Thursday 19 February, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (8)

****************
28 January
****************


ராணுவம் பராக் பராக்!

மீசையை முறுக்கிக்கொண்டு முதலில் கிளம்பியது சீக்கியப் படைகள் (Sikh Regiment). ஸ்ரீநகர் விமான நிலையம் எதிரியின் கைகளில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் சிக்கிவிடக் கூடாது. பிடித்தால் மீட்பது கடினம். விரைந்துசென்று அரண் அமைக்கவேண்டும். இதுதான் சீக்கியப் படையின் திட்டம்.
நினைத்தபடியே சுற்றி வளைத்துவிட்டனர். பாரமுல்லாவைப் புரட்டித் தள்ளிவிட்டு ஸ்ரீநகர் விமான நிலையம் நோக்கி முனைப்புக் குறையாமல் வந்துகொண்டிருந்தது பதான்களின் படை.

'வாருங்கள் வாருங்கள்... வந்து வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டு இருக்கிறோம்!' முஷ்டியை உயர்த்திக்கொண்டு தயாராக இருந்த இந்திய ராணுவம், பதான்கள் மீது மூர்க்கத்தனமாகத் தாக்குதலை நடத் தியது. துளியும் எதிர்பாராத தாக்குதல், ஒன்றுமே புரியவில்லை பதான்களுக்கு. 'எப்படிவந்தார்கள் இவர்கள்? யார் மூலம் செய்தி கசிந்தது? தாக்குதல் இத்தனை நேர்த்தியாக இருக்கிறதே?' சுதாரிப்பதற்குள் சுருண்டு விழத் தொடங் கியது பதான் படை. விளைவு, விமான நிலையத்தைக் கைப்பற்றும் பதான்களின் கனவு பிசுபிசுத்தது.

முறைப்படி களமிறங்கிவிட்டது இந்திய ராணுவம். ஆனால், பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்? ஜின்னா பலத்த யோசனையில் மூழ்கியிருந்தார். கவர்னர்
ஜெனரல் எவ்வழியோ, பிரதமரும் அவ்வழி. லியாகத் அலிகானின் கைகள் அவருடைய மோவாய்க்கட்டையைத் தாங்கிப் பிடித்திருந்தன. பார்வையாளர்கள். வெறும் பார்வையாளர்கள். வேறொன்றும், அப்போது செய்யமுடியாத சூழல்!

ஏன்? இதற்கு பதில் வேண்டும் என்றால், கொஞ்சம் பிரிவினைப் பக்கம் எட்டிப்பார்க்க வேண்டியது அவசியம். 'மேற்படி பிரிட்டிஷ் இந்தியா இன்று முதல் சுதந்திர இந்தியா, சுதந்திர பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது' என்று அறிவிக்கப்பட்டது அல்லவா... அப்போது நிலப்பரப்புகள் எப்படி இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டனவோ... அதுபோல பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவமும் சுதந்திர இந்தியாவுக்கும் சுதந்திர பாகிஸ்தானுக்கும் தனித்தனியே பிரிக்கப் பட்டன.

மொத்தமுள்ள ராணுவத்தில் 64 சதவிகிதம் இந்தியாவுக்கு. மீதமுள்ள 36 சதவிகிதம் பாகிஸ்தானுக்கு. இதுதான் பிரிவினை ஃபார்முலா. பலத்த வற்புறுத்தலுக்குப் பிறகுதான் பாகிஸ்தான் இந்தப் பங்கீட்டுக்கு சம்மதம் தெரிவித்திருந்தது. பாகிஸ்தான் என்றால் ஜின்னாதான். இருப்பினும், போர் என்று வந்ததும் வீரர்களை ஓரிடத்தில் திரட்டி வருவதற்கு ஆட்கள் இல்லை. பயிற்சி கொடுப்பதற்கு பக்குவமான நபர்கள் இல்லை. ஒருங்கிணைக்க உருப்படியான அதிகாரி ஒருவர் இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டை. எல்லா இடங்களிலும் வெற்றிடம்.

பெரிய அளவிலான ஆயுதபலமும் இல்லை. இருக்கின்ற ஆயுதங்களை எல்லாம் பதான்களுக்குப் படையல் செய்தாகிவிட்டது. 'அவசரப்பட்டு விட்டோம்'. புரிந்துபோனது ஜின்னாவுக்கு. அதனால் என்ன? பதம் குறையாமல் பார்த்துக்கொள்வதற்கு பதான்கள் இருக்கும்போது எதற்காக வீண்கவலை? தன்னை வலுவில் தேற்றிக்கொண்ட ஜின்னா மெள்ளப் பெருமூச்சுவிட்டார்.
பதான் படையினர் மீது ஜின்னா, லியாகத் அலிகான் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் வைத்திருந்த நம்பிக்கை அபரிமிதமானது. அதற்குப் பாத்திரமாகும் முயற்சியில் பதான்களும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மெய்யைக் கொஞ்சம் வருத்தினாலும் முயற்சிகள் கண்டிப்பாகக் கூலி தரும் இல்லையா? பதான்களின் முயற்சிகளுக்குப் பரிசாக கில்கிட் அவர்கள் வசம் அடிபணிந்தது.

அதற்கு மிகவும் உதவியாக இருந்தது, கில்கிட் பகுதியில் இருக்கும் சாரணர் படை. துணிச்சலுடன் களமிறங்கிய பதான் படையினர், கில்கிட் பகுதியில் அதிரடித் தாக்குதல் நடத்தி அங்கிருந்த ஹரிசிங்கின் படையினரை அடித்துவிரட்டி விட்டு கில்கிட்டைக் கைப்பற்றினர். வெற்றி. ஸ்ரீநகர் விமான நிலையம் கிடைக்காத வருத்தம் இப்போது போன இடம் தெரியவில்லை.
உற்சாகம் தலைக்கேறிவிட்டது பதான் படையினருக்கு. மதிப்பு குறையாமல் தாக்குதலில் ஈடுபட்டனர். மிர்பூர் என்ற இடத்தில் தென்பட்ட இந்துக்கள் அத்தனை பேரும் தயவுதாட்சண்யம் இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டனர். பதான்களின் கைங்கர்யம். விளைவு, மிர்பூரும் பதான்களின் பாக்கெட்டுக் குள் சென்று விட்டது.

இப்போது பதான்களுக்குத் தோள்கொடுக்கக் கணிசமான எண்ணிக்கையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவியிருந்தனர். இருவருடைய கூட்டு முயற்சியால் தாக்குதலின் வீரியம் அதிகரித்தது. அதற்கு சாட்சியாக ஜாங்கர் என்ற பகுதி அவர்கள் வசம் சென்றது.
தொடர்ந்து வெற்றி கிடைத்த உற்சாகத்தில், ஊரி நகரத்தின் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அது அத்தனை சுலபமானதாக இல்லை. இந்திய ராணுவம் வளைத்து வளைத்து எதிர்த்தாக்குதல் கொடுத்ததால் மண்டை காய்ந்துவிட்டது பதான்களுக்கு. இருப்பினும், ஊரியின் முக்கியப் பகுதிகள் பதான்கள் வசம் சென்றன.

நிலைமை கைமீறிக் கொண்டிருப்பது புரிந்து விட்டது இந்திய ராணுவத்துக்கு. சுதாரித்தே தீரவேண்டும். இல்லையென்றால், சர்வநாசம் சர்வநிச்சயம். பாகிஸ்தான் கூலிப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்ட பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியது இந்திய ராணுவம்.
இந்தியப் படையினரின் விஸ்வரூபத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஜாங்கரைப் பறிகொடுத்தது பதான் படை. அடுத்தடுத்து முழுவேகத் தாக்குதல் நடத்தியதில், நவம்பர் ஒன்பதாம் தேதி பாரமுல்லாவை மீட்டெடுத்தது. அடுத்த நான்காவது நாள் ஊரியையும் பதான்களிடம் இருந்து விடுவித்தது.
இங்கே எதுவும் செல்லுபடியாகாது என்று தெரிந்ததும் பாகிஸ்தான் கூலிப்படையும் அவர்கள் ராணுவமும் லே பிராந்தியத்துக்குச் சென்று கார்கிலை கைப்பற்றியது. அங்கிருந்த இந்தியப் படையினரால் கார்கிலை காப்பாற்ற முடியவில்லை. மாதக் கணக்கில் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
ஒரு இடத்தை அவர்கள் கைப்பற்றுவது... உடனே, இந்தியப்படை அதிரடியாகச் செயல்பட்டு அதை மீட்டெடுப்பது. இது தொடர்கதையானது. ஆனால், தொடர்வதில் இந்தியாவுக்கு விருப்பமில்லை. விரைவில் முற்றும் போடுவதில் ஆர்வம் செலுத்தியது. இத்தனைக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்த பெரும்பாலான முனைகளில் இந்தியாவின் கைகளே ஓங்கியிருந்தன.

இறுதியில் இந்தியா ஒரு முடிவுக்கு வந்தது. பேசாமல் விஷயத்தை ஐக்கியநாடுகள் சபையிடம் கொண்டுபோகலாம். இதுதான் பிரதமர் நேருவின் வாதம். ஆனால், சர்தார் வல்லபபாய் படேலுக்கோ அதில் துளியும் விருப்பமில்லை.

'ஒருவேளை காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. விசாரணை நடத்துகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். விசாரணை எப்படி நடக்கும்? காஷ்மீர் மீது பரிபூரண உரிமைகொண்ட இந்தியாவையும் கொஞ்சமும் உரிமை இல்லாத பாகிஸ்தானையும் சம அந்தஸ்தில் வைத்தே விசாரணை நடக்கும். இது அவமானம். தவிரவும் அநாவசியம். ஆகவே வேண்டாம்.' இது படேல் உள்ளிட்ட தலைவர்களின் வாதம். எல்லாவற்றையும் நிதானமாகக் கேட்டு உள்வாங்கிகொண்ட நேரு, தனக்கு எது சரியென்று தோன்றியதோ அதைத்தான் செய்தார்.

'எங்களுடன் முறைப்படி இணைந்த காஷ்மீர் பிராந்தியத்துக்குள் பாகிஸ்தான் ராணுவத்தின் பரிபூரண ஆசீர்வாதம் பெற்ற ஆசாமிகள் நுழைந்து கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர். காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலமும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் கள் அங்கிருந்து வெளி யேற வேண்டும். கூலிக்கு வந்து குழப்பம் ஏற்படுத்தும் அத்தனை பேரும் வெளியேற வேண்டும். ஆவன செய் யுங்கள்!'
நேருவின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய நாடுகள் சபை விசாரணை தொடங்கியது. விசாரணை என்றால், அதற்கு தனியே கமிஷன் ஒன்று போடுவது பாரம்பரியப் பழக்கம். அதன் படி, இந்தியா-பாகிஸ்தானுக்காக ஐ.நா ஆணையம் உருவாக்கப்பட்டது. மேற்படிப் பகுதிகளுக்கு அதன் உறுப்பினர்கள் நேரில் செல்வார்கள். என்ன நடக்கிறது என்பதை கவனித்து உள்ளது உள்ளபடி அறிக்கை தயார் செய்து கொடுப்பார்கள். இதுதான் நடைமுறை.
அதன்படியே எல்லாம் நடந்தன. பாகிஸ்தான் ஆதரவுபெற்ற கூலிப்படையினர் உடனடியாக காஷ்மீர் பிராந்தியத்தைவிட்டு வெளியேறவேண்டும் என்று உத்தரவு வந்தது ஐ.நா-விடம் இருந்து. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 13, 1948 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'இரு தரப்பும் யுத்தத்தை நிறுத்திக்கொள்ளுங்கள். காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கையை எடுங்கள்.' இதுதான் தீர்மானத்தின் சாரம்.

போர்நிறுத்தம் என்பது அதிகாரபூர்வமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே நடைபெறும் யுத்ததுக்கு மாத்திரமே. ஆனால், பாகிஸ்தான் ஆதரவுப்படையினர் தங்களுடைய வாலை சுருட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை. ஆகவே, அந்தக் காரியத்தை முடிக்கும் பணியில் இந்திய ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டது. மெள்ள மெள்ளக் கூலிப்படையினர் விரட்டி அடிக்கப்பட்டனர். இறுதியாக ஜனவரி 1, 1949 அன்று போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.

அதன் பின் காஷ்மீரை யார் எந்த அளவுக்கு ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தபோது, ஐந்தில் இரண்டு பங்கு காஷ்மீரை பாகிஸ்தான் கபளீகரம் செய்திருந்தது. மீதமுள்ள ஐந்தில் மூன்று பங்கே இந்தியாவுக்கு எஞ்சியது.

கொஞ்சம் புரியும்படி சொல்லவேண்டும் என்றால்... போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான அன்று எந்தப் படை எங்கு இருக்கிறதோ அதை அடிப்படையாக வைத்து எல்லைக்கோடு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி காஷ்மீரில் ஐந்தில் இரண்டு பங்கு பாகிஸ்தான் வசம் சென்றுவிட்டது. இதனை பாகிஸ்தான் அரசு 'ஆஸாத் காஷ்மீர்' என்று அழைக்கிறது. ஆனால் அதனை இந்தியா, 'பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர்' (Pakistan Occupied Kashmir) என்கிறது. சுருக்கமாக PoK.

ஆக, தனிக்குடித்தனம் போன சூடு குறைவதற்குள் யுத்தம் நடத்தியாகிவிட்டது. நேற்று வரை காஷ்மீரில் காணிநிலம்கூட சொந்தமில்லாத நிலையில், தற்போது காஷ்மீரில் கொஞ்சம் நிலம் கிடைத்திருக்கிறது. நல்லது. ஆனால், அது நிஜமான வெற்றியா? இல்லை... நிச்சயமாக இல்லை! கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் பல ஓட்டை உடைசல்கள் தென்பட்டன.
இந்தியாவுடன் நேரடி யுத்தமே செய்திருக்கலாம். செய்யவில்லை. காரணம், நினைத்த மாத்திரத்தில் வீரர்களை ஒன்றுதிரட்ட முடியவில்லை. முக்கியமாக யுத்தம் நடத்தும் அளவுக்கு அவர்கள் வசம் தன்னம்பிக்கை இல்லை. இல்லாவிட்டால், போயும் போயும் கூலிப்படையை நம்பியா அனுப்பியிருக்க முடியும்? ஆகவே, கிடைத்திருப்பது தோல்வி... பெரிய தோல்வி!

நிஜம் புரியத் தொடங்கியது பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு. மறுநொடியே பல கேள்விகள் மனதுக்குள் முளைத்தன.

'பாகிஸ்தான் என்ற தேசத்தை இனி இந்தியாவிடம் இருந்து எப்படிப் பாதுகாப்பது? இன்று ஐ.நா புண்ணியத்தில் தப்பிவிட்டோம். நாளை? வலுவான ராணுவம் இல்லாவிட்டால்... கோழிக்குஞ்சை நசுக்குவது போல பாகிஸ்தானை நசுக்கிவிடுமே இந்தியா?' உதறல் எடுத்துவிட்டது பாகிஸ்தானுக்கு.
'இனி தாமதிப்பதில் அர்த்தமில்லை. நம்முடைய பாதுகாப்புக்கு நாம் முதலில் கட்டமைக்க வேண்டியது - பலம்பொருந்திய ராணுவத்தை' என்று முடிவெடுத்தார்கள்..!

No comments: