Thursday 19 February, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (10)

**********
4th Feb --> no article this week
***********

*************
8th February
*************


விரும்பி வந்த வெள்ளைமாளிகை!

சோவியத் யூனியனும் அமெரிக் காவும் பனிப்போர் என்ற பெயரில் உலகநாடுகளை உறைய வைத்துக்கொண்டிருந்த சண்டைக் கோழிகள். இவர்கள் தங்களுடைய நட்பு வட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் மிகத் தீவிரத்துடன் இறங் கியிருந்த காலகட்டம் அது. குறிப்பாக, தெற்காசியாவில் யாருக்கு அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அப்போதைய பரபரப்பான விவாதம்.

நண்பர்கள் எப்படி வருவார்கள்? ஒன்று கொள் கையால் ஈர்க்கப்பட்டு அல்லது உதவிகளால் இழுக்கப் பட்டு. அமெரிக்காவுக்கு மிகவும் பிடித்தமான வழி, கரன்சி வழி. சுலபமானதும்கூட. தங்கள் உளவுத் துறையை வெவ்வேறு தேசங்களுக்கு அனுப்பி அங்குள்ள பிரச்னைகள் பற்றி நோட்டம் பார்க்க அனுப்பியது அமெரிக்கா. நிதிதான் பிரச்னை என்றால், அந்த நாடு களைப் பெட்டிகள் மூலம் வளைத்தது. வேறு பிரச்னை என்றால் அதையும் தீர்க்கிறோம் வேறு வகையில் என்று ஆசை காட்டியது.

சோவியத்துக்கு இருக்கவே இருக்கிறது கம்யூனிஸக் கொள்கை. பல தேசங்களின் தலைவர்களுக்கு கம்யூனிஸம் மீது அபரிமிதமான ஈர்ப்பு. சிலருக்கு கம்யூனிஸ நெருப்பு பற்றிக்கொண்டு எரியும். இன்னும் சிலருக்கு உள்ளுக்குள் புகைந்துகொண்டே இருக்கும். சோவியத் தலைவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். சோவியத் தன்னுடைய நட்பு வட்டத்தை விரிவுபடுத்த அதிகம் அலட்டிக்கொள்ளவே இல்லை என்பதற்கு இதுதான் காரணம். தேவைப்பட்டால் ராணுவ உதவியைச் செய்வதற்கும் சோவியத் தயாராக இருந்தது.

தொடக்கத்தில் இந்தியாவுடன் நட்பு பாராட்டு வதில்தான் அமெரிக்கா ஆர்வம் செலுத் தியது. ஆனால், இந்தியத் தலைவர்களோ சோவியத் காதலில் மூழ்கியிருந்தனர். சோவியத் தடைக்கல்லைத் தகர்க்க, சாம, பேத, தான, தண்ட முறைகள் அனைத்தையும் பயன் படுத்திப் பார்த்து அமெரிக்கா. ம்ஹ§ம்... ஒன்றும் நடக்க வில்லை. நங்கூரம் போடாத குறையாக சோவியத் ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது இந்தியா. அதற்காக ஓரமாக ஒதுங்கிவிட முடியுமா? வாய்ப்பே இல்லை!

யோசிக்கத் தொடங்கியது அமெரிக்கா. இந்தியாவுக்கு மாற்றாக யாரைப் பிடிக்கலாம்? அப்போதுதான் வாஷிங்டனின் கவனம் கராச்சியை நோக்கித் திரும்பியது. முஸ்லிம்களின் தேசமான பாகிஸ்தானுக்கு கம்யூனிஸம் மீது எந்த விதமான ஈர்ப்பும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் போதும். சாய்ந்து விடுவார்கள். குதூகலித்தது அமெரிக்கா. விருட்டென எழுந்து பாகிஸ்தானின் கதவை லேசாகத் தட்டியது.
பாகிஸ்தானில் ராணுவம் அத்தனை வலுவாக இல்லை. நிர்வாகக் கட்டமைப்பு இன்னமும் முழுமை பெறவில்லை. மக்களுக்கும் இன்னும் 'இந்திய ஹோம்சிக்' தீரவில்லை. நிதி என்ற வஸ்து மலைப்பைக் கொடுத்தது. போதாக் குறைக்கு போர் என்ற பெயரில் இந்தியா என்ற தீட்டிய மரத்திலேயே கூர் பார்த்துவிட்டதால், அவர்களுடைய எதிர்ப்பையும் சம்பாதித்தாகிவிட்டது. இனி வானத்தில் இருந்து வெள்ளை தேவதைகள் வந்து ஒத்தாசை செய்தால்தான் பிழைக்க முடியும் என்ற நிலை.

நேரம் காலம் எல்லாம் கூடி வந்தது. அப்புறம் என்ன? ஓசைப்படாமல் இரு தேசத்தைச் சேர்ந்த பிரநிதிகளும் பேசத் தொடங்கினர். நேரில் சென்று அமெரிக்காவுடன் பேசினார் லியாகத் அலிகான். 'அய்யா எங்களுக்கு தேவை நிதி. அதுவும் உடனடியாக. இல்லாவிட்டால் ராணுவம் தொடங்கி இன்ன பிற விஷயங்கள் அனைத்துமே துருப்பிடித்துவிடும். என்ன சொல்கிறீர்கள்?'
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல இருந்தது அமெரிக்காவுக்கு. நல்லது. 'உங்களுக்கு செய்யாமல் யாருக்குச் செய்யப்போகிறோம். என்ன ஒன்று... சோவியத்துக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கும் இந்தியாவுக்கு எதிர்முகாமில்தான் நீங்கள் வாசம் செய்ய வேண்டியிருக்கும். எப்படி வசதி?' கேட்டது அமெரிக்கா.

பாலில் விழுந்த பழம் வழுக்கிக்கொன்டு வாயில் விழுந்ததுபோல இருந்தது லியாகத் அலிகானுக்கு. துளியும் யோசிக்கவில்லை. எங்களுடைய முதல் எதிரி இந்தியா. அவர்களுடன் அனுசரணையுடன் நடந்துகொள்ளுங்கள் என்று சொன்னால்தான் எங்களுக்கு தர்மசங்கடமாக இருந்திருக்கும். புன்னகை ததும்ப கைகுலுக்கிக்கொண்டனர்.

ஆனால், பாகிஸ்தானில் நிலைமை அத்தனை திருப்திகரமாக இல்லை. லியாகத்துக்கு எதிராக மிகப்பெரிய குழிபறிப்பு வேலை ஒன்று நடந்து கொண்டிருந்தது. உபயம்: மேஜர் ஜெனரல் அக்பர்கான். பாகிஸ்தான் ராணுவத்தில் மிக முக்கியப்புள்ளி அவர். காஷ்மீருக்காக நடத்தப்பட்ட யுத்தத்தை ஐ.நா. தலையீடு காரணமாக நிறுத்தியதில் கடும் அதிருப்தி இவருக்கு. முனைப்பு குன்றாமல் யுத்தம் நடத்தவேண்டும் என்று சதாசர்வகாலமும் புலம்பிக்கொண்டிருந்தார்.

யுத்தம் இல்லை என்றானதும் இந்தியா மீதிருந்த ஆத்திரத்தை லியாகத் அலிகான் ஆட்சியின் மீது காட்ட விரும்பினார். இதற்காக அவர் கையிலெடுத்த ஆயுதம், ராணுவப்புரட்சி. ஆம். பாகிஸ்தானின் அங்க அடையாளங்களுள் ஒன்றான ராணுவப்புரட்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட புண்ணியம் அக்பர் கானுக்குச் சொந்தமானது.

ராணுவத்துக்குள் புரட்சிக்குழுவை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிய அக்பர் கானுக்கு தோள்கொடுக்கப் பலர் முன் வந்தனர். உற்சாகம் தொற்றிக்கொண்டது. மேலும்மேலும் ஆதரவைத் திரட்ட முயன்றார். போதாக்குறைக்கு மனிதரிடம் கொஞ்சம் கம்யூனிஸ கனெக்ஷன்கள் வேறு இருந்தன. அக்பர் கானின் மனைவி பேகம் நஸீம் சில கம்யூனிஸ்ட் அபிமானிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார். தீய்ந்த வாடை அடிப்பதுபோல் இருந்தது. 'என்ன ஏது என்று கவனியுங்கள்' என்று உத்தரவிட்டுவிட்டு அயூப்கானை ராணுவத் தளபதியாக நியமித்தார் லியாகத் அலிகான்.

பிப்ரவரி 23, 1951 அக்பர் கான் தன் இல்லத்தில் ராணுவ சகாக்களின் ரகசிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். எல்லோரும் வந்ததும் தன்னுடைய திட்டத்தை விவரித்தார் அக்பர் கான்.

'தோழர்களே கவனியுங்கள். வரும் வாரத்தில் கவர்னர் ஜெனரல் கவாஜா நஜிமுதீனும் பிரதமர் லியாகத் அலிகானும் ராவல்பிண்டி வருகிறார்கள். அங்கே தயாராகத் காத்திருக்கும் நம்முடைய குழு அவர்கள் இருவரையும் அதிரடியாகக் கைதுசெய்யும். உடனடியாக லியாகத்தின் ஆட்சியைக் கலைக்குமாறு கவர்னர் ஜெனரலை வற்புறுத்துவேன். நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும் அவருக்கு வேறு வழியில்லை. கலைத்துவிடுவார். உடனடியாக என்னு டைய தலைமையில் இடைக்கால அரசு அமையும். பிறகு ராணுவத்தின் மேற்பார்வையில் தேர்தல் நடக்கும்.'

பேசிக்கொண்டே இருந்தார் அக்பர் கான். அருகில் இருந்தவர்கள் அத்தனை பேர் கண்களிலும் உற்சாகம். கனவுகள் விரியத்தொடங்கியிருந்தன. ஆர்வம் இருந்த அளவுக்கு அக்பர் கான் ஆசாமிகளிடம் நேர்த்தி இல்லை. விளைவு, வடமேற்கு எல்லைப்புற மாகாண கவர்னருக்கு விஷயம் அரசல் புரசலாகச் சென்றுவிட்டது. அவர் வழியே பிரதமருக்கு சென்றது. அவ்வளவுதான். கண்கள் சிவந்துவிட்டன லியாகத்துக்கு. 'சதிகாரர்கள் ஒருவர்கூட மிச்சமிருக்கக்கூடாது. அத்தனை பேரையும் கைது செய்து அழைத்துவாருங்கள்!' - உத்தர விட்டார் லியாகத்.

அடுத்த நொடியே கைது நடவடிக்கைகள் தொடங்கின. மின்னல் வேகத்தில் அக்பர் கான் உள்ளிட்ட அவருடைய சகாக்கள் கம்பிகளுக்குப் பின்னால் கௌரவிக்கப் பட்டனர். நீதி விசாரணைக்குப் பிறகு அக்பர் கான் உள்ளிட்டோர் சிறைக்கு அனுப்பப்பட்டாலும், ராணுவப்புரட்சி என்ற வித்து பாகிஸ்தான் மண்ணில் விதைக்கப்பட்டுவிட்டது.

எனினும் தன்னுடைய ஆட்சிக்கு ஏற்படவிருந்த அபாயத்தை வெற்றிகரமாக முடக்கியதில் லியாகத்துக்கு மிகுந்த சந்தோஷம். அதே உற்சாகத்துடன் ராவல்பிண்டியில் ஏற்பாடாகியிருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். விதி வலியது. இரண்டு தோட்டாக்களை நெஞ்சில் ஏந்திக்கொள்வதற்காகவே அங்கு சென்றதுபோல ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார் லியாகத் அலிகான்.

அதிர்ச்சி. குழப்பம். அரசியல் சூழல் ஆட்டம் கண்டது. நிலைமையை சமாளிக்கும் விதமாக கவர்னர் ஜெனரல் நஜிமுதீன் பிரதமராக்கப்பட்டார். லியாகத் அலிகானின் கொலைக்குப் பிறகு பல பிரதமர்கள் வந்தபோதும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் ஆதார சக்தி ஜெனரல் அயூப்கான் மட்டுமே.
யார் வேண்டுமானாலும் வரட்டும். போகட்டும். பிரச்னை இல்லை. எனக்குத் தேவை ராணுவ விஸ்தரிப்பு. ராணுவ முன்னேற்றம். தன் முயற்சியில் சற்றும் கவனம் கலைக்காமல் அமெரிக்க உறவை வளர்த்துக்கொண்டிருந்தார் அயூப்கான். இதன் ஒரு பகுதியாக 1953-ம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவுக்கு ரகசிய விசிட் ஒன்றை அடித்தார். அமெரிக்க அதிபர் ஐசனோவருடன் அப்போது நடத்திய பேச்சுவார்த்தைகள் அயூப்கானை உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தன. ஆனால், செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

கத்தரிக்காய் முற்றியது. பிப்ரவரி 1954-ல் கடைத்தெருவுக்கும் வந்தது. ஆம். அமெரிக்காவில் இருந்து நிதியுதவிகள் பாகிஸ்தான் கஜானாவை நிரப்பத் தொடங்கின. 1954... பாகிஸ்தான் ராணுவ சரித்திரத்தில் மிக முக்கியமான ஆண்டு. பாகிஸ்தான் ராணுவத்தின் நீள அகலங்களை ஐசனோவர் உயர்த்தினார் என்றால் ஆழ, உயரங்களை அயூப்கான் மேம்படுத்தினார்.
துருக்கி, ஈரான் ஆகிய இரண்டு தேசங்களை தனக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டு சோவியத் யூனியனின் ஆதிக்கத்தை எதிர்க்கும் நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்காவின் நட்புப் பட்டியலில் புதிய வரவு பாகிஸ்தான். ராணுவ உதவிக்கான ஒப்பந்தம் மற்றும் நிதியுதவிகளுக்கான ஒப்பந்தம் ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவும் பாகிஸ்தானும் தோளோடு தோள் உரசத்தொடங்கின.

இந்தியா மீதிருந்த பயத்தால் குளிர்ஜுரத்தில் தவித்துக்கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் அரவணைப்பு இதமாக இருந்தது. இந்த மயக்கத்தில் தென்கிழக்கு ஆசிய நட்புறவு ஒப்பந்தமான(SEATO)வில் கையெழுத்திட்டது பாகிஸ்தான். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. பில்லியன் கணக்கில் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானுக்குப் பரிசளித்தது அமெரிக்கா. கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. முகம் முழுக்கப் புன்னகையுடன் வாங்கிக்கொண்டது பாகிஸ்தான்.

'வெற்றி. அற்புதமான வெற்றி. விரைவில் என்னுடைய கனவுகள் நிறைவேறப்போகின்றன. கிடைத்த பணம் முழுவதையும் ராணுவ அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்போகிறேன். ராணுவத்தை விஸ்வரூபத்துடன் வளர்த்தெடுத்து இந்தியாவின் தூக்கத்தைக் கெடுக்கப்போகிறேன்.' தன்னை மறந்து உற்சாகத்தில் துள்ளிக்குதித்தார் அயூப்கான்.

சொன்னபடியே பல வெளிநாடுகளில் இருந்தும் ஆயுதங்களை வாங்கி வருவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. நேற்று வரை இந்தியா பயன்படுத்திய ஆயுதங்களையே பயன்படுத்திய பாகிஸ்தான் ராணுவத்தினரின் கரங்களில் நவீன ரக ஆயுதங்கள் தவழத்தொடங்கின. தவிரவும், பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் பலரும் அமெரிக்கா சென்று ராணுவ உத்திகள் குறித்துப் பயிற்சி பெற்றுவந்தனர்.

நாலுகால் பாய்ச்சலில் ராணுவம் முன்னேறிக் கொண்டிருந்தபோது மேஜர் ஜெனரல் அயூப்கானுடைய மூளை எட்டுக்கால் பாய்ச்சலில் சிந்தித்துக்கொண்டிருந்தது. நிதி கேட்டு வாஷிங்டன் வாசலில் தவம் கிடந்தது நான். ராணுவத்தை அங்குலம் அங்குலமாக வளர்த்தெடுப்பது நான். நிதி தொடங்கி பாதுகாப்பு வரை எல்லாவற்றையும் நானே செய்யும்போது நாடாளுமன்றம், அதிபர், பிரதமர் இன்ன பிற வெங்காயங்கள் எல்லாம் எதற்காக? காசுக்குக் கேடு. முடிவெடுத்துவிட்டார் அயூப்கான்!

No comments: