Thursday 19 February, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (11)

********************
11th February
********************


ராணுவம் வழியாக ஜனநாயகம்!

மார்புக்குக் குறுக்காகக் கையைக் கட்டிய படி... விறைப்புக் குறையாமல் நடந்து கொண்டிருந்தார் அயூப்கான். அப்படி நடந்தால், மூளைக்கு வேலை கொடுக்கிறார் என்று அர்த்தம். யாரும் கிட்டே நெருங்க மாட்டார்கள். ஓசைப்படாமல் ஒதுங்கி விடுவார்கள். தவறு... ஒதுங்கிவிடவேண்டும்!
எனக்கு இந்த அரசியல் ஆசாமிகளைப் பார்க் கவே வெறுப்பாக இருக்கிறது. வேகம் இல்லை... துடிப்பு இல்லை... வெறி இல்லை... ஆனால், பதவி ஆசை மட்டும் வக்கணையாக இருக் கிறது. கத்தை கத்தையாகப் பணம் குவிக்கத் தெரிகிறது. என்ன மனிதர்கள் இவர்கள்? ஊழல் பெருச்சாளிகளை விட்டுவைக்கவே கூடாது. ஒழித்துக் கட்டவேண்டும். எல்லோரையும்... எல்லாவற்றையும்! இல்லாவிட்டால் நாட்டையே சுடுகாடாக மாற்றி விடுவார்கள்.

என்ன செய்வது என்று முடிவெடுத்து விட்டார். ஆனால், எப்படிச் செய்வது என்பதில்தான் லேசான குழப்பம். அயூப்கானை ஆதர்ச குருவாக ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் ராணுவத்தில் அநேகம். அவரது ஒவ்வோர் அசைவையும் பார்த்துப் பார்த்து வளர்ந்தவர்கள் அவர்கள். முக்கியமாக, அவரை முழுக்கப் புரிந்து கொண்டவர்கள். ஆகவே, ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசினார் அயூப்கான்.

திட்டம் இதுதான். 'ராணுவ ஆட்சியைக் கொண்டுவரலாம் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?' நீட்டி முழக்காமல் பளிச்சென்று கேட்டுவிட்டார். அதுதான் அயூப்கான். சில நிமிடங்களுக்கு கனத்த அமைதி. அவர்களாகப் பேசட்டும் என்று அமைதியாகக் காத்திருந்தார்.

'இல்லை மேஜர், எங்களுக்கு விருப்பமில்லை. ராணுவம் மூலம் ஆட்சியைப் பிடிக்கலாம். தப்பில்லை. உங்களுக்கு அது சுலபமும்கூட. ஆனால், அரசு எந்திரத்தை இயக்கும் அளவுக்கு ராணுவத்தில் அனுபவம் நிறைந்தவர்கள் தற்போது எவரும் இல்லை. கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாமே...'
தோள்களைக் குலுக்கியபடி சிரித்தார் அயூப்கான். 'நிர்வாக அனுபவம் கொண்டவர்கள் இல்லை என்பதுதானே உங்கள் பிரச்னை? பயப்படவே வேண்டாம். அதற்குத் தான் நான் இருக்கிறேன். அரசியல்வாதிகள் ஆபத்தானவர்கள். அவர்களை நம்பி இனி ஒரு நொடிகூட தேசத்தை விட்டுவைக்க எனக்கு விருப்பமில்லை. தேசத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் ராணுவத்தின் பிடியில் கொண்டுவர முடிவெடுத்து விட்டேன். சொல்வது புரிகிறதா? என்னுடைய பிடியில்!'
சொல்லிவிட்டு நேராக அதிபர் இஸ்கந்தர் மிர் ஸாவைப் பார்க்கப் புறப்பட்டார் அயூப்கான்.

'மிஸ்டர் மிர்ஸா. நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். ராணுவ விதிகளின்படி மத்திய சட்டசபை, மாநில சட்டமன்றங்கள் எல்லாம் கலைக்கப்படுகின்றன என்று அறிவித்து விடுங்கள். அமைச்சர்கள், முதலமைச்சர்கள் ஆகியோருடைய பதவிகள் எல்லாம் காலியாகிவிட்டது என்று சொல்லி விடுங்கள். முக்கியமாக, என்னை பாகிஸ்தானுக்கான ராணுவ நிர்வாகியாக அறிவித்துவிடுங்கள்.'

கிட்டத்தட்ட அயூப்பின் மனநிலையில்தான் மிர்ஸாவும் இருந்தார். ஆகவே, காரியம் கச்சிதமாக முடிந்தது. இஸ்கந்தர் மிர்ஸா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆயிரத்துநானூறு வார்த்தைகள் கொண்ட அறிக்கை அது என்பதால், அதன் சாரத்தை மட்டும் பார்த்து விடலாம்.

'தேசத்தில் அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு ஊழல் அதிகரித்து விட்டது. பிரச்னைகள் பெருகி விட்டன. வன்முறைகள் விஸ்வரூபம் எடுத்துவிட்டன. கிழக்கு பாகிஸ் தானில் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது. ஒட்டுமொத்த தேசத்தையும் ஆபத்து சூழ்ந்துள்ளது. ஆகவே, தேசத்தை சீர்ப்படுத்தி, மேம்படுத்தி, வழிநடத்த ராணுவத்துக்கு அழைப்பு விடுக்கிறேன். இந்த நிமிடம் முதல்... தேசத்தில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்படுகிறது.'

அக்டோபர் 24, 1958. அயூப்கான் தலைமையிலான புதிய அமைச்சரவையை நியமித்தார் அதிபர் இஸ்கந்தர் மிர்ஸா. ராணுவ நிர்வாகியான அயூப்கானே பிரதமர். வர்த்தக அமைச்சராக ஜுல்ஃபிகர் அலி புட்டோ. அமைச்சரவையில் அதிகம் ஆக்கிரமித்திருந்தது மேற்கு பாகிஸ்தான் ஆசாமிகள்தான். போனால் போகிறதென்று, நான்கு கிழக்கு பாகிஸ்தான் நபர்களையும் ஆட்டத்தில் சேர்த்திருந்தனர்.

பதவியேற்ற மூன்றாவது நாள் இஸ்கந்தர் மிர்ஸாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் அயூப்கான்.

'என்னுடைய ஆட்சியைக் கவிழ்க்க அதிபர் இஸ்கந்தர் மிர்ஸா சதி செய்வதாகத் தகவல் கிடைத்தது. ஆகவே, அவரை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளேன். தேசநலனை முன்னிட்டு இன்று முதல் அதிபராக அடியேனே செயல்பட இருக்கிறேன்!'

அறிவிப்பு வெளியானதும் மூன்று ராணுவத் தளபதிகளைச் சுமந்துகொண்டு மிர்ஸாவின் வீட்டை நோக்கி ராணுவ வாகனங்கள் விரைந்தன. உறங்கிக்கொண்டிருந்த மிர்ஸா அரக்கப்பரக்க எழுந்து இரவு உடையுடன் வெளியே வந்தார்.

'அய்யா, தேச நலனை உத்தேசித்து உங்களை நாடு கடத்த முடிவு செய்திருக்கிறது ராணுவ அரசு. உங்களுக்கு ஒரு மணி நேரம் அவகாசம். பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்களோ... அதற்கான பயணச்சீட்டை நீங்களே காசு கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். புறப்பட்டு விடுங்கள். அதிபர் உத்தரவு.'
பாகிஸ்தானின் சர்வ அதிகாரத்தையும் தன்னுடைய உள்ளங்கைக்குள் அடக்கிய தினத்தை புரட்சி தினம் என்று அறிவித் தார் அயூப்கான். இனிமேல் அயூப் வரைந்ததுதான் வட்டம். போட்டதுதான் சட்டம்.

ஒரு நாட்டில் ராணுவ ஆட்சி நடக்கிறது என்றால், மக்களுக்கு எத்தனை கெடுபிடிகள் இருக்கும்... எத்தனை நெருக்கடிகள் இருக்கும் என்பதற்கு வெகு நெருக்கமான உதாரணம் சொல்லவேண்டும் என்றால், அது சாட்சாத் அயூப்கானின் ஆட்சிக் காலம்தான். பாகிஸ்தான் மக்கள் பார்த்த முதல் ராணுவ ஆட்சியாளர் அயூப்கான்.

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது மக்களுக்கு. இந்த மனிதர் என்ன செய்யப் போகிறார்? மிலிட்டரி மனிதர், ஆட்சியை நிர்வகிக்க முடியுமா? ராணுவ ஆட்சியில் எல்லா உரிமைகளும் குழிதோண்டிப் புதைக்கப்படும் என்கிறார்களே, உண்மையாக இருக்குமா? அறுபத்தெட்டு சந்தேகங்கள். ஆயிரத்தெட்டு குழப் பங்கள். எல்லாவற்றுக்கும் பதில் சொல்வதற்கு அயூப் தயாராக இல்லை. வெண்ணெய் தடவிய வெறும் பேச்சில் அவருக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. செயல். அது மட்டும்தான் அவருக்கு முக்கியம். அதிகம் பேசுபவர்கள் அத்தனை பேருக்கும் கடிவாளம் வழங்கும் திருவிழா ஒன்றை நடத்த ஆசைப்பட்டார் அயூப்.

அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், மாணவர்கள் ஆகியோரைக் குறிவைத்து அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது!
'பகிரங்கமாகவோ ரகசிய அறைகளிலோ அமர்ந்து கதா காலட்சேபம்கூட செய்யக்கூடாது. செய்தால் தொலைத்துவிடுவேன் தொலைத்து!'
அடுத்த குறி கடத்தல்காரர்கள். கடத்தல் என்றால் உப்பு, புளி, மிளகாய் இல்லை. போதை வஸ்துகள் மது வகையறாக்கள். முக்கியமாக, இளம் பெண்கள். சகட்டுமேனிக்கு செயல்பட்டுவந்த சமூக விரோதிகளைக் கண்டவுடன் கைதுசெய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தார் அயூப்கான்.

இவ்வளவு ஏன்? பொது இடங்களில் சிறுநீர் கழித்தால்கூட ஒரு வருடம் கம்பிக்குப் பின்னால் கவிதை பாட அனுப்பப்பட்டனர். ஒழுங்காக வேலை செய்யாமல் நாற்காலி தேய்த்துக்கொண்டிருந்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. காவல் துறையும் ராணுவமும் கால்களில் சக்கரங் களைக் கட்டிக்கொண்டு சுற்றிவந்தன.

அயூப்கானின் ஆத்திரத்துக்குப் பாத்திரமானவர் களில் முக்கியமானவர்கள் ஊழல் செய்த அரசியல்வாதிகள். ஏழாயிரம் பேர் கொண்ட பெரும் பட்டியல் தயாரிக்கப்பட்டது. வெறுமனே வேலைநீக்கம் செய்தால், வேலைக்கு ஆகாது. வேறு வழியில் கட்டம்கட்டவேண்டும் என்று விரும்பினார். அப்போது உருவானதுதான் ணிஙிஞிளி. அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைத் தகுதியிழக்கச் செய்யும் சட்டம். அத்தனை பேரையும் வீட்டுக்கு அனுப்புங்கள். ஏழு ஆண்டுகளுக்குத் தேர்தல் பக்கமே அவர்கள் தலை வைத்துப் படுக்கக் கூடாது. தடை!

'அவர் செய்கிற அத்தனை காரியங்களும் வெகுஜன நன்மைக்காக மட்டும்தான், அரசியலுக்கும் அதற்கும் தூரத்து சம்பந்தம் கூட கிடையாது!' என்றே பிரசாரம் செய்யப்பட்டது. இதனால் அயூப்கானை சர்வாதிகாரியாகப் பார்க்காமல் பரோபகாரி யாகவே பாகிஸ்தான் மக்கள் பார்த்தனர். தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அயூப்கான் நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்த முக்கியமான வார்த்தை வழிகாட்டுதலுடன் கூடிய ஜனநாயகம். ஆங்கிலத்தில் Guided Democracy..

உரிமைகள் எல்லாம் அளவுக்கு அதிகமாக இருந்தால்... மக்களும் அரசியல்வாதிகளும் தினவெடுத்துத் திரியத் தொடங்கிவிடுவார்கள் என்பதால், எல்லோரையும் அடக்கிவைக்கும் முகமாக அவர் சில அஜெண்டாக்களை வகுத்திருந்தார். அவர் மனத்துக்கு எது சரியென்று தோன்றுகிறதோ... அதுதான் ஜனநாயகம். அவரால் வழிகாட்டப்பட்ட ஜனநாயகம். ராணுவத்தில் மிடுக்கு குறையாமல் செயல்பட்ட மனிதருக்கு அரசியலில் மதிப்பு குறையாமல் இருப்பதற்கு இந்த 'ராணுவம் வழி ஜனநாயகம்' பேருதவியாக இருந்தது.
அதே சமயம் தன்னை ராணுவ ஆட்சியாளர் என்று எல்லோரும் சொல்வது அவருடைய மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. தன் மீதிருக்கும் இந்தக் கறையைக் களைய அவர் தேர்ந்தெடுத்த ஆயுதம், தேர்தல். பெரிய மெனக்கெடல் எதுவும் இல்லை. நாடு தழுவிய அளவில் எண்பதாயிரம் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அத்தனை பேரிடமும் ஒரே கேள்வி. அதிபர் அயூப்கான் மீது நம்பிக்கை இருக்கிறதா? 'ஆம்... இல்லை' என்ற இரண்டே வாய்ப்புகள். கிட்டத்தட்ட 96 சதவிகிதம் பேர், 'ஆமாம் சாமி!' போடவே ஜாம் ஜாமென்று ஜூன் 8, 1962-ல் அதிபர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார் அயூப்கான். நாற்பத்துநான்கு மாதங்களாக அமலில் இருந்த ராணுவச்சட்டத்தை வாபஸ் பெற்றார் அயூப்கான். புதிய அமைச்சரவையையும் உருவாக்கினார்.

தன்னுடைய ஆட்சிக்காலம் முழுக்க ராணுவத்தை வார்த்தெடுப்பதில் அதிகம் மெனக்கெட்ட அயூப்கான், ஒவ்வொரு ராணுவ வீரரையும் ஊக்கப்படுத்தினார். அவ்வப்போது எல்லைப் பக்கம் சென்று வீரர்களிடம் வீர உரை நிகழ்த்தினார். தோளில் கைபோட்டுப் பேசி உற்சாகப் படுத்தினார். என்னென்ன ஆயுதங்கள் வேண்டும் என்று பார்த்துப் பார்த்து விசாரித்தார். அவற்றை உடனடியாக வரவழைத்துத் தரவும் ஏற்பாடு செய்திருந்தார். விளைவு, ராணுவம் அயூப்கானின் காலையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது.

ஒரு பக்கம் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி ஜெகஜ்ஜோதியாக சென்று கொண்டிருக்க... இன்னொரு பக்கம் இந்தியா-சீனா இடையே உருவான எல்லை மோதல் யுத்தமாக வெடித் திருந்தது. அவ்வளவுதான், விவாதம் தொடங்கிவிட்டது பாகிஸ்தானில்.

'இந்தியாவைப் பழிவாங்கக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு இது. பயன்படுத்திக்கொள்ளுங்கள் அயூப்!' படபடத்தனர் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் யோசிக்கத் தொடங்கினார், அயூப்கான்!

No comments: