Tuesday 24 February, 2009

முகமதிய பயங்கரவாதிகள் மீதான அமெரிக்காவின் போர் குறித்து.

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் பதுங்கியிருக்கும் முகமதிய பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா எடுத்துவரும் போர் நடவடிக்கைகள் குறித்த ஆனந்த விகடன் கட்டுரை.
::::::::::::::::::::::::::::::::::
25 February 2009
*********************************

அமெரிக்காவின் அடுத்த அட்டாக்!
மருதன், பாஸ்போர்ட்

தொட்டில் பழக்கம். மீண்டும் போரைப் பற்றி தான் சிந்தித்துக்கொண்டு இருக்கிறது அமெரிக்கா. இராக்குக்குப் பிறகும், பொருளாதாரச் சீரழிவுக்குப் பிறகும்!

இரு எதிரிகள்... அல்-கொய்தா மற்றும் தாலிபன். இரு தேசங்கள்... பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான். ஒரே கல்லில் அடித்து வீழ்த்திவிடலாம் என்கிறார்கள் ராணுவ ஆலோசகர்கள். தீவிரவாதத்துக்கு எதிரான மாபெரும் போர். புஷ் சென்ற அதே திசை.... புஷ் கையாண்ட அதே கொள்கை... புஷ் காட்டிய அதே தீவிரம்!

இப்போது தொடங்கினால் சரியாக இருக்கும். இதைவிட்டால் இன்னொரு சந்தர்ப்பம் அமையாது. அபாயம், ஆபத்து, எச்சரிக்கை என்று பக்கம் பக்கமாக ரிப்போர்ட்டுகளை அள்ளிக்கொண்டுவந்து அவர் மேஜையில் குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். ''மிஸ்டர் பிரசிடென்ட், இன்னொரு போரா என்று மிரள வேண்டாம். அநாவசியத் தயக்கம் வேண்டாம். மக்கள் ஒருபோதும் போரை வெறுப்பதில்லை. தோல்வியைத்தான் வெறுக்கிறார்கள். நீங்கள் ஜெயிக்கப் பிறந்தவர். ஆல் தி பெஸ்ட்!''

அல்-கொய்தா வறண்டுவிட்டது. அவர்களால் பெரும் திட்டங்களை இனி தீட்ட முடியாது என்று சற்று முன் னால்தான் அறிவித்திருந்தார் ஒபாமா. தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டுவிட்டார். காரணம், ஒபாமா எதிர்பார்த்ததைப் போல் அல்லாமல், அல்- கொய்தா விழித்துக்கொண்டுவிட்டது. பாகிஸ்தான் எல்லைப் பிரதேசங்களில் இருந்து அதற்கான சமிக்ஞைகள் கிடைத்துவிட்டன. ஏற்கெனவே, தாலிபன்கள் பரவியிருக்கும் பிரதேசம். இரு அபாயங்கள் ஒரேஇடத் தில் கைகோத்துக்கொள்வது அமெரிக்காவுக்கு நல்லது அல்ல... உலகத்துக்கும்! அல்-கொய்தா அலுவலகத்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட வீடியோமிரட் டல், அமெரிக்காவை நிமிர்த்தி உட்காரவைத்திருக்கிறது. 20 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த டேப்பில் பேசி இருப்பவர் அல் ஜவஹிரிக்கு அடுத்த நிலையில் இருக் கும் முஸ்தபா அபு யாசித். ''பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் எண்ணத்தை இந்தியா விட்டொழிக்க வேண்டும். பாகிஸ்தான் மீது குண்டு அல்ல, குண்டின் நிழல் விழுந்தாலும் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். பாகிஸ்தான் அரசி யல் தலைவர்கள் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. ஜர்தாரி ஒழிக்கப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகம் இல்லை. பாகிஸ்தான் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவரை ஆட்சியில் இருந்து தூக்கியெறிய வேண்டியது அவசியம். அது தனிக் கதை. இந்தியாஇதில் தலையிடக் கூடாது. அதற்கு அனுமதிக்கவும் மாட் டோம்.''

இந்தியாவை எச்சரித்ததற்கு அமெரிக்கா ஏன்எரிச்சல் அடைய வேண்டும்? காரணம், இந்த முஸ்தபா அபு யாசித், அல்-கொய்தாவின் ஆப்கன் பிரிவுத் தலைவர். இவர் பாகிஸ்தான் எல்லையில் இருக்கிறார் என்றால், அவர் படைப் பிரிவும் அங்கேதான் இருக்கிறது என்று பொருள். ஆப்கானிஸ்தானை தாலிபன்களிடமும், பாகிஸ்தானை அல்-கொய்தாவிடமும் பிய்த்துக்கொடுத்து விட்டால், அமெரிக்காவின் கதி என்னவாகும்? இரு குழுக்களுக்குமே அமெரிக்கா எதிரி என்னும்போது, எப்படி இதை அனுமதிப்பது? இன்னொரு தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ளும் நிலையில் அமெரிக்கா இல்லை. ஒபாமாவின் ஆலோசகர்கள் பதற்றம்கொள் வதற்கு இதுவே காரணம்.
முறைப்படி போரைத் தொடங்குவதற்கு முன்னால் ஒரு சர்வே செய்து பார்த்துவிட முடிவெடுத்திருக்கிறது அமெரிக்கா. இப்போதைய திட்டம் இதுதான். அமெரிக்காவின் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுஇருக் கும் ரிச்சர்ட் ஹால்புரூக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இரு தேசங்களுக்கும் நேரில் சென்று நிலைமையை ஆராய வேண்டும். வரும் வழியில், இந்தியாவுக்கு ஒரு பயணம். அவர்கள் திட்டம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது நடந்துவிட்டால், தெளிவான ஒரு சித்திரம் கிடைத்துவிடும். நல்ல நாளாகப் பார்த்து வேலையை ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.

பிரிட்டனும் தன் பங்குக்கு ஒரு தூதரைத் தயார் செய்துவிட்டது. ஷெரார்ட் கூப்பர் கோல்ஸ்... ஆப்கானிஸ்தானுக்கான தூதர். அமெரிக்கத் தூதருடன் இவர் இணைந்து செயல்படுவார். பொருளாதார வீழ்ச்சியில் கூடிய விரைவில் அமெரிக்காவைத் தொட்டுவிடும் நிலையில் இருக்கிறது பிரிட்டன். வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை சென்ற வாரம் வரை 1.97 மில்லியன். இன்னும் மூன்று மாதங்களில் 2 மில்லியன் ஆகிவிடும். ஆனாலும், போர் என்று வந்துவிட்டால் அமெரிக்காவுக்குத் தோள் கொடுத்தாக வேண்டும். அமெரிக்காவின் எதிரி பிரிட்டனின் எதிரியும்தானே?

கிட்டத்தட்ட கூட்டணி தயார். அமெரிக்கா, பிரிட்டன். ஆதரவுக்கு இந்தியா. போருக்கான அவசியத்தையும் பாகிஸ்தானிடம் எடுத்துச் சொல்லியாகிவிட்டது. 'அல்- கொய்தாவையும் தாலிபன்களையும் உங்களால் சமாளிக்க முடியாது. சர்வதேச ஒத்துழைப்பும், உதவியும், அனுதாபமும் உங்களுக்குத் தேவைப்படுகின்றன. தயாராக இருங்கள். எந்நேரமும் ஆரம்பிப்போம்.'

பாகிஸ்தானில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்துவிட்டது. எல்லைப் பிரதேசத்தைத் தாக்குகிறோம் என்று சொல்லிக்கொண்டு, அமெரிக்காவும் நேடோவும் வாரம் இருமுறை குண்டு தூவிக்கொண்டே இருக்கின்றன. தீவிரவாதிகள் அல்ல, ஆப்கன் பழங்குடிகள்தான் பெருமளவில் இறக்கிறார்கள். ஆப்கனில் தொடரும் யுத்தமே பாகிஸ்தானை அலைக்கழிக்கும்போது, பாகிஸ்தானை நேரடியாகத் தாக்க ஆரம்பித்துவிட்டால் என்ன ஆகும்? ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் இதே கவலை. தற்சமயம் 32 ஆயிரம் வீரர்கள் ஆப்கன் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். கூடுதலாக 30 ஆயிரம் பேரை அனுப்பப் போவதாகச் சொல்லிஇருக்கிறார் ஒபாமா. ராணுவத்தின் பலம் இரட்டிப்பாகும்போது இழப்பின் பலமும் இரட்டிப்பாகப் போகிறது. என்ன செய்வது?

போர் நிச்சயம் என்று அமெரிக்கா முடிவெடுத்துவிட்டால், ஐந்து விளைவுகளை உலகம் எதிர்பார்க்கலாம். முதல் அடி, அமெரிக்காவுக்கு. தேசத்தைத் தூக்கி நிறுத்தும் பணி தொய்வடையும். அமெரிக்கர்களின் பணமும், பொருளும், கவனமும், உழைப்பும் மற்றுமொரு பேரழிவுக்குச் செலவிடப்படும். ஏற்கெனவே பள்ளத்தில் இருக்கும் அமெரிக்கா, பாதாளத்துக்குப் பாயும்.

ஆப்கானிஸ்தான் நாசமாகும். தாலிபன்கள் ஒரு பக்கமும், அமெரிக்கர்கள் இன்னொரு பக்கமுமாக மாறி மாறி ஆப்கனை அடிக்க, முழு நீளப் போர் ஆரம்பமானால், சருகுகள்கூட மிஞ்சியிருக்காது. மூன்றாவது விளைவு, பாகிஸ்தானின் அழிவு. போராட்டங்களும் கிளர்ச்சிகளும் இப்போதே தொடங்கிவிட்டன.

இராக்கில் இருந்து வெளியேறப் போகிறோம் என்னும் ஒபாமாவின் அறிவிப்பால் கிடைத்த கொஞ்சநஞ்ச நல்ல பெயரும் அழிந்துபோகும். ஒபாமா மட்டுமல்ல, யார் வந்தாலும் அமெரிக்காவுக்கு மாற்றம் சாத்தியமல்ல என்பது நிரூபணமாகும்!

தீவிரவாதம் இன்னும் அதிகமாகும். சுண்டைக்காய் தேசமான இராக்கில் மாட்டிக்கொண்டு இன்று வரை அமெரிக்கா விழிபிதுங்கிக்கொண்டு இருப்பது ஏன்? அமெரிக்காவைவிட இராக்கின் படை பலம் பெரிதா? ஆப்கானிஸ்தான்? கஞ்சாச் செடிகளும் குகைகளும்கொண்ட ஒரு பாழடைந்த தேசத்தை இன்று வரை அமெரிக்காவால் வெல்ல முடியாமல் இருப்பது ஏன்? காரணம், அமெரிக்காவுடன் மோதிக்கொண்டு இருப்பது இராக் ராணுவமும் ஆப்கன் ராணுவமும் அல்ல. இராக்கியர்களும் ஆப்கானிஸ்தான் மக்களும்தான். ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு வெல்வது சுலபம். மக்களை வெல்வது கடினம்!

அமெரிக்கா அலறுவது போல் உண்மையில் ஆப்கன் - பாக். எல்லை அத்தனை பயங்கரமானதா? இங்கிருந்துதான் அல்-கொய்தா பயிற்சி எடுத்துக்கொள்கிறதா? திட்டமிடுகிறதா? தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் இந்தப் பிரதேசம் மட்டும்தானா? நினைவிருக்கட்டும். செப்டம்பர் 11 - தாக்குதல் திட்டம் பெருமளவில் உருவானது பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ அல்ல... ஜெர்மனி மற்றும் ஃப்ளோரிடாவில். போரைப் பற்றிச் சிந்திப்பதற்கு முன்னால், இல்லாத இடத்தில் எதையோ தேடி, எதையெதையோ பெற்றுக்கொண்ட புஷ்ஷின் கதையை ஒபாமா ஒரு முறை நினைவுபடுத்திக்கொள்ளட்டும்!

No comments: