Wednesday 18 March, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (21)

***************
22 March 2009
***************

பாகிஸ்தானின் பிரம்மாஸ்திரம்!

முப்பத்து சொச்சம் வயது. காந்தம் போல கவர்ந்திழுக்கும் முகம். வசீகரம் நிறைந்த பேச்சு. சுறுசுறுப்புக்குப் பஞ்சமில்லாத நடை. கண்களில் கனவுகள். இவைதான் பாகிஸ்தானில் பெனாசிருக்கு எதிராக உருவாகிக் கொண்டிருந்த அரசியல் வாதியின் அங்க அடையாளங்கள். பெயர் நவாஸ் ஷெரீஃப். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். தீவிர தொழிற்சங்கவாதி.
பஞ்சாப் மாகாணத்தில் நவாஸ் ஷெரீஃபுக்கு அபரிமித மான செல்வாக்கு. இவருடைய ஒவ்வொரு நடவடிக்கை யையும் உன்னிப்பாக கவனித்துவந்த ஜியாவுல் ஹக், நவாஸை உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்து அழகு பார்க்க விரும்பினார்.

1985 ஏப்ரல் மாதத்தில் பஞ்சாப் முதல்வர் பதவியை நவாஸ§க்கு வழங்கி, தன் ஆசையைத் தீர்த்துக்கொண்டார் ஜியா. நம்பிக்கைக்குக் கொஞ்சமும் பங்கம் வராமல் நடந்து கொண்டதால், அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்திலேயே இருந்தது நவாஸ§க்கு. ஜியாவின் மரணத்துக்குப் பிறகு நடந்த தேர்தலிலும் அவருக்கே பஞ்சாப் முதல்வர் பதவி வந்து சேர்ந்தது. ஆக, 'பஞ்சாப் என்றால் நவாஸ். நவாஸ் என்றால் பஞ்சாப்' என்ற நிலை உருவானது.

மெள்ள மெள்ள அக்கம் பக்கத்து பிராந்தியங்களுக்கும் நவாஸின் புகழ் பரவத் தொடங்கியது. அந்த சமயத்தில் பெனாசிர் புட்டோ அரசு திடீரென கலைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் சக்திவாய்ந்த அரசியல் கட்சியாக இயங்கிய பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு மிகச்சரியான போட்டியைக் கொடுத்தவர் நவாஸ் ஷெரீஃப் மாத்திரமே. தன்னுடைய ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்றுதிரட்டிப் பிரசாரத்தில் ஈடுபட்டார்!

அக்டோபர் 24 மற்றும் 27 தேதிகளில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களை அவருடைய கட்சியே கைப்பற்றியது. மியான் முகமது நவாஸ் ஷெரீஃப் என்ற நாற்பது வயது இளைஞர் நவம்பர் 1, 1990 அன்று பாகிஸ்தானின் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார். பரவசம். பரம சந்தோஷம். அதே சமயம் நிதானம் அவசியம். உள்ளுக்குள் சொல்லிக் கொண்டார் நவாஸ்.
எந்தவித துர்க்காரியங்களிலும் ஈடுபடா மல் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதுதான் தன்னுடைய அமைச்சர்களுக்கு நவாஸ் கொடுத்த முதல் உத்தரவு. 'பிரச்னை சிறியதாக இருக்கும்போதே, உடனடியாகத் தீர்த்துவிடுங்கள். இல்லாவிட்டால், அதற்கு வால் முளைத்துவிடும். பிறகு அதுவே, நம்முடைய கழுத்தை நெரித்துவிடும்!'என்பார் நவாஸ்.

நிலம் இல்லாமல் விவசாயிகள் தவிக்கிறார்களா, உடனடியாக அவர்களுக்குத் தேவையான நிலத்தைப் பிரித்துக்கொடுங்கள். சாலை வசதி, கழிப்பிட வசதி இல்லை என்று எங்கேயாவது முணுமுணுப்புக் கேட்கிறதா? உடனடியாக ஆட்களை அனுப்பி ஆகவேண்டிய காரியங்களைச் செய்யுங்கள். கரன்ட் பிரச்னை, தண்ணீர் தகராறு என்று எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒன்றும் பிரச்னை இல்லை. எல்லாம் சுமுகமாகச் செல்கிறது என்ற திருப்தி உணர்வு ஷெரீஃபின் மனத்தை எட்டுவதற்குள் மிகப்பெரிய குழப்பம் வளைகுடா யுத்தம் என்ற பெயரில் வந்து சேர்ந்தது. பாகிஸ்தான் முழுக்க சதாம் ஆதரவு அலை வீசியது. அதாவது, அமெரிக்க எதிர்ப்பு அலை. ஒரு இஸ்லாமியரின் வெற்றிக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கூறிய இஸ்லாமிய அமைப்புகள், பிரதமர் நவாஸ் ஷெரீஃப், ஈராக் அதிபர் சதாமுக்கு ஆதரவுக்கரம் நீட்டவேண்டும் என்று வம்படி செய்தன.
மனிதருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. உள்ளூர் அரசியலில் பழம் தின்று கொட்டை போட் டவர். ஆனால், வெளியுறவு விவகாரத்தில் சுத்த சைப ராக இருந்தார். தெளிவான முடிவு எதையும் எடுக்க முடியாமல் திணறினார். இது விஷயமாக ராணுவத் தளபதி அஸ்லம்பக்குக்கும் ஷெரீஃபுக்கும் இடையே ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள்.

கஷ்டங்களுக்கு எப்போதுமே தோழர்கள் அதிகம். வளைகுடா என்ற பெயரில் நவாஸ§க்கு வந்த இம்சை, மேலும் சில இம்சைகளை இலவசமாக அழைத்துவந்தது. ஈராக்கை மையப்படுத்தி ஆங்காங்கே வன்முறை கள் வெடிக்கத் தொடங்கின. காலுக்குக் கீழே அடங்கிக்கிடந்த ஊழல் பெருச்சாளிகள், எகிறிக் குதித்து வெளியே வந்தன. நவாஸின் வயிற்றில் புளி கரைக்கத் தொடங் கியது.

எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்த அதிபர் இஷாக் கான், ஷெரீஃபுக்குக் கணக்கு தீர்த்துவிட நாள் குறித்து விட்டார். ஏப்ரல் 18, 1993 அன்று ஆட்சி கலைக்கப்பட்டது. தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டார் நவாஸ். போதாக்குறைக்கு பாலக் ஷேர் மஸாரி என்ற பொம்மை மனிதரைக் காபந்து பிரதமராக நியமித்தார் அதிபர். கண்கள் சிவந்துவிட்டன நவாஸ§க்கு. கோர்ட்டில் சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றது. விதி இஷாக் கானை பார்த்து எகத்தாளமாகச் சிரித்தது. ஆம். நவாஸ் ஷெரீஃப் ஆட்சி கலைக்கப்பட்டது செல்லாது என்று அறிவித்தது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம். நாற்காலியில் இருந்து இறங்கிய ஆறாவது வாரத்தில் மீண்டும் பதவியைப் பிடித்தார் நவாஸ். என்னதான் சட்டத்தின் மூலம் மீண்டும் நாற்காலியைப் பிடித்தாலும் கூட மனிதருக்கு ஆட்சியில் இருப் பதில் ஏகப்பட்ட தர்மசங்கடங்கள். ஒரு நல்ல நாளாகப் பார்த்து ராஜினாமா செய்துவிட்டார். மொயின் குரோஷி என்பவர் காபந்து பிரதமரானார்.

மீண்டும் தேர்தல். இப்போது களத்துக்கு வந்திருந் தார் அடிபட்ட பழைய புலியான பெனாசிர் புட்டோ. மக்கள் கவலை தோய்ந்த முகத்துடன் அவரை வரவேற்றனர். புரிந்துவிட்டது பெனாசிருக்கு. அனுதாப அலை வீசப்போகிறது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்று கட்சிக்காரர்களுக்குச் சொல்லிவிட்டார். அவர் நினைத்தது பலித்தது. அபரிமிதமான ஆதரவுடன் மீண்டும் பிரதமரானார் பெனாசிர் புட்டோ.

கடந்த ஆட்சியில் கவனக்குறைவாக இருந்துவிட்டோம். இனியும் அப்படி இருக்கக் கூடாது என்று தன்னை எச்சரித்துக் கொண்டார் பெனாசிர். கட்சிக்காரர்களிடம் கறாராக நடந்து கொண்டார். அதன் மூலம் ஊழல் என்ற வஸ்துவை இல்லாமல் செய்துவிடலாம் என்பது அவருடைய கணிப்பு.
தவிரவும், தன் ஆட்சியின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும் என்பதற்காக நிறையவே மெனக் கெட்டார். பாகிஸ்தான் என்ற தேசம் புதிய பாதையில் நடை போட்டுக்கொண்டிருப்பதாக உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தபோது பேசினார் பெனாசிர். சர்வதேச அளவில் நடக்கிற தீவிரவாதச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை ஒழிப்பதற்குத் தன்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்தார். எல்லாமே ஒழுங்காகத்தான் நடந்து கொண்டிருந்தது, ஒரேயரு விஷயத்தைத் தவிர.

பெனாசிரின் குடும்ப அன்பர்கள் மாறவே இல்லை. ஆங்காங்கே பெட்டிகள் கைமாறின. அவருடைய உறவினர்கள் என்று சொல்லிக்கொண்ட அத்தனை பேரும் அளவுக்கு மீறிய சலுகைகளை அனுபவிக்கத் தொடங்கினர். சட்டத்தைத் தங்களுக்கு ஏற்ப வளைக்கத் தொடங்கினர். எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. 'பணம். பணம். அது மட்டும் போதும்!' என்ற முடிவில் இயங்கத் தொடங்கினர்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த எதிர்க்கட்சிகள் பொங்கியெழுந்துவிட்டன. கட்டுக்கடங்காத மதிப்பு கொண்ட சொத்துகளை வெளிநாடுகளில் வாங்கிக் குவித்திருப்பதாக பெனாசிர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பின. தவிரவும், பாகிஸ்தானில் அவர் கணவர் சர்தாரியின் சகோதரருக்கு விதிகளை மீறி நிலம் வழங்கப்பட்டுள்ளது, பெனாசிர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு வேண்டியவர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்று சரவெடிக் குற்றச்சாட்டுகள்.

எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார் அதிபர் ஃப்ரூக் லக்காரி. நடப்பது எதுவும் திருப்திகரமாக இல்லை அவருக்கு. விளைவு, தன்னுடைய பிரம்மாஸ்திரத்தை எடுத்தார். எட்டாவது அரசியல் சட்டத்திருத்தம் என்பது அந்த அஸ்திரத் தின் பெயர். பிரதமரை பதவி நீக்கம் செய்து, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை அதிபருக்கு வழங்கும் சட்டத்திருத்தம் அது.

ஆலோசகர்களை அழைத்து நீண்ட நெடுநேரம் விவாதித்த அதிபர், அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

'பெனாசிரின் ஆட்சி கலைக்கப்படுகிறது.'

தூக்கிவாரிப் போட்டது பெனாசிருக்கு. ''இத்தனை மோசமான முடிவை எடுக்கும் அளவுக்கு இங்கே என்ன நடந்துவிட்டது? இவரை அரும்பாடுபட்டு அதிபராக்கியது நான். இவரைத்தான் அதிபராக்க வேண்டும் என்று சர்தாரி எத்தனை பாடுபட்டார்? இன்று என்னடாவென்றால்... யாரோ சில விஷமிகள் கிளப்பிவிட்ட ஊழல் குற்றச்சாட்டுக்குச் செவிசாய்த்து, என்னுடைய ஆட்சியைக் கலைத்து விட்டாரே? சே, நன்றிகெட்ட மனிதர்களின் கூடாரமாகிவிட்டதே பாகிஸ்தான் அரசியல்களம்!'' - நொந்து போய் பேசினார் பெனாசிர்.

மீண்டும் ஒரு தேர்தல். பாகிஸ்தான் பிரதமர் என்ற மியூசிக்கல் சேர் ஆட்டத்தில் பெனாசிரும் நவாஸ் ஷெரீஃபும் மாறி மாறி உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். இந்த முறை வாய்ப்பு நவாஸ§க்கே என்றன பாகிஸ்தான் ஊடகங்கள். தன்னுடைய ஆட்சியைக் கலைத்தது அநியாயம் என்று மக்களிடம் சென்று அனுதாபம் தேடினார் பெனாசிர். ஊழலுக்கு ஏற்ற தண்டனைதான் கிடைத்திருக்கிறது. ஆகவே, மீண்டும் அவருக்கு வாய்ப்பளிக்காதீர்கள் என்று பிரசாரம் செய்தார் நவாஸ்.

நவாஸ் ஷெரீஃபின் பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு. அவருடைய பொதுக் கூட்டங்களுக்குத் திரண்ட மக்களின் எண்ணிக்கை அவருடைய வெற்றியை ஓரளவுக்கு உறுதி செய்தது. இறுதியாக, ஊடகங்களின் கணிப்பே சரியாக இருந்தது. நவாஸ் ஷெரீஃப் மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார். மிருகபலம் என்று சொல்வார்கள். கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதத்தினரின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருந்தார் நவாஸ் ஷெரீஃப்.
இப்படியரு மாற்றத்துக்காகத்தான் கால்கடுக்கக் காத்துக் கொண்டிருந்தார் நவாஸ் ஷெரீஃப். நினைத்த மாத்திரத்தில் ஆட்சியைக் கலைத்துப் போடும் அதிபரின் அதிகார ஓட்டத்துக்குக் கடிவாளம் ஒன்றைத் தயாரித்தார். அதற்குப் பெயர், பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தம். அதன்படி பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் அதிபரிடம் இருந்து பறிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் இருந்த அபரிதமான பலத்தால் பூனைக்கு மணி கட்டினார் நவாஸ் ஷெரீஃப்.

இந்த சமயத்தில்தான் விதி தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. மேஜர் ஜெனரலாக ஒரு ஓரத்தில் ஓசையின்றிக் கடமையாற்றிக் கொண்டிருந்த பர்வேஸ் முஷ்ரப் என்ற மனிதரை திடுதிப்பென ராணுவத் தலைமைத் தளபதியாக நியமித்தார் நவாஸ் ஷெரீஃப். ராகு காலம் தொடங்கியது ஷெரீஃபுக்கு!

No comments: