Wednesday 25 March, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (23)

****************
29 March 2009
****************
தொடங்கியது திருவிழா!

பேசாமல் சண்டைக்காரன் காலில் விழுந்துவிட வேண்டியது தான். தீவிர யோசனைக்குப் பிறகு முடிவெடுத்துவிட்டார் முஷ்ரப். எதிர்ப் பதற்கே பிறப்பெடுத்த கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து நிற்கின்றன. அவர்களைப் பகைத்துக்கொண்டு சாதிக்கப்போவது ஒன்றுமில்லை. மாறாகக் கொஞ்சம் இறங்கிவந்து அடங்கிப் போகலாம். ஒரு கல் விட்டுப்பார்க்கலாம் என்று நினைத்தார்.

'முட்டாஹிடா மஜிலிஸ் இ அமல்' என்ற எதிர்க்கட்சிகள் கூட்டமைப்புத்தான் முஷ்ரப்புக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த அமைப்பின் முக்கியஸ்தர்களிடம் பேசினார் முஷ்ரப்.

'அய்யா, எனக்கும் இரண்டு பதவிகளில் இருப்பது சிரமமாகத்தான் இருக்கிறது. விரைவில் ராணுவ உடைகளைக் கழற்றி விடவே ஆசைப்படுகிறேன். அதற்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவை. அதிகமில்லை. வரும் 2004-ல் கண்டிப்பாக ராணுவப் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். அதிபர் என்ற ஒற்றைப் பதவியில் மட்டுமே நீடிக்க விரும்புகிறேன். என்ன ஒன்று... அதிகாரபூர்வமான அதிபராகச் செயல்பட விரும்புகிறேன். அதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைத்தால் நன்றாக இருக்கும்!'

ஆனானப்பட்ட அதிபரே அடங்கி ஒடுங்கிக் கேட்கும்போது, அலட்சியம் செய்யமுடியுமா? தலையசைத்துவிட்டனர். எதிர்க்கட்சிகளுடன் நயமாகப் பேசி, நாசூக்காகப் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் அது. ஜென்டில்மேன் அக்ரிமென்ட் என்று சொல்லலாம். நாளைக்கே முஷ்ரப் மனம் மாறிவிட்டால், ஒருவரும் வாய் திறந்து கேட்க முடியாது. எதிர்க்கட்சிகளின் பரிபூரண சம்மதம் முஷ்ரப்புக்குக் கிடைத்தது.

உடனடியாகத் தேர்தலை அறிவித்தார். அதிபர் பதவிக்கான தேர்தல். எலக்டோரல் காலேஜ் வாக்குகள் என்று சொல்லப்படும் மொத்தமுள்ள 1,170 வாக்குகளில் 658 வாக்குகள் முஷ்ரப்புக்குக் கிடைத்தன. வெற்றி. அபாரமான வெற்றி. இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு என்னை யாரும் தொட்டுக் கூடப் பார்க்க முடியாது. துள்ளிக் குதிக்கவேண்டும் போலஇருந்தது.

உற்சாகத்தை அடக்கியபடியே அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்தார். ஆம், தன்னுடைய கண்ணசைவுக்கு ஏற்ப பிரதமராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ஜஃபருல்லா கான் ஜமாலிக்கு பதிலாக, சௌகத் அஜீஸ் பிரதமரானார். சந்தேக புத்தி என்பது முஷ்ரப்பின் பூர்வகுணம். கையில் ரேகைகள் இருக்கிறதா இல்லையா என்பதைக் கூட அடிக்கடி உற்றுப்பார்த்து ஊர்ஜிதம் செய்யக் கூடியவர். ஆனால், பிரதமர் மாற்றத்துக்குக் காரணம் உள்கட்சிக் குழப்பம் என்று செய்தி வெளியானது. உண்மையில் இது முஷ்ரப்பின் கைங்கர்யம் என்று அரசியல் வட்டத்தில் நமட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டனர்.

இதுபோன்ற பொரணிகளை எல்லாம் லட்சியம் செய்யும் பழக்கமே முஷ்ரப்புக்கு கிடையாது. துளியும் அசராமல் அடுத்த அஸ்திரத்தை எடுத்தார். முன்பே தயார் செய்து வைத்திருந்த அஸ் திரம். நாட்டின் அதிபரே ராணுவத்துக்கும் தளபதியாகச் செயல்பட முடியும் என்ற சட்டம் அமலுக்கு வந்தது.

கிராபிக்ஸில் தங்களுடைய மூக்கு கழன்று விழுந்தது போல இருந்தது எதிர்க்கட்சி ஆசாமிகளுக்கு. காதிலும் பந்து பந்தாகப் பூ! நம்ப வைத்து நடுமுதுகில் குத்தியிருந்தார் முஷ்ரப். இனிமேல் நான்கு ஆண்டுகள் யாரும் எவரும் என்னை ஆட்ட முடியாது; அசைக்க முடியாது. குறைந்தபட்சம் அருகில் கூட நெருங்க முடியாது.

தங்கள் பிதாமகர் உச்சாணிக்கொம்பில் இருக்கிறார். ஆபத்து நம்மை நெருங்கினால் நமக்கு ஒன்றுமில்லை. ஆபத்துக்குத்தான் சிக்கல் என்று நினைத்தனர் முஷ்ரப்பின் சிஷ்யகோடிகள். துணிச்சலாக ஊழல் குளத்தில் மூழ்கி முத்தெடுக்கத் தொடங் கினர். இன்ன துறை என்று இலக்கு வைத்துக்கொள்ளவில்லை. எல்லாம்... எல்லாம் நமக்கே என்று கும்மாளம் போட்டனர். எல்லாத் துறைகளிலும் ஊழல் பிசாசு ருத்ர தாண்டவம்ஆடியது.
பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் ஊழல் செய்யும் விஷயம் ஒன்றும் பாகிஸ்தான் மக்களுக்குப் புதிய விஷயமில்லை. புட்டோ காலத்திலும் ஊழல் இருந்தது. அவருக்கு முன்பும் இருந்தது. அவரின் மகள் காலத்திலும் ஊழல் இருந்தது. ஆனால், இப்போது அதைப் பற்றிப் பேச... தோண்டித் துருவ ஊடகங்கள் மிகுதியாகிவிட்டதுதான் பிரச்னை.

'டிரான்ஸ்ஃபரன்சி இன்டர்நேஷனல்' என்ற நிறுவனம், அரசியல்வாதி அல்லது ஆட்சியாளர் எங்கே சோரம் போவார் என்று எல்லா இடங்களிலும் தங்களுடைய கேமரா கண்களைப் பொருத்தி வைத்திருக்கும் நிறுவனம். இங்கே டெஹல்கா இருக்கிறது இல்லையா... அதைப் போல. ஊழல் வாடை ஊரையே நாறடித்துக்கொண்டிருந்தது. அப்புறமென்ன... டிரான்ஸ்ஃபரன்ஸி இன்டர்நேஷனல் வரிந்து கட்டிக்கொண்டு சர்வேயில் இறங்கியது.
முஷ்ரப்பின் ஆட்சிக்கும் பிராக்ரஸ் ரிப்போர்ட் தயார் செய்வதுதான் அதன் அஜெண்டா. பொத்திப் பொத்தி வைத்திருந்த கோபம், அதிருப்தி, வெறுப்பு என்ற அனைத்து உணர்ச்சிகளையும் அந்த நிறுவனத்திடம் கொட்டித் தீர்த்துவிட்டனர் பொதுமக்கள். எதிர்க்கட்சிகளைக் காட்டிலும் முஷ்ரப்பை முழுமையாகப் புரிந்து வைத்திருந்தவர்கள் பொதுமக்கள்தான் என்பது அந்த ஆய்வில் அம்பலமானது.

ஆய்வு முடிவுகளை பகிரங்கமாக அரங்கேற்றம் செய்தது அந்த நிறுவனம். பற்றிக்கொண்டது நெருப்பு. எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு அலை. 'முஷ்ரப் ஒழிக... முஷ்ரப் ஒழிக!' நெருக்கடி முற்றியது. என்ன செய்யப்போகிறார் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சமயத்தில், நிதானம் கலையாமல் இருந்தார் முஷ்ரப். நான் எடுத்துவைக்கும் அடுத்த அடி அத்தனை பேரையும் கதிகலங்கச் செய்யவேண்டும். இதுதான் முஷ்ரப்பின் அப்போதைய ஒரே சிந்தனை.

யாருமே கைவைக்க யோசிக்கும் ஒரு துறையில் கை வைத்தார். ஆம், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த இஃப்திகார் முகமது சௌத்ரியைக் தற்காலிகப் பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். எதற்கு நீதிபதியை வம்புக்கு இழுக்கவேண்டும்? பெரிய இடத்துப் பொல்லாப்பு எதற்கு? விநாச காலே விபரீத புத்தி என்று நினைத்துக்கொண்டனர் பொதுமக்கள்.

அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். ஆனால், யதார்த்தம் சிக்கலானது. முஷ்ரப்பின் ஊழல் அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நீதிபதி இஃப்திகார் ரகசிய ஆலோசனை செய்வதாகத் தகவல் ஒன்று அதிபருக்கு காற்றுவாக்கில் காதில் விழுந்தது. பழைய குப்பைகளைக் கிளறி எடுப்பதில் மனிதர் கில்லாடி என்ற விஷயம் தெரிந்ததும் விறுவிறுத்துப் போனது முஷ்ரப்புக்கு. இதுதான் பதவி நீக்கம் குறித்து அவரைச் சிந்திக்க வைத்தது.

கொஞ்சமும் தாமதிக்காமல்உத்தரவு பிறப்பித்தார். இது நடந்தது மார்ச் 9, 2007. அவ்வளவுதான். 'நீதி செத்துவிட்டதே!' என்று நீதிபதி பதவி நீக்கத்துக்கு எதிராக வழக்க றிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விஷயம் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. வழக்கு. விசாரணை. பதவிநீக்கம் செய்யப் பட்ட நான்காவது மாதத்தில் 'தற்காலிகப் பணிநீக்கம் செல்லாது!' என்று தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்.

கண்கள் சிவந்துவிட்டன முஷ்ரப்புக்கு. 'ஓஹோ, அத்தனை பெரிய ஆசாமியா அவர். பிழைத்துப் போகட்டும். கொஞ்சம் விட்டுபிடிக்கலாம்!' என்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டார். இந்த சமயத்தில்தான் வெளிநாடுகளில் வசித்துவந்த பெனாசிர் புட்டோ மீண்டும் நாடு திரும்பும் ஆசையை வெளிப்படுத்தினார். அதன்படியே அக்டோபர் 18, 2007 அன்று பாகிஸ்தான் வந்திறங்கினார். தேர்தல் நடக்கும் என்பதற் கான சாத்தியக்கூறுகள் கண்ணுக்குப் புலப்படவே... அம்மையாருக்கு அரசியல் ஆர்வம் மீண்டும் துளிர்த்திருந்தது.

தேர்தலில் முஷ்ரப் போட்டியிடுவார் என்ற செய்திகள் காட்டுத் தீயாகப் பரவின. கொதித்து எழுந்துவிட்டனர் வழக்கறிஞர்கள். யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். ஆனால் முஷ்ரப் மட்டும் கூடாது. போட்டியிட்டால், அவரை எதிர்த்து வாஜாஹ§த்தீன் என்ற மூத்த சட்டமேதை தேர்தலில் நிற்பார் என்று மிரட்டினார்கள். கொஞ்சம் செல்வாக்குள்ள மனிதர். ஆனால், முஷ்ரப் எதற்கும் கவலைப்படவில்லை. 'தாராளமாக நில்லுங்கள்!' என்று சொல்லிவிட்டார்..
வெறுமனே மிரட்டலோடு வழக்கறிஞர் கள் நிறுத்திக்கொள்ளவில்லை. சொன்ன படியே வாஜாஹ§த்தீனை தேர்தல் களத்துக்குக் கொண்டுவந்தனர். மொத்த வாக்குகள் 1,170. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தேர்தலைப் புறக்கணிக்க, முஷ்ரப்புக்கும் வாஜாஹ§த்தீனுக்கும் நேரடிப் போட்டி. புன்னகை தும்பிய முகத்துடன் தேர்தலைச் சந்தித்தார் முஷ்ரப். புன்னகைக்கான அர்த்தம் தேர்தல் முடிவுகளில் தெரிந்தது.

மொத்தம் பதிவான வாக்குகள் 685. அவற்றில் வாஜாஹ§த்தினுக்கு ஏழு. செல்லாத வாக்குகள் ஏழு. மீதமுள்ள அனைத்தும் முஷ்ரப்புக்கே. அதை அறிவிக்கவேண்டியது மட்டும்தான். பாக்கி. இங்குதான் பிரச்னை ஆரம்பித்தது. முடிவு சொல்லவேண்டிய உச்ச நீதிமன்றம் அசையாமல் நின்றது. எல்லோரும் நீதிமன்றத்தை நோக்கியே தங்களது பார்வையை வைத்திருந்தனர். காரணம், நீதிமன்ற உத்தரவுப்படிதான் தேர்தல் நடைபெற்றது. ஆகவே, தேர்தல் முடிவையும் நீதிமன்றம்தான் அறிவிக்க முடியும்.
காத்திருந்து... காத்திருந்து... காலங்கள் கழிந்தது. வெறுப்பாக இருந்தது முஷ்ரப்புக்கு. இடைப்பட்ட காலத்தில் வெளிநாடுகளில் வசித்துவந்த நவாஸ் ஷெரீஃப் மற்றும் பெனாசிர் புட்டோ இருவருக்கும் தாய்நாட்டுப் பாசம் பீறிட்டுக்கொண்டு வந்தது. நவாஸ் வருவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கூறிவிடவே, அவர் பாகிஸ்தான் வந்தார். ஆனால், அவரை விமானத்தில் இருந்து கீழே இறக்காமலேயே திருப்பி அனுப்பிவிட்டது முஷ்ரப் அரசு.

நவாஸைத் திருப்பினால் என்ன? நான் போவேன் என்று அடம்பிடித்துக்கொண்டு பாகிஸ்தான் வந்தார் பெனாசிர் புட்டோ. வந்திறங்கிய தினமே ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பயங்கரமான சமிக்ஞை என்றாலும் கூட துளியும் அலட்டிக்கொள்ளவில்லை பெனாசிர். புட்டோவின் மகள் அல்லவா... அவ்வப்போது மக்களை சந்தித்துக் கொண்டிருந்தார்.

காத்திருந்த முஷ்ரப்புக்கு பதிலளித்த நீதிமன்றம், 'இப்போதைக்கு முடிவை அறிவிக்கும் உத்தேசம் இல்லை. 2008-ல் நடக்கவிருக்கும் தேர்தலுக்கான முடிவை வெளியிடும்போதே இதையும் அறிவித்து விடுகிறோம்!' என்றது.
'ஓ, அதுதானே விஷயம். எதற்கு வீணாக மௌனம்? இனி நீங்கள் எதுவும் செய்யவேண்டாம். என்னுடைய நடவடிக்கைகளைக் கொஞ்சம் தள்ளி நின்று வேடிக்கை பாருங்கள்!' என்றுசொல்லி விட்டார் முஷ்ரப். அடடா, உடுக்கை சத்தம் கேட்கிறதே என்று எல்லோருமே பரபரத்தனர். அதற்குள் திருவிழா தொடங்கிவிட்டது.

No comments: