Monday 9 March, 2009

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல்

**************
11 March 2009
**************
கிரிக்கெட் மைதானம்... வெடிகுண்டு விளையாட்டு!

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாடச் சென்ற இலங்கை அணி, மயிரிழையில் உயிர்தப்பி மீண்டு வந்திருக்கிறது. இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பேருந்தின் மீது துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் முதலியவற்றால் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தாக்குதலை முடித்துவிட்டு சாவகாசமாகத் தப்பித்துச் சென்றிருக்கிறார்கள். இரண்டு குழுவினர் மோட்டார் சைக்கிள்களில் ஏறிச் சென்றதாகவும், ஒரு குழு நடந்தே சென்று தப்பித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன. பாகிஸ்தான் ஒரு 'தோல்வி அடைந்த அரசு' என்பதற்கு இந்தத் தாக்குதல் இன்னொரு எடுத்துக்காட்டு என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட இந்தியா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளின் அணிகள் மறுப்புத் தெரிவித்து விட்டதால்தான், இலங்கை அணி அங்கு சென்றது. இலங்கைக்கு, பாகிஸ்தான் அளித்து வருகிற ராணுவ உதவிகளுக்கு நன்றிக்கடன் தெரிவிக்கவே, இக்கட்டான சூழலில் இலங்கை தன்னுடைய கிரிக்கெட் அணியை அனுப்பி பாகிஸ்தானின் மானத்தைக் காப்பாற்றியது என்று கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றி ருக்கிறது. மற்ற நாடுகளின் அணிகள் வர பயந்த நிலையில், இலங்கை அணி பாகிஸ்தானுக்கு விளையாட வந்தது பயங்கரவாதிகளின் கோபத்தை அதிகப்படுத்தியிருக்கக் கூடும்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பயங்கரவாதக் குழுக்களில் முதன்மையானதாகக் கருதப்படும் லஸ்கர்-இ-தொய்பா, கிரிக்கெட்டைக் கடுமையாக எதிர்த்து வருகிற ஒரு இயக்கம்.

''பிரிட்டிஷ்காரர்கள் கிரிக்கெட் மட்டைகளை பாகிஸ்தானியர்களின் கையில் கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்த வாளைப் பறித்துக்கொண்டு விட்டார்கள். அதன் மூலம் பாகிஸ்தானை அவர்கள் அடிமைப்படுத்திக் கொண்டார்கள். பாகிஸ்தானின் பெண்களைக் கவர்ந்து கொண்டுவிட்டார்கள்!'' என்பது லஸ்கர்-இ-தொய்பாவின் பிரசாரங்களில் ஒன்று. ''பாகிஸ்தானியர்களே! இஸ்ரேலைப் பாருங்கள். அந்த நாட்டில் உங்களைப் போல கிரிக்கெட் அணி இருக்கிறதா? அது எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். எனவே, கிரிக்கெட் மட்டைகளைத் தூக்கியெறிந்துவிட்டு, கைகளில் வாள்களை ஏந்துங்கள்!'' என்று அந்த இயக்கம் அறைகூவல் விடுத்துவந்தது. இந்தப் பின்னணியில்தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கிரிக்கெட் மீது பயங்கரவாதிகளுக்கு இருந்துவரும் வெறுப்பு மட்டுமல்லாது, அந்த விளையாட்டுக்கு உலகமெங்கும் கிடைத்துவரும் விளம் பரத்தைத் தாங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற திட்டமும் சேர்ந்துதான் இந்தத் தாக்குதல் நடப்பதற்குக் காரணமாகியிருக்கிறது என்பது உளவுத்துறை அதிகாரிகளின் வாதம். உலக மக்களின் கவனத்தைக் கவர்ந்துள்ள இலக்குகளைத் தாக்குவதன் மூலம் மிக எளிதாக விளம்பரம் பெற்றுவிடலாம் என்று பயங்கரவாதிகள் கருதுகிறார்கள். இதனால்தான் மும்பையில்கூட தாஜ் ஹோட்டலை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்று இந்திய அதிகாரிகளும் கருத்துக் கூறியுள்ளனர். இந்தத் தாக்குதலால் பயங்கரவாதிகளுக்கு விளம்பரம் கிடைத்ததோ, இல்லையோ... பாகிஸ்தான் அரசு பற்றிய உலக நாடுகளின் மதிப்பீட்டை அது கூர்மைப்படுத்திவிட்டது. பாகிஸ்தான் அரசுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை. அங்கு பயங்கரவாதிகள்தான் ஆதிக்கம் செய்கிறார்கள் என்ற சந்தேகம் இப்போது நிரூபணமாகிவிட்டது. தாக்குதல் நடத்திய பிறகு நடந்தே சென்று பயங்கரவாதிகள் தப்பித்தார்கள் என்ற செய்தியும், இதுவரை தாக்குதல் நடத்திய ஒருவரைக்கூட பாகிஸ்தான் அரசு கைது செய்யமுடியவில்லை என்ற உண்மையும் இதைத்தான் தெளிவுபடுத்துகின்றன.

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்கு தல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்கா, ''இது இலங்கைக்கும், பாகிஸ்தானுக்குமான நல்லுறவை கெடுப்பதற்காக நடத்தப்பட்ட தாக்கு தல்!'' என்று கூறியிருக்கிறது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் முன்னாள் தலைவரும் இதேவிதமான கருத்தைத்தான் கூறியிருக்கிறார். இந்தத் தாக்குதலில் இந்தியாவின் பங்கு இருக்கிறது என்பதைப்போல அவர் பேசியிருக்கிறார். மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ் தானிலிருந்து செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டிவரும் நிலையில் இந்தத் தாக்குதலை, இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்துக்குப் பயன்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை எவரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்றபோதிலும், மும்பைத் தாக்குதல் விசாரணையை திசைதிருப்ப பாகிஸ்தான் இதை பயன்படுத்தும் என்பதே இதில் வெளிப்படுகிற செய்தியாகும்.

இந்தத் தாக்குதல் குறித்து விசாரிப்பதற்கு அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. அமைப்பு விருப்பம் தெரிவித்தது. ஆனால், அதை பாகிஸ்தான் அரசு நிராகரித்துவிட்டது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை. லஸ்கர்-இ-தொய்பாவைப் பொறுத்தவரை அது, பாகிஸ்தான் மண்ணில் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலையும் நடத்தியதில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இந்தத் தாக்குதலுக்கு வேறு ஏதாவது அமைப்புகள் காரணமா என்ற நோக்கிலும் விசாரணை நடந்துவருகிறது. அண்மைக்காலமாக அமெரிக்கா வின் நெருக்குதலினால் பாகிஸ் தான் அரசு அங்குள்ள பல்வேறு தீவிரவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இயக்கங்கள் எவையே னும், இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்குமா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் விளைவுகள் எப்படி யிருக்கும் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். பாகிஸ்தானின் கிரிக்கெட் விளையாட்டுக்கு இது மிகப்பெரும் பின்ன டைவை ஏற்படுத்திவிட்டது. இனிமேல் சர்வதேச அணிகள் அங்கு விளையாட வருமா என்பது சந்தேகம்தான். இதனால் பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தானுக்கு நஷ்டம்தான். பாகிஸ்தான் அரசின் பலவீனம் இந்தத் தாக்குதலின் மூலம் அம்பலப்பட்டுப் போயிருப்பதால், அங்கு எத்தகைய அணுகுமுறையை இனிமேல் அமெரிக்கா பின்பற்றப்போகிறது என்பது ஒரு கேள்விக்குறி. அமெரிக்காவின் தலையீட்டின் காரணமாகத்தான் பாகிஸ்தான் அரசு இவ்வளவு தூரம் பலவீனம் அடைந்துவிட்டது. 'பயங்கர வாதிகளை ஒடுக்குகிறேன்' என்ற பெயரில் தன்னிச்சையாக அமெரிக்கா, பாகிஸ்தானில் மேற்கொண்டு வருகிற நடவடிக்கைகள்தான் இதற்கெல்லாம் அடிப்படை என்கிற குற்றச்சாட்டும் புறக்கணிக்கத்தக்கதல்ல. ''பாகிஸ்தானில் வளர்ந்துவரும் பயங்கரவாதம் உலகத் துக்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளது!'' என்று இந்தியத் தரப்பிலிருந்து சொல்லப் படுகிறது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாகிஸ்தானில் அதிகரித்துவரும் பயங்கர வாதத் தாக்குதல்கள் இந்தியாவின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கெனவே இந்தியா அதற்காக மிகப்பெரும் விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து இயக்கப்படும் பயங்கர வாதிகளால் இந்திய உயிர்கள் ஏராளமாக பறிபோய் இருக்கின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்த அரசாக மாறுவது இந்தியா வுக்கு எந்தவிதத்திலும் நல்லதல்ல என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால், இதில் சில சாதகமான அம்சங்களும் இருக்கின்றன என கூறுவோரும் இருக் கிறார்கள். ராணுவ விஷயங்கள் குறித்து கருத்துக் கூறிவருகிற டாக்டர் சுபாஷ் கபிலா என்பவர் இப்படியரு கருத்தைத் தெரிவித் திருக்கிறார்.

''பாகிஸ்தான் முழுமையாக தாலிபன் மயமாகி வருவது இந்தியாவுக்கு ஒருவிதத்தில் நல்லது. தாலிபன் கட்டுப்பாட்டில் உள்ள நாடாக அது மாறிவிட்டால், அங்கு அமெரிக்காவின் நடவடிக்கைகள் தடுக்கப்பட்டு விடும். ஆப்கானிஸ்தான் பிரச்னையை முன்னிறுத்தி பாகிஸ்தானுக்குள் தலையிட்ட அமெரிக்கா, மெள்ள மெள்ள... அங்கு தன்னுடைய பிடியை அதிகரித்து வருகிறது. ராணுவ நோக்கிலிருந்து பார்த்தால், பாகிஸ் தானில் அமெரிக்காவின் ஆதிக்கம் உறுதிப்படுவது இந்தியாவுக்கு நல்லதல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்!'' என்கிறார் டாக்டர் சுபாஷ் கபிலா. அண்மைக்காலமாக பாகிஸ்தானை சீனாவும் தன்னுடைய ஆதரவு நாடாக மாற்றுவதற்கு முயற்சித்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், ''தாலிபன் மயமான பாகிஸ்தான் சீனா வுக்கும் உதவியாக இருக்காது'' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவற்றின் செல்வாக்கைக் குறைப்பதற்கு அது தாலிபன் மயமாவது உதவும் என்பது சுபாஷ் கபிலாவின் கருத்தாகும்.

அமெரிக்கா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி பேசுகிறவர்கள், தாலிபன் மயமா வதால் ஏற்படப்போகும் விளைவுகளைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. பாகிஸ்தான் முழுமையாக தாலிபன்களின் கட்டுப்பாட்டில் வருமேயானால், அதற்கான சர்வதேச வலைப்பின்னலுக்குள் அது சென்றுவிடும். அது அமெரிக்க-சீன ஆதிக்கத்தைவிடவும் அதிகப்படியான ஆபத்தை இந்தியாவுக்கு கொண்டுவந்து சேர்க்கும். ஏனென்றால் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகள் வெறுக்கின்ற ஒரு நாடாக இருப்பது இந்தியாதான். அதுபோல யூதர்களைப்போல இந்துக் களையும் அவர்கள் வெறுக்கிறார்கள். எனவே, பாகிஸ்தான் அவர்களுடைய முழுமையான கட்டுப் பாட்டுக்குள் வந்துவிட்டால், அது இந்தியாவுக்கு மிகப்பெரும் தொந்தரவாகவே முடியும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இந்தத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள உபவிளைவு ஈழத்தமிழர் பிரச்னைக்கு நேர்ந்துள்ள பின்னடைவாகும். இப்போது சர்வதேச நாடுகளின் கவனமெல்லாம் பாகிஸ்தானை நோக்கியே திரும்பியுள்ளது. தாக்கப்பட்டது இலங்கை கிரிக்கெட் அணி என்பதால் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு தம்முடைய ஆதரவை தெரிவித்து வருகின்றன. தமிழர்களை இனப்படுகொலை செய்துவருகின்ற இலங்கை அரசை கண்டித்து இப்போதுதான் சர்வதேச நாடுகள் பேசத் தொடங்கியிருந்தன. அதற்குள் இப்படியரு சம்பவம்.

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள தாக்கு தலை இந்தியா சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் ஐ.பி.எல். போட்டிகள் இங்கே நடக்கவுள்ளன. அதற்கு கூடுதலான பாதுகாப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் முடியும் வரை அந்தப் போட்டிகளை ஒத்திவைப்பதுதான் நல்லது என்ற கருத்தும் நிலவுகிறது. இதை இந்திய அரசும், கிரிக்கெட் வாரியத்தினரும் கவனமாகப் பரிசீலிக்கவேண்டும். தேர்தல் நடைபெறும்போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அது இந்தியாவின் எதிர் காலத்தையே திசைதிருப்பிவிடும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

No comments: