Thursday 19 February, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (14)

*******************
22nd February
******************

குறைந்த விலையில் ஒரு துருப்புச்சீட்டு!

'உனக்கு இந்தியாவைப் பிடிக்காதா... அப்படியென்றால், நீதான் என்னுடைய சிறந்த நண்பன்!' -பாகிஸ்தானின் சர்வதேச உறவுகளுக்கான ஃபார்முலா இதுதான். அந்தக் காலத்து லியாகத் அலிகான் தொடங்கி, இந்தக் காலத்து ஆசிஃப் அலி சர்தாரி வரை பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தில் யார் இருந்தாலும் இந்த பாலிஸியில் அணுவளவும் மாற்றம் இருக்காது. அப்படி இருந்தால்... 'ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது!' என்று அர்த்தம்.
அமெரிக்க நெருக்கத்தில் உல்லாசமாக இயங்கிக் கொண்டு இருந்த பாகிஸ்தான், திடுதிப்பென சீனாவைக் காதலிக்கத் தொடங்கியதன் பின்னணியில் இருந்ததும் இந்த ஃபார்முலாதான். வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டிருந்ததைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த விரும்பிய பாகிஸ்தான், சீனாவின் மீது ஏக்கப் பார்வையை வீசத் தொடங்கியது.

இந்தியா, சீனா இடையேயான யுத்தத்துக்குப் பிறகு சீனாவுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியது பாகிஸ் தான். இந்தியாவுக்கு எதிராக 'செக்' வைப்பதற்கு பாகிஸ்தானால் உதவ முடியுமா என்று கணக்குப் போட்டுப் பார்த்தது சீனா. விடை சரியாக வரவே, பாகிஸ்தானும் சீனாவும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டன. உண்மையில், இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தக் குறைந்த விலையில் கிடைத்த துருப்புச் சீட்டு பாகிஸ்தான் என்று கணித்தது சீனா. அதைப் போலவே, இந்தியாவின் புண்ணியத்தில் தனக்குக் கிடைத்த பிரமாண்டமான பரிசு சீனாவின் உறவு என்பது பாகிஸ்தானின் எண்ணம்.
சீனாவுடன் பாகிஸ்தான் உறவு பேணுவதை, அமெ ரிக்கா துளியளவும் ரசிக்கவில்லை. நேரம் பார்த்துக் குட்டு வைக்க முடிவு செய்தது. அதற்குத் தோதாக இந்தியா-பாகிஸ்தான் இடையேயான யுத்தம் (1965) வந்தது. இதுதான் சாக்கென்று நீண்ட கடிதத்தை பாகிஸ் தானுக்கு எழுதியது அமெரிக்கா.
'நாங்கள் கொடுக்கும் ராணுவ உதவிகள் தவறாகப் பயன்படுத்தப் படலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஆகவே, இனி எங்களிடம் இருந்து எந்த விதமான ராணுவ உதவி யையும் எதிர்பார்க்க வேண்டாம்!' -இதுதான் அந்தக் கடிதத்தின் சாரம்.

அப்போது வெள்ளை மாளிகையில் வீற்றிருந்தவர் லிண்டன் ஜான்சன். யுத்தம் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் திடீரென அமெரிக்கா முறுக்கிக்கொண்டதால், பாகிஸ்தானுக்கு பலத்த சிக்கல். யுத்தத்தில் பயன்படுத்தப் பட்ட ஏராளமான ஆயுதங்கள் பழுதடைந்துவிட்டன. சரிசெய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்றால், புதிய உதிரிபாகங்கள் தேவை.
அமெரிக்க அதிபர் ஜான்சன் கறாராகச் சொல்லி விட்டதால், ராணுவ உதவிக்கான வழி முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்தது. வசமாகச் சிக்கிக்கொண்டது பாகிஸ்தான். பின்னர் ஒருவழியாக, ஐ.நா-வின் தலையீட் டால் தப்பிப் பிழைத்தது.

நேரம் பார்த்துப் பழிவாங்கிய அமெரிக்கா மீது, அளவு கடந்த ஆத்திரம் பாகிஸ்தானுக்கு. கூடவே கொஞ்சம் பயமும் வந்து சேர்ந்திருந்தது. காரணம், பாகிஸ்தானுக்குத் தேவையான ஆயுதங்களில் எண்பது சதவிகிதம் அமெரிக் காவில் இருந்துதான் இறக்குமதியாகிக்கொண்டு இருந் தது. இப்போது அமெரிக்கா கைவிரித்துவிட்டது என்பதற்காக ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு உட்கார முடியாது என்று தன்னைத்தானே உசுப்பேற்றிக்கொண்ட பாகிஸ்தான் உதவி கோரி சீனா, வடகொரியா, ஜெர்மனி, இத்தாலி, ஃபிரான்ஸ் என்று பல தேசங்களுக்கும் படை யெடுத்தது.

பெரும்பாலான நாடுகள் கைவிரித்துவிட்டன. ஆனால், அன்பு நண்பர் சீனா மட்டும் பாகிஸ்தானைப் பாசத்துடன் உபசரித்தார். 'கவலையே வேண்டாம். உங்க ளுக்குத் தேவையான ராணுவ உதவிகளை நாங்கள் செய்துகொடுக்கிறோம். போதுமா?'

இந்தியாவுக்கு எதிராகத் தன்னைக் கொம்பு சீவிவிடுவது என முடிவு செய்துவிட்டது சீனா என்பதை பாகிஸ் தான் நன்றாகவே புரிந்துகொண்டது. உற்சாகமாகத் தலையசைத்தது. விளைவு, தொள்ளாயிரம் பீரங்கிகள், 'மிக்-19' ரகத்தைச் சேர்ந்த போர் விமானங்கள், மூன்று காலாட்படைகளுக்குத் தேவையான ஆயுதங்களைக் கொடுத்து, பாகிஸ்தானை உற்சாகப்படுத்தியது சீனா.

சீனாவைப் பின்பற்றி மேலும் சில தேசங் கள் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வாரி வழங்கின. குறிப்பாக, போர் விமானங்கள் மற்றும் சிறிய அளவிலான கப்பல்களை பாகிஸ்தானுக்குப் பரிசளித்தது ஃபிரான்ஸ். உடனே சோவியத் யூனியனும் தன் பங்குக்குக் கொஞ்சம் கொடுக்கலாம் என்று முடிவு செய்து, 'டி-55' ரகத்தைச் சேர்ந்த பீரங்கிகள் மற்றும் சில ஹெலிகாப்டர்களை பாகிஸ்தானுக்கு அளித்தது.

விஷயத்தைக் கேள்விப்பட்ட இந்தியா, சோவியத் யூனியனிடம் தன் அதிருப்தியை வெளிப்படுத்தவே பின்வாங்கியது சோவியத். வெள்ளை அமெரிக்கா உதறினாலும் செஞ்சீனம் கைகொடுத்ததில் பாகிஸ்தானுக்குப் பரம திருப்தி. கையைக் கடிக்காத விலையில் சீனா கொடுத்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இந்தப் பின்னணியுடன் 1969 மார்ச் மாதம் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளராகப் பொறுப்பேற்று இருந்தார், ஆகா முகமது யாஹியா கான்.

நேற்று வரை நடந்தவை மிலிட்டரி மனிதரால் நடத்தப்பட்டவை, மினிமம் கியாரன்டி ஜனநாயக ஆட்சி முறை. ஆனால், யாஹியா கான் அப்படி ஆட்சி நடத்த விரும்பவில்லை. அதை மக்களிடம் ரேடியோ மூலம் பட்டவர்த்தனமாகச் சொன்னார்.

'வன்முறை, பதற்றம், பீதி. நிர்வாகம் செயலிழந்துவிட்டது. மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருக்கிறது. போதாக்குறைக்குப் பொருளாதாரம் வேறு அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இனி சட்டத்தின் ஆட்சியால் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நாடு அழிவின் விளிம்பில் நின்றுகொண்டு இருக்கும்போது, ராணுவம் வெறுமனே கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்காது. நாட்டின் பாதுகாப்பு, சுதந்திரம், ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மீட்டெடுக்க ராணுவம் இந்த நொடியில் இருந்து களத்தில் இறங்குகிறது. தற்போது நம்முடைய தேசத்தை ஆக்கிரமித்திருக்கும் வன்முறை, உள்ளிட்ட அத்துணை பிரச்னைகளையும் அடியோடு ஒழித்து, பாரபட்சமற்ற முறையில் நேர்மையான தேர்தலை நடத்தி, மக்கள் பிரதிநிதிகளிடம் நாட்டை ஒப்படைப்பதுதான் என் ஒற்றை நோக்கம். ஆதரவு கொடுங்கள்!'

'ராணுவத்தில் குப்பை கொட்டிக்கொண்டிருந்த மனிதரால் அரசு நிர்வாகத்தில் ஒன்றும் சாதித்துவிட முடியாது!' என்று கெக்கெலி கொட்டிய அரசியல்வாதிகளுக்கு யாஹியா கான் சொன்ன பதில் இதுதான். 'முப்பத்திரண்டு ஆண்டு காலம் ராணுவத்தை மேய்த்த எனக்கு, உங்களை மேய்ப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை!'

அரசு அதிகாரிகள் பல் பிடுங்கப்பட்ட பாம்புகளாக மாறினர். சர்வம் ராணுவ மயம். யாஹியா கானின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ராணுவ அதிகாரிகள் பலருக்குப் பதவிகள் வழங்கப்பட்டன. ராணுவ நிர்வாகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட பல அதிகாரிகள், முக்கியமான பதவிகளில் அமர்த்தப்பட்டனர்.

ராணுவம், வெளியுறவு, பொருளாதாரம் ஆகிய துறைகளைத் தன்வசம் வைத்துக்கொண்டார் யாஹியா கான். பெயருக்கு எட்டு அரசியல்வாதிகளை அமைச்சர் பொறுப்பில் அமர்த்தியிருந்தார். துணைத் தளபதியாக இருந்த பீர்ஸாதா, கிட்டத்தட்ட பிரதமரைப் போல செயல்பட்டுக் கொண்டிருந்தார். ராணுவ அதிகாரி ஹாஸன் என்பவரே அரசின் சட்ட ஆலோசகர். சுருக்கமாகச் சொல்வதென்றால், ராணுவ அதிகாரிகளே தடியெடுத்த தண்டல்காரர்களாகத் திரிந்து கொண்டிருந்தார்கள். ஏழெட்டு மாதங்களுக்கு இதே கூத்துகள் தான்.

நவம்பர் 28, 1969 அன்று திடுதிப்பென பாகிஸ்தான் ரேடியோ ஒரே செய்தியைத் திரும்பத் திரும்ப ஒலிபரப்பிக்கொண்டு இருந்தது. தேர்தல். மக்களுக்கு சந்தோஷம். முக்கியமாக - அரசியல்வாதிகளுக்கு. தேர்தல் முடிந்ததும் அமையப்போகும் நாடாளுமன்றம் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும். அதை அங்கீகரிக்கக்கூடிய அதிகாரம், அதிபரான தனக்கு மட்டுமே உண்டு என்று அறிவித்தார் யாஹியா கான்.
அப்துஸ் சத்தார் என்ற உச்ச நீதிமன்ற நீதிபதியைத் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்தார் யாஹியா கான். 1961-ம் ஆண்டுக்கான மக்கள் தொகைப் பட்டியலை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிரகாரம் வாக்காளர் பட்டியலைத் தயார் செய்யுங்கள். அப்படியே பழைய தொகுதிகளை மறுசீரமைப்பு செய்துவிடுங்கள். முக்கியமான விஷயம், ஆஸாத் காஷ்மீர் (இந்திய பாஷையில், பாகிஸ்தானால் ஆக்கிர மிக்கப்பட்ட காஷ்மீர்) மக்களும் இந்தத் தேர்தலில் வாக்களிக்கப்போகிறார்கள். அதற் கான ஏற்பாடுகளைச் செய்துவிடுங்கள்!' -அப்துஸ் சத்தாருக்கு யாஹியா கான் ஒதுக்கிய வேலைகள் இவைதான்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 5, 1970. ஆனால், ஜூன் மாதமே தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் முடிவடைந் திருந்தன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியே எழுபது லட்சம் என்று அறிவிக்கப்பட்டது. தடை செய்யப்பட்டிருந்த அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்பட்டன. இனி கட்சிகள் அரசியல் பேசலாம்; பிரசாரம் செய்யலாம். தேர்தல் நடத்துவது மட்டும்தான் பாக்கி என்ற நிலை.
தேர்தல் நடத்துவதில் புயலுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. 'போலா' என்ற பெயரில் உருவான பலத்த புயல் ஒன்று ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியெடுத்துவிட்டது. முக்கியமாக, கிழக்கு பாகிஸ்தானுக்கு பலத்த அடி. உயிர்ச்சேதம். பொருள்சேதம். இத்யாதி இத்யாதிகள். விளைவு, தேர்தல் டிசம்பருக்கு நகர்த்தப்பட்டது.

புயலால் ஏற்பட்ட வடு மறைவதற்குள் மக்கள் தேர் தலுக்குத் தயாராகவேண்டிய நிலை. ஆனால், இந்த அக்கறை எதுவும் இல்லாமல் அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் குதித்துவிட்டன.

'இஸ்லாம் எங்களுடைய நம்பிக்கை. ஜனநாயகம் எங்களுடைய கொள்கை. சோஷலிசம் எங்களுடைய கோட்பாடு.' என்ன... வித்தியாசமாக இருக்கிறதா? ஆம். கொஞ்ச காலம் தலைமறைந்திருந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோ, வெகுநாட்களுக்குப் பிறகு காட்சிக்குள் நுழைந்திருந்தார். அப்போது 'இஸ்லாமிய சோஷலிசம்' என்ற புதிய கொள்கையை அறிவித்தார் புட்டோ. மேற்கு பாகிஸ்தானை மையம்கொள்ளத் தொடங்கியது புட்டோ புயல்.
இதற்கு நேர் எதிராகத் தன் ஆறு அம்சக் கோரிக்கையுடன் கிழக்கு பாகிஸ்தான் பிரசாரக் களத்தில் குதித்திருந்தார் ஷேக் முஜிபுர் ரஹ்மான். அவர் சொன்ன ஆறு அம்சங்களும் மிக முக்கியமானவை.
வயதுவந்த வாக்காளர்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய நாடாளுமன்றத்தால் நாடு நிர்வகிக்கப்பட வேண்டும், ராணுவம் மற்றும் வெளியுறவு தவிர மற்ற அனைத்துத் துறைகளும் மாநில நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். நாடு முழுக்க ஒரே கரன்ஸி பயன்படுத்தப்பட வேண்டும். மாநிலத்தின் வரி மற்றும் வருவாய் விவகாரத்தில் மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலை யிடக் கூடாது, வெளிநாடுகள் மூலமாகக் கிடைக்கும் வருவாய் தொடர்பான தனித்தனி கணக்குகள் பின்பற்றப்பட வேண்டும். கிழக்கு பாகிஸ்தானுக்கென்று பிரத்தியேகமாக ராணுவம் உருவாக்கப்பட வேண்டும்.

முஜிபுரின் கோரிக்கைகளுக்கு கிழக்கு பாகிஸ்தானில் பலத்த ஆதரவு. அதே போல புட்டோ மேற்கு பாகிஸ்தானில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தார். தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று வெவ்வெறு கருத்துக் கணிப்புகள் வந்துகொண்டிருந்தன. ஆனால், தேர்தல் முடிவுகள் அனைத்துக் கட்சிகளுக்குமான அதிர்ச்சி வைத்தியமாக அமைந்ததுதான் சுவாரஸ்யம்!

No comments: