Tuesday 24 February, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (14)

வேலி தாண்டிய வெள்ளை நரி!

'என் தேசம் கிழக்கு பாகிஸ்தான்; என் மக்கள் வங்காளிகள். அவர்களுடைய ஒரே நம்பிக்கை, என்னுடைய அவாமி லீக் கட்சி. பிறகு எதற்காக மேற்கு பாகிஸ்தானில் போட்டியிட வேண்டும்? அங்கே இருப்பவர்கள் அவாமி லீக்கை ஆதரிப்பார் களா? சத்தியமாக வாய்ப்பில்லை. வீண் கௌரவம் பார்த்து, எல்லாத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினால்... உழக்குகூட மிஞ்சாது!' -கூர்மையாகச் சிந்தித்தார் முஜிபுர் ரஹ்மான்.

''கிழக்கு பாகிஸ்தானுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் 162 நேஷனல் அசெம்பிளி தொகுதிகளிலும் அவாமி லீக் போட்டியிடும். பிற மாகாணங்களில் வெறும் எட்டு வேட்பாளர்களை மட்டும் நிறுத்தும். கிழக்கு பாகிஸ்தானில் மட்டும் தொண்டர்கள்

கவனம் கலை யாமல் உழைப்பைச் செலுத்தினால், பரிபூரண வெற்றி சாத்தியம்!''

அவாமி லீக் தொண்டர்களின் மூளைக்குள் மந்திரம் போல ஒலிக்கத் தொடங்கின முஜிபுரின் வார்த்தைகள். கிழக்கு பாகிஸ்தானின் ஒவ்வோர் அங்குலத்திலும் முஜிபுரின் தொண்டர்கள் தடம் பதித்துத் தேர்தல் பணிகளைச் செய்தனர். தொண்டர் களைக் களத்துக்கு அனுப்பிவிட்டு, குளிர்சாதன அறையில் ஓய்வெடுக்காமல், முஜிபுரும் கிழக்கு பாகிஸ்தானிலேயே மையம்கொண்டு சுழன்று கொண் டிருந்தார்.

முஜிபுரைவிட, தீர்க்கமாகத் திட்டம் வகுத்திருந்தார் புட்டோ. அவர் களத்தில் இறக்கியது, வெறும்120 வேட்பாளர்களை மட்டுமே. அதிலும்முஜிபுரின் கோட்டையான கிழக்கு பாகிஸ்தானில் புட்டோ ஒருவரைக்கூட நிறுத்தவில்லை. மேற்கு பாகிஸ் தானில்தான் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார். எத்தனுக்கு ஏற்ற ஜித்தன் அவர்.

தன்னம்பிக்கை மிளிர, இரு தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஒருவழியாகத் தேர்தல் நடத்தப்பட்டு... முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கிழக்கு பாகிஸ்தானின் இரண்டு தொகுதிகளைத் தவிர, அத்தனை தொகுதிகளையும் வாரிச் சுருட்டி மிகப்பெரிய புரட்சியை நிகழ்த்திக் காட்டியது முஜிபுரின் அவாமி லீக்! போதாக்குறைக்கு கிழக்கு பாகிஸ்தானின் மாகாண அசெம்பிளியில் 288 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்து நின்றது அவாமி லீக்.

மேற்கு பாகிஸ்தானில் மொத்தமுள்ள 138 தொகுதி களில் 81 தொகுதிகளை வென்றது புட்டோவின், பாகிஸ்தான் மக்கள் கட்சி. குறிப்பாக, சிந்த் மற்றும் பஞ்சாபில் நல்ல அறுவடை. வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் பலுசிஸ்தானத்தில் தேசிய அவாமி கட்சிக்குக் கணிசமான வெற்றி. இங்கெல்லாம் புட்டோ வுக்கோ முஜிபுருக்கோ ஒன்றுமே இல்லை!
அடுத்து ஆட்சியைப் பிடிப்பது யார்? பதில் சொல்ல வேண்டிய முஜிபுர், புட்டோ மற்றும் யாஹியா மூவரும் ஆளுக்கொரு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். காரணம், ஆளுக்கொரு திட்டம். ஆளுக்கொரு கனவு வைத்திருந்தார்கள். உண்மையில் ஆட்சி அமைப்பதற்கான முழுத் தகுதியும் முஜிபுருக்கு இருந்தும், முட்டுக்கட்டைகள் அவர் முன்னால் அடுக்கப்பட்டிருந்தன.

'தேர்தலில் மக்கள் வித்தியாசமாக முடிவெடுத்திருப் பதால், முஜிபுரை ஒட்டுமொத்த தேசத்தின் பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது!' என்று போர்க்கொடி உயர்த்தினார் புட்டோ. 'இது என்னய்யா புது நியாயமாக இருக்கிறது? மெஜாரிட்டி என் வசம் இருக்கும்போது, நான் பிரதமராவதில் என்ன சிக்கல் இருக்கமுடியும்?' என்று கேட்டார் முஜிபுர். நியாயமான கேள்வி!
நீதிபதி ஸ்தானத்தில் நின்று கொண்டிருந்த யாஹியா கானோ, எல்லாவற்றுக்கும் மௌன சாட்சியாகவே இருந்தார். காரணம், முஜிபுரை பிரதமராக ஏற்றுக்கொள்வதில் யாஹியாவுக்கு உள்ளுக்குள் கடும் தயக்கம். அதை வெளிப்படையாகச் சொன்னால் நன்றாக இருக்காது என்பதால், பூசி மெழுகிச் சொல்ல விரும்பினார். முஜிபுரை அழைத்துப் பேசினார்.
''உச்சகட்டக் குழப்பத்தைத் தந்திருக்கின்றன தேர்தல் முடிவுகள். மேற்கு மக்கள் உங்கள் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இப்படியே போனால், நீங்கள் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பே இல்லாது போய்விடும். இத்தனை சிரமப்பட்டு தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றுவிட்டு மூலையில் போய் உட்காருவதில் என்ன இருக்கிறது? நான் ஒரு யோசனை சொல்கிறேன். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது உத்தமம். ஈகோவைத் தூக்கி தூரமாக வைத்துவிட்டு, புட்டோவிடம் சென்று பேசிப் பாருங் கள். உங்களுக்குள் ஒத்துப் போய்விட்டால்... பிறகு, ஆட்சி அமைப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை!''

வியூகம் புரிந்துவிட்டது முஜிபுருக்கு. 'புட்டோவால் திரைக்கதை எழுதப்பட்டு, யாஹியாவால் இயக்கப்படும் நாடகம்தான் எல்லாமே. கொஞ்சம் பிசகினாலும் சமாதி கட்டிவிடுவார்கள். கவனம் தேவை!' -மானசீகமாகத் தனக்குள் எச்சரித்துக்கொண்டார் முஜிபுர்.

''அய்யா, எனக்கு புட்டோவுடன் கைகுலுக்குவதில் விருப்பமில்லை. அதற்கான அவசியமும் இல்லை. புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்!'' -பளிச்சென்று சொல்லி விட்டுப் புறப்பட்டுவிட்டார் முஜிபுர். எள்ளும் கொள்ளும் வெடித்துச் சிதறின, யாஹியாவின் முகத்தில்.

ஊருக்கு வந்ததும் முதல் காரியமாக பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

'புட்டோவும் யாஹியாவும் என்னை நசுக்கப் பார்க்கிறார்கள். தேர்தல் முடிவுகளைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு ஆட்சியைப் பகிர்ந்து கொள்ளத் திட்டம் வகுத்துவிட்டார்கள்!' என்று சொல்லியிருந்தார்.
கொஞ்சம் விட்டுப்பிடிக்க முடிவு செய்தார் யாஹியா கான். அதன்படி மார்ச் 3, 1971 அன்று முஜிபுரையும்புட்டோவையும் டாக்காவில் சந்திக்க வைத்தார். 'இதெல்லாம் வேலைக்கு ஆகாது!' என்று புலம்பிக்கொண்டே சந்திப்பில் கலந்துகொண்டார் முஜிபுர். எதிர்பார்த்தபடியே பேச்சுவார்த்தை தோல்வி.
ஆத்திரம் வந்துவிட்டது யாஹியா கானுக்கு. நேஷனல் அசெம்பிளியை ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டார். இது முஜிபுரை கொதிப்படைய வைத்து விட்டது.

''துரோகத்துக்கு பலியான கிழக்கு பாகிஸ்தானியர்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக, ஐந்து நாட்களுக்கு ஹர்த்தாலில் ஈடுபடுவார்கள்!'' என்று அறிவித்தார் முஜிபுர். இதை வலியுறுத்த மார்ச் 7, 1971 அன்று ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், ''கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு உடனடித் தேவை, சுதந்திரம். ராணுவ ஆட்சியில் இருந்து பரிபூரண விடுதலை!'' என்றார் முஜிபுர். இது மக்கள் மத்தியில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத் தியது.

கிழக்கு பாகிஸ்தானியர்கள் சாலைக்கு வந்து விட்டனர். எங்கு பார்த்தாலும் சுதந்திர கோஷம். யாஹியாவையும் புட்டோவையும் திட்டித் தீர்க்கத் தொடங்கினர். வரி கட்ட முடியாது என்று முரண்டு பிடித்தனர். யாஹியாவின் ஆட்சி அதிகாரத்துக்கு நாங்கள் கட்டுப்பட முடியாது என்றனர். எங்கு பார்த்தாலும் வன்முறை. போராட்டம். ஊர்வலம். பேரணி. எல்லாம்... எல்லாம்!
தலைவலி முற்றிவிட்டது. ராணுவ வைத்தியம்தான் பலன் கொடுக்கும் என்று முடிவு செய்தார் யாஹியா கான். அவருடைய கண்ணசைவுக்கு ஏற்ப ராணுவத் தளபதி ஜெனரல் டிக்கா கான், கிழக்கு பாகிஸ்தானை தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டார். அங்கு கால்பதித்ததும் டிக்கா கான் செய்த முதல் காரியம், அவாமி லீக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளுக்குக் கிடுக்கிப்பிடி போட்டதுதான்.

சாலையில் இறங்கிப் போராடிய கிழக்கு பாகிஸ்தானியர்களின் முதுகெலும்பை ஒடிக்கும் நடவடிக்கையில் இறங்கியது ராணுவம். நாலு பேர் கூடி நின்று பேசினாலே அடி, உதை, சிறை. கிழக்கு பாகிஸ்தானில் இருக்கும் அத்தனை பத்திரிகைகளுக்கும் தணிக்கை அமல்படுத்தப்பட்டது.
வெளித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. கிட்டத்தட்ட கிழக்கு பாகிஸ்தானைத் தனித் தீவாக உருமாற்றம் செய்திருந்தது ராணுவம்.

தலைக்கு மேலே வெள்ளம் வந்துவிட்டது. 'இனியும் இந்தியாவை அணுகாவிட்டால், எதற்கும் உத்தரவாதமில்லை!' என்ற எண்ணம் முஜிபுருக்கு வந்திருந்தது.

அப்போது இந்திய பிரதமராக இருந்தவர் இந்திராகாந்தி. கிழக்கு பாகிஸ்தான் மீது ஏற்கெனவே மெல்லிய பாசம் இந்திராவுக்கு. முஜிபுரே வாய்திறந்து கேட்ட பிறகு, வல்லிய பாசம் வந்துவிட்டது. 'நம்பினோர் கைவிடப்படார்!' என்று சொல்லிவிட்டார் இந்திரா. பெருமூச்சு விட்டார் முஜிபுர்.
கிழக்கு பாகிஸ்தானில் எது நடந்தாலும் யாஹியா கானின் கவனத்துக்குச் சென்றுவிடும். முஜிபுரின் நடவடிக்கைகள் மெள்ளக் கசிந்து, யாஹியாவின் காது களுக்குள் ஊடுருவின. 'ஓஹோ, வெள்ளை நரி வேலி தாண்டுகிறதா? ம்ஹ§ம்... இனியும் விட்டு வைத்தால் மனிதர் ஒட்டுமொத்த தேசத்தையும் காவு கொடுத்து விடுவார். உள்ளே வைத்துவிட வேண்டியதுதான்!'
உத்தரவிட்டார் யாஹியா.

முஜிபுரை கைது செய்த கையோடு மேற்கு பாகிஸ்தானுக்கு பார்சல் செய்து அனுப் பியது ராணுவம். 'முஜிபுரை முடக்கிவிட்டால்... எல்லாவற்றையும் முடக்கிவிடலாம்!' என்பது யாஹியாவின் கணிப்பு. அதை சுக்குநூறாக சிதறச் செய்தனர் கிழக்கு பாகிஸ்தானியர்கள். ஆவேசம் பொங்கப் போராட்டத்தில் குதித்தனர். மீண்டும் ரணகளம்.

முஜிபுர் கைது செய்யப்பட்டு விட்டதால், போராட்டத்தை வழிநடத்த முன்வந்தார் ஜியாவுர் ரெஹ்மான். கிழக்கு பாகிஸ்தானுக்கான ராணுவத் தளபதி அவர். முஜிபுரின் அன்புக்குப் பாத்திரமானவர்.

'இனி கிழக்கு பாகிஸ்தான் என்ற பிராந்தியமே கிடையாது. இனி அந்தப் பிரதேசத்தின் பெயர், பங்களாதேஷ். சுதந்தர பங்களாதேஷ். அதன் அதிபர் ஜியாவுர் ரெஹ்மானியாகிய நான். என்னுடைய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்திருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தை பங்களாதேஷ் வீரர்கள் விரட்டி அடிப்பார்கள்!'

கிழக்கு பாகிஸ்தானியர்களுக்கே அதிர்ச்சியளித்த முடிவு இது. ஆனால், எல்லாமே முஜிபுர் போட்டுக் கொடுத்த திட்டம் என்பது தெரிந்ததும், சந்தோஷம் தாங்கவில்லை கிழக்கு பாகிஸ்தானியர்களுக்கு. அப்போதுதான் கிழக்கு பாகிஸ்தானில் இருக்கும் 'முக்தி பாஹினி' போராளிகள், பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டனர். ஆத்திரம் பொங்க எல்லோரையும் கொன்று குவிக்கத் தொடங்கியது ராணுவம். தவிரவும், காமவெறி பிடித்தவர்களைப் போல கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து, தூக்கி வீசினர்.

பாகிஸ்தானின் உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. அந்த விமானங்கள் எல்லாம் 'அரசுப் பணிக்காக' என்ற பெயரில் ஏராளமான நபர்களை ஏற்றிக்கொண்டு டாக்கா சென்றன. அவர்கள் அத்தனை பேரும் சாதாரண உடையில் சென்ற ராணுவ வீரர்கள். தாக்குவது ராணுவம்தான் என்று தெரியாமல் இருப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு அது. இந்தச் சமயத்தில் ராணுவத் தளபதி டிக்கா கான் மாற்றப்பட்டார். அவருடைய இடத்தில் துணைத் தளபதி நியாஸி வந்து சேர்ந்தார். எல்லாம் யாஹியாவுக்கே வெளிச்சம்.

தாக்குதலை சமாளிக்க முடியாமல் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் நுழையத் தொடங்கினார்கள். அது இந்தியாவுக்கும் பெரும் தலைவலியை உண்டாக்கியது. தங்களுடைய சொந்த உறவுகளைக் கொன்று குவித்துக்கொண்டே... அண்டை நாட்டுக்கும் பிரச்னை ஏற்படுத்து வதைப் பொறுக்க முடியாமல், கிழக்கு பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா நுழைந்தது. வெறும் உள்நாட்டு யுத்தமாகக் கருதப்பட்ட விஷயம், மெள்ள இந்தியா-பாகிஸ்தான் யுத்தமாக உருவெடுத்தது. விளைவு, பாகிஸ்தான் என்ற தேசத்தில் இருந்து பங்களாதேஷ் என்ற புது தேசம் உருவாக்கப்பட்டது.
கிட்டத்தட்ட மூன்று லட்சம் உயிர்கள் பலியாகி யிருந்தன. ஆனால், ஐந்து லட்சம் உயிர்கள் என்கிறது இன்னொரு புள்ளிவிவரம். இரு தேசங்களுக்கு இடையே மிகப்பெரிய யுத்தம் நிகழ்ந்து முடிந்திருந்தது. இத்தனைக்கும் காரணம் புட்டோவின் ஈகோ. அவர் மட்டும் ஆட்சி அமைப்பதில் முரண்டு பிடிக்காமல் இருந்திருந்தால்... இத்தனை இழப்புகளும் தவிர்க்கப் பட்டிருக்கும். அதைப் பற்றியெல்லாம் அவர் துளியும் கவலைப்படவில்லை.

எல்லாவற்றையும் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு அடுத்த பாய்ச்சலுக்குத் தயாரானார்!

No comments: