Thursday 19 February, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (12)

********************
15th February
********************
விடாக்கண்டன்... கொடாக்கண்டன்!

'நாம் அடித்தால்... திருப்பியடிக்கும் திராணிகூட இந்தியாவுக்குத் தற்போது இல்லை. கொஞ்சம் கவனம் கலைந்தாலும், இந்தியாவை கபளீகரம் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறது சீனா. இப்போது நாம் களத்தில் இறங்கினால், கச்சிதமாகக் காரியத்தை முடிக்கலாம் என்ன சொல்கிறீர்கள்?' -ஆளாளுக்கு தூபம் போட்டுக் கொண்டிருந்தனர்.

அனைத்துக் கருத்துகளையும் காதில் வாங்கிக் கொண்டார் அயூப்கான். ஆனால், மூளைக்குள் அனுமதிக்கவில்லை. நிதானம் குறையாமல் பேசினார்.
'நண்பர்களே, எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. என் ராணுவம் மிக பிரமாண்டமானது. யாருக்கும் சளைத்ததில்லை. இந்தியாவோடு நேருக்குநேர் மோதி ஜெயிப்பதைத்தான் விரும்புகிறேன். முதுகில் குத்துவது அவமானம்!'

அயூப்கானின் இந்த வித்தியாசமான வீரவசனம் சுற்றி யிருந்த அதிகாரிகளை
வாய்பிளக்க வைத்தது. 'என்ன மனிதர் இவர்? இவருடைய வியூகத்தைப் புரிந்துகொள்ளப் புண்ணியம் செய்திருக்க வேண்டும் போல...' என்று புலம்பியபடியே நகர்ந்துவிட்டனர். இந்திய-சீன யுத்தச் செய்திகளை பேப்பரில் படித்துக்கொண்டிருந்த அயூபுக்கு திடீரென்று ஒரு யோசனை.

'நம்மை உச்சாணிக் கொம்பில் உட்கார வைத் திருக்கிறார்கள். கேட்டதையெல்லாம் அள்ளிக் கொடுக்கிறார்கள்; சமயத்தில் கேட்காதபோதும் கொடுக் கிறார்கள். ராணுவத்தை அங்குலம் அங்குலமாக வளர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். பதிலுக்கு நான் என்ன செய்தேன்?' விநோதமான சிந்தனை வந்திருந்தது அயூப்கானுக்கு. அவர் அன்புப்பரிசு கொடுக்க விரும் பியது அமெரிக்காவுக்கு. நேராக அவர்களிடமே கேட் டார். 'என்ன வேண்டும் உங்களுக்கு?'

'எங்கள் உளவுத் துறை உத்தமோத்தமர்கள் சிலர், உங்கள் நாட்டில் இருந்துகொண்டு சில காரியங்களைச் செய்ய விரும்புகிறார்கள். ரஷ்யா சம்பந்தமாக ஏதோ ஆராய்ச்சி செய்ய வேண்டுமாம். இடம் இல்லாமல் தவிக்கிறார்கள், பாவம். உங்களால் உதவ முடியுமா?'

அமெரிக்க ஒட்டகம் தெற்காசியக் கூடாரத்துக்குள் நேரடியாகவே கால்வைக்க விரும்புகிறது.

'தாராளமாக அனுப்புங்கள். வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள் எல்லாம் காலியாகத்தான் இருக்கின்றன. படாபர் என்ற இடத்தை ஸ்பெஷலாகத் தயார் செய்து கொடுக்கச் சொல்கிறேன். பயன்படுத்திக் கொள்ளட்டும்' என்றார் அயூப்கான்.

'ஆங், கேட்க மறந்துவிட்டோம். எங்களுடைய உளவு விமானங்களை இயக்க ஏதேனும் ஒரு விமான நிலையத்தில் அனுமதி கொடுக்க முடியுமா?' -பக்கு வம் குறையாமல் கேட்டது அமெரிக்கா. 'அவ்வளவுதானே... பேஷாக பெஷாவர் விமான நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!' என்றார் அயூப்கான். அகமகிழ்ந்து போனது அமெரிக்கா. சில மில்லியன் டாலர்களை அன்பளிப்பாக வழங்கியது.

உற்சாகமடைந்த அயூப், சூட்டோடு சூடாக அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.

'வாக்காளப் பெருமக்களே, தேர்தலுக்குத் தயாரா குங்கள். அடியேனையே மீண்டும் அதிபராக்க உங்க ளுக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு...'

கடந்த முறை போலல்லாமல் 1965 தேர்தலில் வித்தியாசமான எதிர்ப்பை அயூப்கான் சந்திக்க வேண் டியிருந்தது. பாகிஸ்தானின் பிரதான எதிர்க்கட்சிகள் ஐந்தும் ஓரணியில் திரண்டு நின்றன. போதாக்குறைக்கு தங்களுடைய பொது வேட்பாளாராக தேசத்தந்தை ஜின்னாவின் சகோதரி ஃபாத்திமா ஜின்னாவை அறி வித்தன.

அதிர்ச்சி. ஆனால், ஆர்ப்பாட்டமெல்லாம் செய்யவில்லை. சத்தமில்லாமல் காய் நகர்த்த விரும்பி னார் அயூப்கான். அரசாங்கத்தின் அனுமதி பெறாமல் யாரும் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்ற அறிவிப்பு வெளியானது.

அமைதியாக இருந்த சிறுத்தையிடம் வலியச் சென்று வம்பிழுத்தது போல இருந்தது அயூப்கானின் நடவடிக்கை. மக்கள் ஃபாத்திமாவைச் சந்திக்க அதீத ஆர்வம் காட்டினர். எங்கு பார்த்தாலும் ஃபாத்திமா அலை. இதைக் கலைக்க அயூப்கான் நாடியது 'உலேமே' என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பை. 'பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய தேசம் ஒரு பெண்ணைத் தன் தலைவராக ஏற்றுக்கொள்ளாது!' என்று அந்த அமைப்பு பிரசாரம் செய்யத் தொடங்கியது.
அதை முறியடிக்கும் வகையில் ஃபாத்திமாவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கிழக்கு, மேற்கு என்று நாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் தடம் பதித்து மக்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டு இருந்தார். ஆனால் ஆட்சி, அதிகாரம், ராணுவம் என்று அத்தனை பேரையும் தன் உள்ளங்கைக்குள் அடக்கியிருந்த அயூப் கானுக்கே வெற்றி வசமானது. மீண்டும் அதிபரானார் அயூப்.

வெற்றி கொடுத்த போதையில் அடுத்து என்ன செய்வது என்று யோசித்த அயூப்கானின் கண்களில் காஷ்மீர் வரைபடத்தைக் காட்டி ஆசைத்தீயை மூட்டி விட்டது உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. சொந்த புத்தி இருந்தும் சொல்புத்தி கேட்டு இந்தியாவுடன் யுத்தத்தைத் தொடுத்தார் அயூப்கான். அந்த யுத்தம் பற்றித் தொடக்க அத்தியாயங்களிலேயே பார்த்துவிட்டோம். உண்மையில் பதிலடி அத்தனை மூர்க்கமாகக் கிடைக்கும் என்று அயூப் துளியும் எதிர்பார்க்கவில்லை.

பக்காவாகத் திட்டம் போட்டிருந்தும் யுத்தத்தில் தோல்வி அடைந்ததை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடிய வில்லை. 'எல்லாம் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ-யின் கையாலாகாத்தனம்!' என்று நொந்துகொண்டார்.

எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு, சுதாரித்து எழுவதற்குள் மூச்சுத் திணறிவிட்டது. இதற்கிடையே இரு தேசத்துக்கும் இடையே போர் நிறுத்தப் பஞ்சாயத்தை செய்துவைக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார், சோவியத் பிரதமர் அலெக்ஸி கோஸிஜின். இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் இருவரையும் தாஷ்கண்ட் நகருக்கு வருமாறு தனித்தனியே அழைப்பு விடுத்திருந்தார் கோஸிஜின் (சோவியத்தில் இருந்த தாஷ்கண்ட் தற்போது உஸ்பெகிஸ்தானில் இருக்கிறது).

சாஸ்திரிக்கு அங்கு செல்வதில் விருப்ப மில்லை. கோஸிஜினின் வற்புறுத்தல் காரணமாகவே தாஷ்கண்ட் புறப்பட்டார். கூடவே, வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண்சிங்கையும் அழைத்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து அதிபர் அயூப்கானும் தாஷ்கண்ட் புறப்பட் டார். அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜுல்ஃபிகர் அலி புட்டோவும் வந்தார்.
ஜனவரி 4, 1966 அன்று பேச்சுவார்த்தை தொடங்கியது. அயூப்கான் விடாக்கண்டன் என்றால், லால் பகதூர் சாஸ்திரி கொடாக்கண்டன். பேச்சுவார்த்தையில் இருவருமே கில்லாடியாக இருந்தனர். காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டால், போர் ஒப்பந்தத்தில் கையெழுத் திடுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றார் அயூப்கான். ஆனால் சாஸ்திரியோ, மற்ற பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றால், அதற்கு போர் நிறுத்த ஒப்பந்தம் மிக அவசியம் என்று கிடுக்கிப்பிடி போட்டார்.

பேச்சுவார்த்தை இழுபறியாகவே சென்றது. சட்டென்று எழுந்த கோஸிஜின், சாஸ்திரியையும் அயூப் கானையும் தனி அறைக்குச் சென்று பேசிவிட்டு வருமாறு யோசனை சொன்னார். அவர்களுடன் ஜுல்ஃபிகர் அலி புட்டோவும் எழுந்து அறைக்குள் நுழைய முயன்றார். ஆனால், அயூப்கானுக்கு புட்டோ வருவதில் லேசான சங்கடம். மனம்விட்டுப் பேசுவதற்கு தடையாக இருப்பார் என்று நினைத்தாரோ என்னவோ... 'வேண்டாம்' என்று கையசைக்கவே முகம் சிவந்துவிட்டது புட்டோவுக்கு. கைகளைப் பிசைந்துகொண்டார். அயூப்கான் - புட்டோ மோதலுக்கு இதுதான் முதல் புள்ளி.

படைகள் வெளியேறுவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நகர்ந்தது. 'நீங்கள் சாம்ப் பகுதியிலிருந்து வெளியேறுங்கள். பதிலுக்கு ஹாஜி பிர் மற்றும் திக்வால் ஆகிய பகுதிகளிலிருந்து இந்திய ராணுவம் வெளியேறிவிடும்' என்றார் சாஸ்திரி. 'பாகிஸ்தானின் பல பகுதிகளுக்குள் இந்திய ராணுவம் ஊடுருவியிருக்கிறது. முக்கிய மாக சிந்த் பகுதியில். முதலில் அங்கிருந்து உங்கள் ராணுவத்தை வெளியேறச் சொல்லுங்கள். மறுநொடியே சாம்பில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் நகர்ந்துவிடும்' என்று திட்டவட்டமாகச் சொன்னார் அயூப்கான். மீண்டும் இழுபறி.

பேச்சுவார்த்தை நீண்டுகொண்டே போனது. ஒரு வழியாக செயல்திட்டம் தயாரிக்கும் வேலை ஸ்வரண்சிங்குக்கும் புட்டோவுக்கும் தரப்பட்டது. இவர்களும் விடாக்கண்டர், கொடாக் கண்டர்கள்தான். 'காஷ்மீர் விவகாரத்தைச் செயல் திட்டத்தில் சேர்த்தாலே ஆச்சு' என்றார் புட்டோ. 'முடியவே... முடியாது!' என்றார் ஸ்வரண்சிங். இரு தரப்புடன் மாறிமாறிப் பேசிப்பார்த்தார் கோஸிஜின். ம்ஹ§ம்... இருவருமே மசிவதாகத் தெரியவில்லை.
இறுதியாக, காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் அமைதியான முறையில் தீர்த்துக்கொள்வதற்கு வகை செய்யும் ஒரு திட் டத்தைக் கொண்டுவந்தார் அயூப்கான். அதைப் பார்த்த சாஸ்திரி, 'ஆயுத உதவியில்லாமல்' என்ற வார்த்தைகளைச் சேர்க்கச் சொன்னார். முதலில் தயங்கிய அயூப், பிறகு சம்மதம் தெரிவித்தார். இதில் புட்டோவுக்குத் துளியும் விருப்பமில்லை.

யுத்தத்தை நிறுத்தியதிலேயே அவருக்கு உடன்பாடு கிடையாது. இந்த லட்சணத்தில் எதிர்காலத்தில் காஷ்மீர் பிரச்னையில் ஆயுதம் பயன்படுத்தப்படக் கூடாது என்பதை ஏற்கவே முடியாது என்றார் புட்டோ. விளைவு, புட்டோ வுக்கும் அயூப்கானுக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றத் தொடங்கியது. புட்டோ தன் நிலைப்பாட்டில் நங்கூரம் போட்டு நின்றிருந்தார். நிலைமையை சமாளிக்க, 'ஆயுத உதவியில்லாமல்' என்ற வார்த்தைகளை வாபஸ் வாங்கிக்கொண்டார். இது கோஸிஜின், சாஸ்திரி உள்ளிட்ட அனைவரையுமே ஆத்திரம்கொள்ளச் செய்தது.

அதிருப்தியடைந்த சாஸ்திரியை சமாதானம் செய்ய கோஸிஜின் பெரும்பாடு படவேண்டியிருந்தது. கோஸிஜினின் விடாமுயற்சியால் தாஷ்கண்ட் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. சாஸ்திரி, அயூப்கான் இருவருமே ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டனர். தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின் சாரம் இதுதான்.

*1965 யுத்தத்துக்கு முன்னால் இரு தேசங்களுக்கும் எது எல்லைக்கோடாக இருந்ததோ, அதுவே எதிர்காலத்திலும் எல்லைக்கோடாக இருக்கும்.

*எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒரு நாடு, இன்னொரு நாட்டு உள்விவகாரங்களில் தலையிடவே கூடாது.

*இரு தேசத்து உறவுகளை சீரழிக்கக்கூடிய எந்தவிதமான பிரசாரத்தையும் இரு தேசத்துத் தலைவர்களும் அனுமதிக்கக் கூடாது.

*யுத்தத்தின்போது கைது செய்யப்பட்ட இரு தேசத்து வீரர்களையும் பரஸ்பரம் ஒப்படைத்துவிட வேண்டும்.

*இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் ராஜீய உறவுகள் தொடரும்.

*அதை மேம்படுத்தும் முயற்சியில் இரு தேசத்துத் தலைவர் களும் ஈடுபடுவார்கள்.

- இந்த ஒப்பந்தம் கையெழுத்தான ஜனவரி 10, 1966 என்ற தேதி சரித்திரத்தில் இடம் பெறுவதில் ஆயிரம் நியாயங்கள் இருக்கின்றன. ஆனால், அதற்கு மறுதினமான ஜனவரி 11-ம் தேதியும் சரித்திரத்தில் இடம்பெறுவேன் என்று அடம் பிடித் தது. அன்று தாஷ்கண்டிலேயே மரணமடைந்தார் லால் பகதூர் சாஸ்திரி. திடீர் மாரடைப்பு.

இந்தியா மிகப்பெரிய அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்க, ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துவிட்ட திருப்தியில் பாகிஸ்தான் வந்திறங்கினார் அயூப்கான். அங்கே அவருக்காக ஒரு புலி வலை விரித்துக் காத்திருந்தது. அந்தப் புலி, ஜுல்ஃபிகர் அலி!

No comments: