Thursday 19 February, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (9)

**************
1st February
*************


சண்டைக்கோழிகள் தயாராகின்றன!

பிரிவினை பற்றிய விவாதங்கள் இந்தியாவில் சூட்டைக் கிளப்பிக் கொண்டிருந்த காலகட்டம் அது. தூங்கும்போது கூட, 'பாகிஸ்தான்... பாகிஸ்தான்!' என்றுதான் முனகிக் கொண்டிருந்தார் முகமது அலி ஜின்னா. கல்லூரி, கருத்தரங்கு என்று எது கிடைத்தாலும் சரி... அத்தனை வாய்ப்புகளையும் பிரிவினைக் கருத்தை வலியுறுத்தப் பயன்படுத்துவதில் அதீத முனைப்பு அவருக்கு. ஒரு நாள் முஸ்லிம் மாணவர்கள் சிலரை சந்தித்தார். கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் ஜின்னாவிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

'ஒருவேளை இந்தியாவிலிருந்து பிரிந்து, பாகிஸ்தான் என்ற தனிதேசம் உருவாகிவிடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஏதேனும் ஒரு மூன்றாவது நாடு இந்தியா மீது யுத்தம் தொடுத்தால், பாகிஸ்தான் ராணுவம் என்ன செய்யும்?'

பிரிவினை தொடர்பாகப் பெரிய பெரிய தலைவர் களுடன் எல்லாம் காரசாரமாக விவாதித்து ஆதரவைத் திரட்டிக் கொண்டிருந்த ஜின்னாவுக்கு, இந்தக் கேள்வி ஆகப்பெரிய தர்மசங்கடத்தைக் கொடுத்தது. எத்தனை நுட்பமான கேள்வி இது? என்ன பதில் சொல்வது? சட்டென்று சுதாரித்துக்கொண்டு ஜின்னா அளித்த பதில் மிக முக்கியமானது.
'எதிரிகளைத் தோற்கடிக்க, பாகிஸ்தானிய வீரர்கள் இந்திய ராணுவத்துடன் கைகோத்துச் செயல் படுவார்கள்!'

ஜின்னாவின் பதிலில் இன்னொரு முக்கியமான சங்கதியும் ஒளிந்திருக்கிறது. அன்று இருந்த சூழலில் மூன்றாவது எதிரி பற்றிய சிந்தனைதான் இரு தேசத்து மக்களுக்கும் இருந்ததே தவிர, இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் சண்டையிட்டுக்கொள்ளும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை! குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள். ஆனால், யதார்த்தம்?

பிரிவினை முடிந்த கையோடு... இந்தியா மீதே யுத்தம் நடத்த, தன்னுடைய ராணுவத்துக்கு உத்தரவு பிறந்தது. ஐ.நா-வின் தலையீட்டுக்குப் பிறகே யுத்தம் முடிவுக்கு வந்தது. இடைப்பட்ட காலத்தில் ஜின்னாவும் மறைந்துவிடவே, நாட்டைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பிரதமர் லியாகத் அலிகானிடம் வந்தது.

நாட்டைக் காப்பாற்றவேண்டும் என்றால்? வேறென்ன... ராணுவத்தை பலப்படுத்தினால் ஆச்சு. இதுதான் லியாகத் அலிகானின் சித்தாந்தம். ஆகவேண்டிய காரியங் களைச் செய்யத் தொடங்கினார். முக்கியமான விஷயம். பாகிஸ்தான் ராணுவம் இந்த நொடியில் இருந்து வளர்ச்சிப் பாதை யில் பயணம் செய்ய இருக்கிறது. உள்நாட்டுக்குள் அதிரடிப் புரட்சிகளை நடத்தி, ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தையும் தன்னுடைய உள்ளங்கையில் அடக்கப்போகிறது. அதுவும் அடிக்கடி, பல ராணுவ ஆட்சியாளர்களை உருவாக்கத் தயாராகியிருக்கிறது. அணுகுண்டுகளை உருவாக்கி உலக நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்போகிறது.

பாகிஸ்தான் ராணுவத்தின் விஸ்வரூப வளர்ச்சியைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அதன் நதிமூலம் பற்றிய புரிதல் வெகு அவசியம்!
ஜூன் 3, 1947. பிரிட்டிஷ் இந்தியா என்ற மிகப்பெரிய தேசம் சுதந்திர இந்தியா, சுதந்திர பாகிஸ்தான் என்று இரு தேசங்களாகப் பிரிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது இந்தத் தேதியில்தான். பிரிவினை என்றால் வெறும் நிலப்பரப்புக்கு மாத்திரம் இல்லை! மனிதர்களுக்கு... கால்நடைகளுக்கு... சொத்துகளுக்கு... சமஸ்தானங்களுக்கு... முக்கியமாக ராணுவத்துக்கு. ஒவ்வொன்றையும் நாள் குறித்துத்தான் பக்குவமாகப் பங்கு பிரித்துக் கொடுத்தார்கள் பிரிவினைக் குழுவினர். ராணுவப் பிரிவினைக்கு அவர்கள் குறித்த தேதி ஜூன் 30, 1947.

உண்மையில் ராணு வத்தை இரண்டாகப் பிரிப் பதில் மவுன்ட் பேட்டன் உள்ளிட்ட பலருக்கும் விருப்பம் இல்லை. மற்ற அனைத்தையும் பிரித்து விடலாம். பிரச்னை இல்லை. ஆனால், ராணுவத்தை மட்டும் பொதுவில் வைத்துவிடலாம். இருவரில் யாருக்கு ஆபத்து என்றாலும் மத்திய ராணுவம் களத்தில் இறங்கும். அது தான் இரண்டு தேசங்களுக்கும் நல்லது. முக்கிய மாக பாகிஸ்தானுக்கு. இதுதான் முதலில் வைக்கப்பட்ட யோசனை. ஆனால், ஜின்னாவுக்கு இந்த யோசனை சுத்தமாகப் பிடிக்கவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டார்.

'இந்தியா என்பது நன்கு கட்டமைக்கப்பட்ட தேசம். ஆனால், பாகிஸ்தான் புத்தம் புதிய தேசம். பாதுகாப்பு என்பது அத்தியாவசியம். அதைப் போய் அடுத்தவரிடம் கடன் வாங்குவது அல்லது பொதுச்சொத்தில் இருந்து கொஞ்சம் எடுத்துக்கொள்வது என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. அதில் எங்களுக்கு விருப்பமும் இல்லை. முதலில் ராணு வத்தைப் பிரித்துக்கொடுங்கள்!' அழுத்தந்திருத்தமாகச் சொல்லிவிட்டார் ஜின்னா.
64:36 என்ற விகிதாசாரத்தில் ராணுவத்தைப் பிரிப்பது என்று முடிவானது என்பதைக் கடந்த அத்தியாயத்தில் பார்த்துவிட்டோம். இப்போது கொஞ்சம் விலாவாரியாகப் பார்க்கலாம். மொத்தப் படைகளையும் ஒன்றாகக் கூட்டி, பெருக்கி, வகுத்து, இறுதியாகக் கவச வாகனப் படையில் (Armored Regiment) இருந்து ஆறு பிரிவுகளும், பீரங்கிப் படையில் (Artillery Regiment) இருந்து எட்டு பிரிவுகளும், காலாட்படையில் (Infantry Regiment) இருந்து எட்டு பிரிவுகளும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டன. இந்தியாவுக்குக் கவச வாகனப்படையில் இருந்து நாற்பது பிரிவுகள், பீரங்கிப் படையில் இருந்து நாற்பது பிரிவுகள், காலாட்படையில் இருந்து இருபத்தொரு பிரிவுகள் ஒதுக்கப்பட்டன.
பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவத்தில் இருந்த ராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை 11,800. ராணுவ வீரர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சம். இவர் களை எல்லாம் எவ்வளவு பிரிப்பது என்று ஏற்கெனவே முடிவாகிவிட்டது. ஆனால், எதன் அடிப்படையில் பிரிப்பது?

குட்டையானவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்குப் போங்கள், நெட்டையானவர்கள் எல்லாம் இந்தியாவில் இருங்கள், தாடி வைத்தவர்கள் எல்லாம் இந்தியாவுக்கு... முழுக்க மழித்தவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்கு என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வது சாத்திய மில்லையே! பலத்த யோசனைக்குப் பிறகு விண்ணப்பம் கொடுக்கும் யோசனை வந்தது. நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள்? இந்தியாவுக்கா அல்லது பாகிஸ் தானுக்கா? விண்ணப்பத்தில் இருக்கும் பெட்டியில் குறித்துக்கொடுங்கள். அதன் அடிப்படையில் பரிசீலிக் கப்படும்.

பொதுமக்கள் நிலையைவிட ராணுவ வீரர்களின் நிலைமை ரொம்பவே தர்மசங்கடமாகிவிட்டது. நேற்று வரை இந்தியா ஜிந்தாபாத் என்று கூறிக் கொண் டிருந்தவர்கள் எல்லாம், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொல்ல வேண்டியிருக்கும். முந்தைய நாள் வரை தோளோடு தோள் உரசிப் பழகிய நண்பர்களுடன் நாளை எல்லையில் ஆயுதத்துடன் மோத வேண்டியிருக்கும். உணர்ச்சிகரமான மனப்போராட்டம் அது.

விண்ணப்பத்தோடு மனத்தையும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு ஆளுக்கொரு பெட்டியில் குறியிட்டுக் கொடுத்தனர். விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தகவல்கள் அனுப்பப்பட்டன. எல்லோரும் இடம் பெயர்வதற்குத் தயாராகினர். இதில் பாகிஸ்தானுக்குக்கென்று ஒதுக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை நான்காயிரம். ஆனால், அவர்களில் 2,300 பேர் மட்டுமே தயார் நிலையில் இருந்தனர். மற்றவர்களை வரவழைக்க முடியவில்லை அல்லது முடிவை மாற்றிக்கொண்டனர்.

இடைவெளி... பூர்த்தி செய்யவேண்டும். அதுவும் உடனடியாக. அவகாசம் அதிகமில்லை. பேசாமல் பிரிட்டிஷ் படையினரை சேர்த்துக்கொள்ளலாம் என்றார் மவுன்ட் பேட்டன். யோசிக்கத் தொடங்கினார் ஜின்னா. தனக்குரிய 'சொத்தில்' குந்துமணி அளவைக்கூட விட்டுவிட்டுப் போவதில் அவருக்கு விருப்பமில்லை. கிடைக்கிற வாய்ப்பை எதற்காக ஒதுக்கவேண்டும். பிரிட்டிஷ் படையினர் நம்முடன் இருப்பது ஒரு வகையில் நல்லதுதான். புன்னகை ததும்ப தலையசைத்தார் ஜின்னா.

எத்தனை அதிகாரிகள் குறைவாக இருந்தனரோ அந்த எண்ணிக்கைக்கு பிரிட்டிஷ் அதிகாரிகள் பாகிஸ்தான் ராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். ராணு வத்துக்கு ஆள்களைக் கடன் வாங்குவதில் தனக்கு விருப்பமில்லை என்று சொல்லிக்கொண்டிருந்த ஜின்னா, இந்த விஷயத்தில் சமரச ஆடையை அணிந்துக்கொண்டதாக இந்தியத் தலைவர்கள் கிசுகிசுத்தனர்.

எல்லாம் பிரித்தாகிவிட்டது. மவுன்ட் பேட்டனுக்கு திருப்தி. நேருவுக்கு திருப்தி. ஜின்னாவுக்கு மட்டும் லேசான அதிருப்தி, அந்த 64:36 ஃபார்முலாவில். ஆனாலும், தனிக்குடித்தனம் வந்ததே பெரிய விஷயம் என்பதால், இது விஷயமாக அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை அவர். நல்லது. ராணுவ வீரர்களை எப்படி சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்புவது? இங்குதான் அடுத்த சிக்கல் தொடங்கியது.

இரு தேசங்களுக்கும் ஒதுக்கப்பட்ட ராணுவத்தினர் நாடு முழுக்க விரவிக் கிடந்தனர். லாகூருக்குக் கிளம்ப வேண்டியவர் கல்கத்தாவில் உட்கார்ந்திருந்தார். டெல் லிக்கு வரவேண்டியவர் இஸ்லாமாபாத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். எல்லோருக்கும் தகவல் அனுப்பி, அவர்களை எல்லாம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பிவைப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது.

ரயில். அப்போதைக்கு உருப்படியாக இருந்த போக்குவரத்து வாகனம். ஏற்கெனவே, இந்துக்களும் பஞ்சாபிகளும் முஸ்லிம்களும் இந்தியாவுக்கும், பாகிஸ் தானுக்கும் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். கூடுதலாக ராணுவ வீரர்களும் அந்தக் கோதாவில் குதித்தனர். வீரர்கள் என்றால், அவர்களோடு சேர்த்து ஆயுதங்களும்தான். ஒவ்வொரு ரயிலும் மனிதர்களையும் மனிதர்களைக் கொல்லும் ஆயுதங்களையும் சுமந்து கொண்டு இரண்டு தேசங்களுக்கும் இடையே கடமை யாற்றிக் கொண்டிருந்தன.
கண்ணீரோடு ரயிலேறிய வீரர்கள் அவரவருக்கான இடத்தில் இறங்கியபோது, கண்கள் காய்ந்து கிடந்தன. தண்ணீர் வற்றியிருந்தது. ஆசுவாசப்படுத்திக் கொள் வதற்கும் அசதியைப் போக்கிக் கொள்வதற்குமே பல மாதங்கள் பிடித்தன. திடீரென ஆட்சியாளர்களுக்கு காஷ்மீர் ஆசை வந்து யுத்தத்துக்கு வழிவகை செய்து விட்டது.

யுத்தத்துக்கு வீரர்கள் உடல்ரீதியாகத் தயார் என்றாலும்கூட மனரீதியாக ஒடுங்கிப் போயிருந்ததை கவர்னர் ஜெனரல் ஜின்னாவும் பிரதமர் லியாகத் அலிகானும் நன்றாகவே உணர்ந்திருந்தனர்.
அதனால்தான், (முன்பு கூறியிருந்தது போல்) ஆதிவாசிகளை ரகசியமாகக் காஷ்மீருக்கு அனுப்பும் யோசனைக்கு சம்மதம் தெரிவித்திருந்தனர். ஆனால், நீண்டகால நோக்கில் ஆதிவாசிகளை நம்புவதும் பயன்படுத்துவதும் நல்லதல்ல. அதைவிட அவமான கரமான விஷயம் வேறு எதுவுமில்லை. உடனடியாக ராணுவத்தை மேம்படுத்தும் யோசனைகளை வரவேற்கத் தொடங்கினார் லியாகத் அலிகான்.

பாகிஸ்தான் ராணுவத்துக்கென்று பிரத்தியேகமாக ஆள் சேர்க்கும் படலத்தை நடத்தும் யோசனை லியாகத் அலிகானை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. 'வாருங்கள் இளைஞர்களே. நாட்டைக் காக்கும் ஆர்வம்கொண்ட அத்தனை இளைஞர்களையும் வாரி அணைத்துக் கொள்ள ராணுவம் தயாராக இருக்கிறது!' என்றார்.

காஷ்மீருக்காக நடத்தப்பட்ட யுத்தத்தில், பாகிஸ் தானுக்குக் கிடைத்தது தோல்வி என்று உள்ளுக்குள் லியாகத் அலிகான் நினைத்துக் கொண்டிருந்தாலும் வெற்றி என்றுதான் வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய பேச்சுகளில் எல்லாம் இளைஞர்களை ராணுவத்துக்கு வளைத்துப் போடும் வியூகம் அப்பட்டமாகத் தெரிந்தது. வசீகரம் நிறைந்த அவருடைய பேச்சுக்குக் கட்டுப்பட்டு ஏராளமான இளைஞர்கள் ராணுவத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். வந்தனம். வந்தனம்.

ராணுவத்தின் பலம் கணிசமான எண்ணிக்கையில் உயர்ந்துகொண்டிருந்தது. ஆனால், இது போதாது. இன்னும் கூடுதலாக முன்னேறவேண்டும். இன்னும்... இன்னும் வேகமாக முன்னேறவேண்டும். இது சாத்தியப்பட வேண்டுமென்றால் 'ப' வைட்டமின் தேவை. பணத்துக்கு என்ன செய்யலாம்? பிரதமர் கையைப் பிசைந்து கொண்டிருந்தபோது ராணுவத்தின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. யாராக இருக்கும்..? திறந்து பார்த்தார்.

அமெரிக்கா!

No comments: