்கம் பிறப்பித்துக் கொண்டே இருந் தாலும் ஜியாவின் கவனம் முழுக்க, பஹவல்பூர் அருகில் இருக்கும் தமேவாலி என்ற நகரின் மீதே குவிந்திருந்தது. அங்கே தயாராக இருக்கும் அமெரிக்கத் தயாரிப்பு பீரங்கி ஒன்றைப் பார்வையிடுவதற்காகத் தயாராகிக் கொண் டிருந்தார் ஜியா.

விமானம் தயார். உடன் வருவதற்கு அமெரிக்க தூதர் ஆர்னால்டு ரஃபேல் மற்றும் ராணுவ உயரதிகாரி ஆகியோரும் தயார். பஹவல்பூர் வந்திறங்கிய ஜியா, பீரங்கி அணிவகுப்பைக் கண்டுகளித்தார். முகம் முழுக்க புன்னகை. மனம் முழுக்க சந்தோஷம். உற்சாகம் குறையாமல் ஏறி விமானத்தில் உட்கார்ந்தார். புறப்பட்ட இரண்டாவது நிமிடம் நடுவானில் வெடித்துச் சிதறியது விமானம். ஜியாவின் உடலும்தான்.

ஆகஸ்ட் 17, 1988 அன்று நடுவானில் நிகழ்ந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது இன்றுவரை புரியாத புதிர்தான். பாகிஸ்தான் என்ற குழப்பத்தின் விளைநிலம் மீண்டும் குழப்பத்தில் மூழ்கியது. நேற்றுவரை நாட்டின் அத்தனை அதிகாரங்களையும் தன் உள்ளங்கைக்குள் குவித்து வைத்திருந்த ஜியாவின் மரணம், பாகிஸ்தானில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. அடுத்தது என்ன? இதுதான் அப்போது எல்லோர் மனத்திலும் எழுந்த கேள்வி.

விடை என்று அவர்கள் நினைத்தது, குலாம் இஷாக் கான் என்பவரைத்தான். ஜியாவின் இரும்புக்கரங்களுக்குள் அடங்கிய பாகிஸ்தானின் செனட்டுக்கு அவர்தான் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருந்தார். ராணுவ உயரதிகாரிகள் அத்தனை பேரும் இஷாக் கானையே அதிபராகச் செயல்படுமாறு கேட்டுக்கொண்டனர். பலமாக யோசித்த இஷாக் கான், 'உங்கள் விருப்பத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இது தாற்காலிக ஏற்பாடு தான். திட்டமிட்டபடி விரைவில் தேர்தல் நடத்தப்படும்' என்று சொல்லி, அதிபர் நாற்காலியில் அமர்ந்தார்.

கொடுத்த வாக்குறுதியை எந்தக் காரணத்தை முன்னிட்டும் காப்பாற்றிவிடக் கூடாது என்பதில் கண்ணுங் கருத்துமாக இருப்பவர்கள் பாகிஸ்தான் அதிபர்கள். புதிய அதிபர் இஷாக் கானும் அந்த ரகத்தைச் சேர்ந்தவர் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஆனால், மனிதர் வெள்ளை மனசுக்காரர். சொன்னபடி நவம்பர் 16, 1988-ல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். தேர்தல் ஏற்பாடுகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டன.
பெனாசிர் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி உற்சாகம் பொங்க தேர்தலை எதிர்கொண்டது. எல்லா கட்சிகளும் தங்களுடைய மறுவாழ்வுக்கான களமாகவே தேர்தல் களத்தைப் பார்த்தன. தேர்தல் முடிந்தது. புட்டோ என்ற மந்திரச் சொல் மிகப்பெரிய மாயத்தை நிகழ்த்திக் காட்டியிருந்தது. ஆம், அரசியலுக்கு முற்றிலும் புதியவரான பெனாசிர் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு அபரிமிதமான ஆதரவை வழங்கி, ஆட்சிக் கட்டிலை ஒப்படைத்தனர் பாகிஸ்தான் வாக்காளர்கள்.
முப்பந்தைந்து வயதில் பிரதமர் பதவியில் அமர்ந்த முதல் அரசியல்வாதி என்ற பெருமை பெனாசிருக்குக் கிடைத்தது (முதல் பெண் பிரதமர் என்று தனி யாகச் சொல்லவேண்டுமா என்ன?). நாட்டில் ஜனநாயகம் மறுபிரவேசம் செய்துவிட்டதாக ஊடகங்கள் புளகாங்கிதம் அடைந்தன. உலக நாடுகள் எல்லாமே பாகிஸ்தான் அரசியலில் ஏற்பட்ட இந்தத் திடீர் திருப்பத்தை ஆச்சர்யம் குறையாமல் பார்த்துக்கொண்டிருந்தன. முக்கிய மாக, இந்தியா.
ஆட்சிக்கு வந்துவிட்டாரே ஒழிய பெனா சிருக்கு ஒவ்வொரு நகர்வும் சிரமமாகவே இருந்தது. சொந்த சகோதரர்களான முர்தஸா புட்டோ, ஷா நவாஸ் புட்டோ என்ற தீவிரவாத இயக்கத் தலைவர்கள் ஒரு பக்கம் (ஜுல்ஃபிகர் அலி புட்டோ கைதுக்குப் பிறகு அல்ஜுல்ஃபிகர் என்ற இயக்கத்தைத் தொடங்கி, ஜியாவுக்கு எதிராக சண்டமாருதம் செய்ய முயற்சி செய்து தோற்றுப்போனவர்கள்...) பெனாசிர் ஆட்சிக்குத் தங்களால் எந்த அளவுக்குக் கெட்ட பெயர் வாங்கித் தரமுடியுமோ அந்த அளவுக்கு வாங்கித் தந்துகொண்டிருந்தனர்.

பெனாசிரின் காதல் கணவரான ஆசிஃப் அலி சர்தாரி இன்னொரு பக்கம், மனைவியின் இமேஜைக் குழிதோண்டிப் புதைக்கும் காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சீமான் வீட்டு செல்லப் பிள்ளையாகத் திரிந்துகொண்டிருந்தவர் ஆசிஃப் அலி சர்தாரி. பார்த்த மாத்திரத்திலேயே மனத்தைப் பறிகொடுத்த பெனாசிர், சர்தாரியைத் திருமணம் செய்துகொண்டார். என்னதான் பணம், பகட்டு எல்லாம் இருந்தாலும்கூட சர்தாரிக்கு ஏனோ கையூட்டின் மீது காதல் வந்துவிட்டது.

'அரசாங்கத்தில் ஏதும் காரியம் ஆக வேண்டுமா? சர்தாரிக்கு பத்து பர்சென்ட் வெட்டுங்கள். காரியம் கனகச்சிதம்.' இதுதான் அப்போது தொழிலதிபர்கள், சர்தாரி மீது வைத்திருந்த அபரிமிதமான நம்பிக்கை. கைநீட்டிப் பைசா வாங்கிவிட்டால், மனிதர் உயிரைப் பணயம் வைத்தாவது காரியத்தை முடித்துவிடுவார் என்று பரிபூரணமாக நம்பினர். விஷயம் மெள்ள மெள்ள மீடியாவுக்குக் கசிந்தது. தர்ம சங்கடத்தில் நெளிந்தார் பெனாசிர்.
அவரை மேலும் சங்கடப்படுத்தும் வகையில் ஹைதராபாத் மாநிலத்தில் பெரிய கலவரம் உருவானது. இனக்கலவரம். மொஹாஜிர்களுக்கும் சிந்திக்களுக்கும் இடையே 'நீயா - நானா' போட்டி விஸ்வரூபம் எடுத்தது. வன்முறையாக வெடித்தது. பெனாசிர் சமாளிக்க முடியாமல் திணறினார் என்று சொல்லமுடியாது. கொஞ்சம் மெனக்கெட்டால் கலவரத்தை அடக்கி விடலாம். ஆனால், அதற்குள் குறுக்கே புகுந்துவிட்டார் அதிபர் இஷாக்கான்.
'ம்ஹ¨ம்... வேலைக்கு ஆகாது. எல்லா வற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் வீட்டுக்குப் போகலாம்.'

ஆம். நல்ல மனிதர் என்று பெனாசிரால் நம்பப்பட்ட இஷாக்கான், அதிரடியாக ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றம் செய்தார். நிலைகுலைந்து போனார் பெனாசிர். வெறும் ஒன்றரை ஆண்டு களில் ஜனநாயகம் தன் மூச்சை நிறுத்திய அதிர்ச்சி அவருக்கு. சிறை யில் அடைக்கப்பட்ட பெனாசிருக்கு அரசியல் களத்தில் புதிய எதிரி உருவாகியிருந்தார். அவர், நவாஸ் ஷெரீஃப்!
வீசுமா ராணுவக் காற்று?
*******************************
கொதிநிலையில் தகித்துக்கொண்டிருக்கிறது தற்போதைய பாகிஸ்தான். நாடு முழுக்க பேரணி, வன்முறை, அதிரடிக் கைதுகள், எந்த நொடியில் வேண்டுமானாலும் புரட்சி வெடிக்கும் என்கிற சூழல்!

இத்தனைக்கும் பின்னணி இதுதான்... முஷ்ரப் காலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் அதே பதவியில் நியமிக்கவேண்டும் என்பது அங்குள்ள வழக்கறி ஞர்களின் நீண்டநெடுநாள் கோரிக்கை. தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுக்கு ஒரு கொழுகொம்பு கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், இந்த விவகாரத்தைப் புளியங்கொம்பாகப் பிடித்துக்கொண்டார்.

நாடுதழுவிய அளவில் நான்கு நாட்களுக்குப் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்தார் ஷெரீஃப். ஏற்கெனவே தீவிரவாதம், ஊழல் என்று அதிருப்தி மனப்பான்மையில் இயங்கிய இம்ரான்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் அதிபர் சர்தாரிக்கு எதிராக அணிதிரள... பதற்றம் பற்றிக்கொண்டது பாகிஸ்தானில். விஷயம் கேள்விப்பட்ட ராணுவத் தளபதி பர்வேஸ் கயானி, வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கிவிட்டார்.
'என்ன செய்வீர்கள் என்று தெரியாது. போராட்டம், பேரணி என்று எதுவும் நடக்கக் கூடாது. அவ்வளவுதான், எல்லாவற்றையும் தடுத்து நிறுத்துங்கள். இல்லாவிட்டால், ராணுவம் தன் கடமையைச் செய்யும்.'

ராணுவத் தளபதியின் பகிரங்க மிரட்டல், ஈரான் சென்றிருக்கும் அதிபர் சர்தாரியின் கவனத்துக்குச் சென்றது. உடனடியாக பேரணிக்குத் தடை விதித்தார். ஆனாலும், 'அதிபரின் உத்தரவு எங்களைக் கட்டுப்படுத்தாது!' அறைகூவல் விடுத்து, பேரணியையும் ரகளையாகத் தொடங்கிவிட்டார்
ஷெரீஃப். தடையை மீறிய அரசியல் கட்சித் தொண்டர்களைக் கொத்துக்கொத்தாகக் கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஊர்வலம் தொடர்கிறது.

'நடப்பது எதுவும் நன்றாக இல்லை!' என நினைத்த ராணுவத் தளபதி பர்வேஸ் கயானி, அவசரமாக பிரதமர் யூசுப் ராஸா கிலானியைச் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். அநேகமாக பாகிஸ்தானில் மீண்டும் ராணுவக்காற்று வீசத்தொடங்கும் என்றே தோன்றுகிறது!

No comments: