Thursday 19 February, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (13)

***************

18th February

***************
தாஷ்கண்ட் என்றொரு தந்திரம்!


வெறுப்பின் உச்சகட்டத்துக்குச் சென்றிருந்தார் ஜுல்ஃபிகர் அலி புட்டோ. 'உலகத் தலைவர்கள் அத்தனை பேருக்கும் முன்னால் தன்னை அறைக்குள் வரவேண்டாம்!' என்று தடுத்து நிறுத்தியது உறுத்திக்கொண்டே இருந்தது. தன் சுயமரியாதையைக் கேள்விக்குறியாக்கி விட்டாரே அயூப்கான் என்ற வருத்தம் புட்டோவுக்கு. மனதுக்குள் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருந்த அதிருப்தி, மெள்ள மெள்ளப் பழிவாங்கும் உணர்ச்சியாகப் பரிணா மம் அடையத் தொடங்கியது.


காஷ்மீரையும் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தையும் வைத்து, தன் இமேஜை உயர்த்தி
உச்சாணிக்கொம்பில் உல்லாசமாக அமர்ந்துகொள்ளலாம் என்று திட்டம் போட்டிருக்கிறார் அயூப்கான். 'கூடாது... கூடவே கூடாது! அவற்றை வைத்தே அயூப்கான் என்ற மரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்க்கப் போகிறேன்!' என்று உறுமினார் புட்டோ.


மனிதர் ஆத்திரக்காரரே ஒழிய, அவசரக்காரர் அல்ல. படுபுத்திசாலி. திட்டம் போட்டு ஆளை வளைப் பதில் வல்லவர். '1965 யுத்தத்துக்கு வியூகம் வகுத்துக்கொடுத்தவரே புட்டோதான்!' என்று அயூப்கானே ஒரு முறை பகிரங்கமாக அறிவித்திருந்தார். அந்த அளவுக்கு அசகாயசூரரான புட்டோ, அயூப்கான் விஷயத்தில் அமைதியாகக் காய்களை நகர்த்துவது என்று முடிவு செய்தார். கத்தி வேண்டாம். ரத்தம் வேண்டாம். குறைந்தபட்சம் சத்தம்கூட வேண்டாம். எனில் எப்படி இது சாத்தியம்?


புட்டோ தேர்ந்தெடுத்த ஆயுதம், பிரசாரம். ரகசியப் பிரசாரம். அயூப்கானுக்கு எதிராக மக்களைத் திருப்பிவிட்டாலே போதும்... மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். தன் திட்டத்தை வகுப்பதற்கு வசதியாகத் தனக்கு அணுக்கமான நண்பர்கள் மற்றும் உதவியாளர்களை மட்டும் அவ்வப்போது அழைத்துப் பேசினார்.


'நீங்கள் எப்படிச் செய்வீர்கள் என்று தெரியாது. ஆனால், என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் சொல்கிறேன். நாடு முழுக்க இருக்கும் மாணவர் தலைவர்களைச் சந்தியுங்கள். துடிப்பான இளைஞராகப் பிடித்தால் நல்லது. மெதுவாகப் பேச்சுகொடுத்துப் பாருங்கள். அயூப்கான் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்று லேசுபாசாகத் தெரிந்தாலே போதும்... அழைத்து வந்துவிடுங்கள். அவர்களைச் சரிக்கட்டவேண்டிய பொறுப்பு என்னுடையது. முக்கியமாக அரசியல்வாதி களையும் அழைத்து வாருங்கள். கொஞ்ச மாவது உபயோகமாக இருப்பார்கள்.'


திட்டம்வேலை செய்யத் தொடங்கி யது. அவ்வப்போது மாணவர்களும் அரசியல்வாதி களும் புட்டோவை சந்திக்க வந்தார்கள். பேசினார்கள். நம்பிக்கைக் கீற்று தூரத்தில் தென்படுவதுபோல இருந்தது. சட்டென்று ஒரு யோசனை வந்தது புட்டோவுக்கு. இனிமேல் நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டியிருக்கும். விவாதிக்க வேண்டியிருக்கும். அமைச்சராகவே இருந்துகொண்டு எல்லோரையும் சந்திப்பது, பேசுவது சாத்தியமில்லை. பேசாமல் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்.


'அளவுக்கு மீறிய அசதி. உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. ஓய்வு எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். ஆகவே, நீண்ட விடுப்பு எடுத்துக் கொள்கிறேன்.'


கடிதத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வேலை பார்க்கத் தொடங்கினார் புட்டோ. நாட்டின் முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் லெட்டர் பேடு கட்சிகள் வரை ஓசைப்படாமல் வந்து ஆலோ சனை நடத்திச்சென்றனர். முக்கியமாக மாணவர் தலைவர்கள்.


'ராணுவ ஆசாமியான அயூப்கானுக்கு அரசியலும் தெரியவில்லை. ஒரு மண்ணும் தெரியவில்லை. இந்திய அரசியல்வாதிகள் அவரை சுலபமாக ஏமாற்றிவிட்டனர். தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் சோவியத்தின் தந்திரத்துக்கு முன்னால்... அயூப்பின் அனுபவம் எடுபடவில்லை. பல விஷயங்களில் பாகிஸ்தானை விட்டுக்கொடுத்துவிட்டார் அயூப்கான். தாஷ்கண்ட் ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கே அதிக லாபம். நமக்கு ஒரு பயனும் இல்லை. உண்மையில் பாகிஸ்தானின் தலைக்கு மேலே கத்தியைத் தொங்கவிட்டிருக்கும் காரியத்தைத்தான் அயூப் செய்திருக்கிறார். நான் தலையிட்டு ஏதேனும் செய்யலாம் என்று பார்த்தால், அந்த வழியையும் அயூப்கான் அடைத்துவிட்டார். இனிமேல் பாகிஸ்தானை அந்த அல்லாவே காப்பாற்றவேண்டும்!'


கண்களில் நீர் தளும்பாத குறையாக புட்டோ தன்னிலை விளக்கம் கொடுத்தார். ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுடைய எண்ணவோட்டத்தை கணித்துவிடக் கூடியவர் புட்டோ. அரைகுறை அறிவுள்ள அரசியல் ஆசாமிகளிடம் ஒரு மாதிரி பேசினார். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய மாணவர் களிடம் வேறு மாதிரி பேசினார். புட்டோவின் கண்ணீர், அயூப்கானுக்கு எதிரான அலையாக உருமாறத் தொடங்கியது.


மாணவர்கள் முடிந்ததும் ஆசிரியர்கள். அவர்களுக்கு அடுத்து அரசியல்வாதிகள். ஒவ்வொரு திரியாகப் பற்ற வைத்துக்கொண்டே இருந்தார் புட்டோ. அங்கொன்றும் இங்கொன்றுமாக நெருப்பு பற்றி எரியத்தொடங்கியது. மாணவர்கள் அதிபர் அயூப்கானுக்கு எதிராக சாலையில் குதித்துப் போராடத் தொடங்கினர்.


'பாகிஸ்தானின் நலனை எதிரியிடம் விட்டுக்கொடுத்த அயூப்கான் ஒழிக! நாட்டின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கிய அயூப்கானே பதவி விலகு!' உச்சஸ்தாயியில் கேட்கத் தொடங்கின எதிர்ப்பு கோஷங்கள். அரசியல் தலைவர்கள் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தைத் தாறுமாறுகாகக் கிழித்துத் தோரணமாகத் தொங்கவிட்டனர். போராட்டம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்தது.


பிப்ரவரி மாதத்தில் லாகூர் நகரத்தில் சர்வகட்சிப் பிரதிநிதிகளுக்கான மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சர்வ கட்சிகள் என்றால் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தை எதிர்க்கும் அத்தனை கட்சிகளும் கலந்துகொண்டன. முக்கியமாக, கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான். தன் ஆதரவாளர்களுடன் வந்து அயூப்கானுக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியிருந்தார் முஜிபுர்.


நடக்கும் அத்தனை கூத்துகளையும் நான்கு மாதங்களுக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் புட்டோ. காதில் விழுகிற செய்திகள் எல்லாம் அவருக்கு உற்சாகத்தை வாரி வழங்கின. நிலைமை சாதகமாக இருக்கிறது. இப்போது இறங்கினால் சரியாக இருக்கும். முடிவெடுத்தார் புட்டோ. மீண்டும் ஒரு கடிதம் எழுதினார்.


'அன்புக்குரிய நண்பரே, அசதி போய் விட்டது. ஆனாலும், அமைச்சர் பதவியைத் தொடர்வதில் விருப்பமில்லை. வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்.'
பதவி விலகிய புட்டோ, ராவல்பிண்டியிலிருந்து தன் சொந்த ஊரான லர்கானாவுக்கு ரயிலில் சென்றார். அயூபுக்கு எதிரான அக்னி யுத்தத்தை அங்கிருந்து தொடங்குவதாக முடிவு செய்திருந்தார். வழிநெடுக ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் புட்டோவைப் பார்ப் பதற்காகப் பொதுமக்கள் கூடினர். பாது காப்பை மீறி வந்து கோஷம் எழுப்பினர். 'புட்டோ வாழ்க! புட்டோ வாழ்க!' எல்லோர் கண்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தார் புட்டோ.
ஆதரவு இருக்கும் என்று தெரியும். ஆனால், இத்தனை பெரிய ஆதரவு அலை உருவாகி இருக்கும் என்று புட்டோ துளியும் எதிர்பார்க்கவில்லை. பூரிப்பாக இருந்தது. அந்தத் தெம்பிலேயே தன் ஆதரவாளர்களுடன் இணைந்து புத்தம் புது அரசியல் இயக்கத்தை உருவாக்கினார். நவம்பர் 30, 1967 அன்று தொடங்கப்பட்ட கட்சியின் பெயர். 'பாகிஸ்தான் மக்கள் கட்சி.' (Pakistan People's Party)


எதிர்ப்பின் வேகம் விஸ்வரூபம் எடுத்தது. நாட்டில் முழுமையான ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று எல்லாக் கட்சிகளும் உரத்த குரலில் உறுமிக் கொண்டிருந்தன. அந்த ஜோதியில் புட்டோவின் கட்சி யும் இணைந்துகொண்டது. புட்டோவின் வசீகரம் ததும்பும் பேச்சில் மக்கள் மயங்கத் தொடங்கினர். புட்டோ ஆதரவு அலை உருவாகிக்கொண்டிருந்தது. அதாவது, அயூப்கான் எதிர்ப்பு அலை.


நீதியின் ஆட்சியை வழங்கக் கூடிய வல்லமை புட்டோவுக்கு மட்டுமே இருப்பதாக ஊடகங்கள் எழுதித் தீர்த்தன. அனைத்துக்கும் பின்னணியில் இருந்தவர் சாட்சாத் புட்டோவே. ஆனால், விஷயம் வெளியே கசியாமல் பார்த்துக்கொண்டது புட்டோவின் சாதுர்யம். எனினும் அவருக்குப் பல தொழிற்சங்கத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் வலிய வந்து ஆதரவு கொடுத்தனர்.


போதாக்குறைக்கு கிழக்கு பாகிஸ்தானின் ஷேக் முஜிபுர் ரஹ்மான். 'மேற்கு வாழ்கிறது, கிழக்கு தேய்கிறது' என்று தொண்டைத் தண்ணீர் வற்றும் அளவுக்குக் கதறிக்கொண்டிருந்தார். அங்கே ஒவ்வொரு நாளும் போராட்டமும் ஊர்வலமுமாகவே கழிந்து கொண்டிருந்தன.


மேற்கு, கிழக்கு என்று நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் குலுங்கிக்கொண்டிருந்தது. வன்முறை களுக்கு வால் முளைத்திருந்தன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர விரும்பிய காவல் துறை, மாணவர்களுக்கு எதிராக லத்தியைச் சுழற்றியது. அவ்வளவுதான்... கனன்று கொண்டிருந்த வன்முறை நெருப்பு வெடித்துச் சிதறியது.
எரிகிற நெருப்பில் எரிவாயு செலுத்தியது போல பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த அயூப்கானை மாணவர் ஒருவர் கொலை செய்ய முயற்சி செய்துவிட்டார். கண்கள் சிவந்த அயூப்பின் அடிப்பொடிகள் மாணவர்களைத் துவைத்துக் காயப் போட ஆரம்பித்துவிட்டனர். பலர் கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டனர்.


எல்லாவற்றுக்கும் பின்னணியில் இருப்பவர்கள் இந்த இருவரும்தான் என்று புட்டோவையும் முஜிபுர் ரஹ்மானையும் கைது செய்து உள்ளே வைத்தது அயூப்கான் அரசு. விநாச காலே விபரீத புத்தி. கைது செய்ய உத்தரவிட்டது எத்தனை பெரிய தவறு என்பது பின்னர்தான் அயூப் அரசுக்குப் புரிந்தது. ஓய்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. கண்டனக் கணைகள் அயூப்கானை அதிர வைத்தன. தினம் தினம் எழுந்த எதிர்ப்பு கோஷங்களை அயூப்கானால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை!
நித்திய கண்டம் பூரண ஆயுசாகக் கழிக்க அவருக்கு விருப்பமில்லை. பேசித் தீர்க்கலாம் வாருங்கள் என்றால், அதற்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள்முரண்டு பிடித்தனர். ஒரு முடிவுக்கு வந்தார் அயூப்கான்.


'மேஜர் யாஹியா கான், இனிமேல் எல்லாவற்றையும் நீங்கள்தான் பார்த்துக் கொள்ளப்போகிறீர்கள். நான் ராஜினாமா செய்கிறேன்.'


ஆம். மார்ச் 17, 1969 அன்று பாகிஸ்தானில் மீண்டும் ராணுவம் ஆட்சிக்கு வந்தது. ராணுவப் பணியாளர்களின் தலைவராக இருந்த ஆகா முஹம்மது யாஹியா கான் ராணுவ ஆட்சியாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். வால் போய் கத்தி வந்த கதை. இத்தனை கூத்துகளுக்கும் இடையில் அமெரிக்காவிடம் இருந்து ஓசையில்லாமல் ஓலை ஒன்று வந்து சேர்ந்திருந்தது!

No comments: